Skip to main content

உங்கள் மொபைலும் வெடிக்கலாம்! 

Published on 30/03/2018 | Edited on 31/03/2018

சில நாட்களுக்கு முன் வந்தது ஒரு செய்தி. 'ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கைபேசியை சார்ஜ் போட்டபடியே பேசியுள்ளார்.  சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைல் உபயோகித்ததால் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அந்தப் பெண்ணுக்கு கை, முகம், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், பின்னர் உயிரிழந்தார். அவர் பயன்படுத்தியது நோக்கியா 5233 கைபேசி' என்பது தான் செய்தி. நாம் ஏன் ஒடிசா வரை போக வேண்டும்? தமிழ்நாட்டில் கூட பல இடங்களில் மொபைல் போன் வெடிப்பு பற்றி செய்திகள் வாட்ஸ் ஆப்பிலும் செய்திகளிலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி என்னதான் காரணம் இந்த மொபைல் போன் வெடிப்பதற்கு? 
 

Mobile phone blast odisha



மொபைல் போன் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு சாதனம். இன்று ஐந்து விரல் கொண்ட மனிதர்களிடம் ஆறாவது விரல் என்ற நிலையையும் தாண்டி உடலின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மனித வாழ்வில் ஒன்றாகிவிட்ட இந்த மொபைல் போன்கள் 3G தாண்டி, 4G தாண்டி, 5Gக்கு காத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு பக்கம் மொபைல் போன்கள் வெடிப்பு, மொபைல் கதிர் வீச்சுகளால் மனித உடலுறுப்புகள் பாதிப்பு போன்ற செய்திகள் பரவலாக வந்துகொண்டே இருக்கின்றன. 'இந்த மொபைல் வெடிப்புகளெல்லாம் மொபைல் நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டை ஏற்படுத்தி பழிபோட்டு தொழிலை முடக்க சில விஷமிகள் பரப்பும் பொய்யான தகவல்கள்' என நிறுவனங்கள் கூறினாலும், மக்களால் பிராண்டட் மொபைல் என்று நம்பிக்கையுடன் வாங்கப்படும் கைபேசிகள் கூட சில நேரங்களில் வெடித்து விடுகின்றன. ஒடிசாவில் நடந்த மொபைல் வெடிப்புக்குக் கூட நோக்கியா கைபேசிகளை  விற்பனை செய்யும் எச்.எம்.டி குளோபல் நிறுவனம், 'நாங்கள் நோக்கியா நிர்வாகத்தை எடுத்துக்கொண்டதற்கு முன், இந்த மாடல் தயாரிக்கப்பட்டது' என்று விளக்கம் கூறியுள்ளது. 

100 முதல் 200 மில்லி ஆம்ப்ஸ் மின்சாரம்தான் மனித உயிர்சேதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தான மின்சார அளவாகும். ஆம்ப்ஸ் என்பது மின்சாரத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகு, A என்று குறிக்கப்படும். 100mAக்கு குறைவான மின்சாரம் வலியைக் கொடுக்கும். 10mAக்கு குறைவான மின்சாரத்தை உணர முடியும், ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. பொதுவாக கைபேசிகளில் 3.7 வோல்ட் லித்தியம்-அயன் பேட்டரிகள்தான் இருக்கும். ஐபோன் 6 மாடலில் 1810mA பேட்டரி இருக்கும். 


சாதாரணமாக நமது வீட்டில் சார்ஜ் செய்யும் பொழுது, ஒரு மணிநேரத்தில் 3.7 வோல்ட்டேஜில் 1.8 ஆம்ப்ஸ், அதாவது 180mA  (மில்லி ஆம்ப்ஸ்) மின்சாரம் கையாளப்படுகிறது. இதுவும் சரியான சாதனங்களைக் கொண்டு கையாளப்படவில்லையென்றால் மனித உயிர் சேதத்தை ஏற்படுத்தும் அளவிற்கும் அதிகமான மின்சார அளவுதான். இதுபோன்ற ஆபத்தான மின் அளவை போலியான, தரமில்லாத மின் சாதனங்களைக் கொண்டு கையாளும் பொழுது இது போன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றன.

 

mobile blast


மொபைல் போன்களை பொறுத்தவரையில் பின்வரும் நான்கு விஷயங்கள் தான் வெடிப்பதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
 

போலி பேட்டரி 
 
சந்தையில் போலியான, விலை குறைவான மொபைல் பேட்டரிகள் குவிந்துள்ளன. நம் பொருளாதார வசதிக்காக குறைந்த விலை பேட்டரிகளை வாங்கவே அதிகம் முன்வருகிறோம். அது மட்டுமல்லாமல் மொபைல் போன் மனிதனின் வாழ்வில் இன்றிமையாத ஒன்றாக உள்ளதை அறிந்த உற்பத்தி உலகம் ஒரு பக்கம் மக்களின் பொருளாதாரத்தை குறிவைத்து விற்பனையை பெருக்க வேண்டும் என்ற நோக்கில் தரமற்ற உதிரிபாகங்கள், கைபேசி சார்ந்த பிற பொருள்களை தயாரித்து சந்தைப்படுத்துகின்றன. இன்று காய்கறிகள் போல கூறுபோட்டு தெருக்களில் விற்படுகின்றன மொபைல் உதிரி பாகங்கள். இது போன்ற பேட்டரிகளை உபயோகிப்பதைத் தவிர்க்க  வேண்டும்.
 

தரமற்ற சார்ஜர் 

பேட்டரி போன்றே தரமற்ற சார்ஜர்களை பயன்படுத்துவதும் கைபேசிகள் வெடிக்க காரணமாகும். புதிதாக கைபேசி வாங்கும் பொழுது  கொடுக்கப்பட்ட சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும். சந்தையில் கிடைக்கும் ஏதோ ஒரு சார்ஜரை வாங்கி உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் அதில் மின் பகிர்மான அளவுகளின் மாறுதல் மற்றும் குறைந்த தரம் போன்றவற்றால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டால் சார்ஜர் மூலமாக மொபைல் வெடிக்க வாய்ப்புகள் அதிகம். இன்று மலிவு விலையில் குறைந்த நேரத்தில் விரைவில் சார்ஜ் ஏறும் சார்ஜர்கள் பயங்கரமான பெயர்களில் விற்கப்படுகின்றன. அப்படி வாங்கும்போது, கேரண்டீ இல்லாமல் போவது சார்ஜருக்கு மட்டுமல்ல நமது உயிருக்கும்தான்.
 

நம்மால் கொடுக்கப்படும் அழுத்தம் 

சிலர் கைபேசியை பேண்ட்டின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வண்டி சீட்டில் அமரும்போது அதிக அழுத்தம்  கொடுக்கப்படுகிறது  என்பதை மறந்து விடுகின்றனர். கைபேசிக்கு நாம் கொடுக்கும் அழுத்தம் கூட அது வெடிக்கக் காரணமாகும். தூங்கும்பொழுது சிலர் படுக்கையிலேயே கைபேசியை பயன்படுத்திவிட்டு அப்படியே தூங்கிவிடுவர். பின்பு, உருண்டு புரண்டு படுக்கும் பொழுது நம் உடலுக்குக் கீழ் அல்லது தலையணைக்குக் கீழ் அதிக அழுத்தத்திற்கு உட்படும்போது, இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். எனவே, கைபேசியில் வரும் அழைப்புகளால் நமக்கு எவ்வளவு அழுத்தம் ஏற்பட்டாலும், நாம் கைபேசிக்கு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 

இரவு முழுவதும் சார்ஜ் போடுவது மற்றும் சார்ஜ் போட்டுக்கொண்டே உபயோகிப்பது 

 

mobile while charging


  
இரவு நேரங்களில் கைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கிவிடுவது, பேட்டரி முழு அளவு சார்ஜ் ஏறிய பின்னரும் தொடர்ந்து மின் இணைப்பில் பலமணிநேரம் இருப்பது போன்றவை மொபைலையும் பேட்டரியையும் சூடாக்கும். மேலும் அதிக அளவில் கைபேசி வெடிப்பு சம்பவங்கள் சார்ஜ் போட்டுக் கொண்டே கைபேசி உபயோகிப்பதால்தான் நிகழ்ந்துள்ளன. எனவே சார்ஜ் போட்ட நிலையில் கைபேசி உபயோகிப்பதை முற்றிலும் குறைக்க வேண்டும். கைபேசி ஈரமாக உள்ள போது சார்ஜ் போடக்கூடாது. அதிகநேரம் மொபைல் பயன்படுத்தி சூடாக இருக்கும் பொழுது உடனே மொபைலுக்கு சார்ஜ் போகக்கூடாது. உப்பிய பேட்டரியை உடனே மாற்றி விட வேண்டும்.
 

பல திரைப்படங்களில் பார்த்திருப்போம், மொபைல் போனில் குண்டு வைத்து அனுப்புவதை. அது நமக்கே நேராமல் தவிர்க்க, குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டாம். அப்படி இருந்தால், மொபைல் குண்டு வெடிப்பைத் தவிர்க்கலாம்.
 

Next Story

பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Cybercrime alert For those charging in public places

பொதுமக்கள் தேவைக்காக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்காக பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டு உபயோகித்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம், மக்கள் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம். அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்த யு.எஸ்.பி போர்டுகளில், மோசடி கும்பல் யு.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

குண்டு வெடிப்பு சம்பவம்; மக்களிடம் கோரிக்கை வைத்த என்.ஐ.ஏ.

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
The NIA made a request to the people at bangalore hotel incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்தது. இதற்கிடையே, இந்த வெடிகுண்டு சம்பவத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில், பயங்கரவாதிகள் 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

The NIA made a request to the people at bangalore hotel incident

இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் புதிய புகைப்படங்களை என்.ஐ.ஏ வெளியிட்டு, மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரை அடையாளம் காண மக்களின் ஒத்துழைப்பு தேவை. அதனால், மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள நபர் குறித்த தகவல் தெரிந்தால் 08029510900, 8904241100 ஆகிய எண்களில் அழைக்கலாம். info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். உங்கள் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்’ என்று தெரிவித்து குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு தேசியப் புலனாய்வு முகமை கோரிக்கை வைத்துள்ளது.