Skip to main content

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

 Medicinal properties of betel nut - explained by Ayurvedic doctor Sugandan

 

வெற்றிலையின் சிறப்புகள் மற்றும் பயன்கள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்

 

வெற்றிலை என்பது மங்களகரமான ஒரு மூலிகை. இது மிளகு இனத்தைச் சேர்ந்த இலை. இதில் ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை என்று இருக்கிறது. நமக்குத் தெரியாத வெற்றிலையின் பயன்கள் நிறைய இருக்கின்றன. அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு தரக்கூடிய வரப்பிரசாதமாக வெற்றிலை விளங்குகிறது. வெற்றிலையில் உள்ள காம்பை நாம் நீக்கிவிட வேண்டும். கபம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வெற்றிலை மூலம் தீர்வு காண முடியும். வெற்றிலைச் சாறோடு தேன் சேர்த்து குழந்தைகளுக்கு நாம் கொடுக்கலாம். 

 

இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அனைத்து வயதினரும் வெற்றிலையை எடுத்துக்கொள்ளலாம். தொண்டைப்புண் மற்றும் இருதய நோய் இருப்பவர்கள் வெற்றிலை சாப்பிட வேண்டாம். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய வெற்றிலையைப் பயன்படுத்தலாம். வீக்கம் இருப்பவர்கள் வெற்றிலையோடு ஓமம் மற்றும் சீரகம் சேர்த்து கசாயமாகப் பருகலாம். வயதானவர்களை கொரோனா அதிகம் தாக்காமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் வெற்றிலையை அதிகம் பயன்படுத்துவது தான். 

 

உணவு உண்ட பிறகு வெற்றிலை, கிராம்பு, பட்டை, ஓமம், சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் வயிற்றில் உள்ள வாயு பிரச்சனை சரியாகும். வெற்றிலை மூலம் முட்டி வலி உள்ளிட்ட கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இப்போது வெற்றிலை சேர்த்த லேகியங்களும் கிடைக்கின்றன. மார்புச் சளியை நீக்கும் சக்தி வெற்றிலைக்கு இருக்கிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்கள் குறையும். அந்தக் காலங்களில் வீட்டின் பின்னால் அனைத்து வகையான மூலிகைகளையும் வளர்ப்பார்கள். 

 

இன்று அனைத்தையும் கடையில் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். வெற்றிலையை அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக் கூடாது. அதனால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டுவிட்டால் நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்க வேண்டும், அல்லது கொத்தமல்லி ஜூஸ் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் வெற்றிலை என்பது நிஜமாகவே நமக்கு ஒரு வரப்பிரசாதம் தான். கபம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வெற்றிலை மூலம் நாம் எளிதில் தவிர்க்கலாம்.

 

 

Next Story

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.

 

 

 

 

Next Story

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு பிரச்சனையா?  -  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் ஹெல்த் டிப்ஸ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Dr Suganthan | Digestion tips

 

தீபாவளி தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டு வயிறு மந்தமாகவே இருந்தால் பின்வருகிற டிப்ஸை பின்பற்றி சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன்

 

தீபாவளிக்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்திருப்போம். இப்போதைய பருவ கால மாற்றத்தால் இதில் உங்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. மழை காலம் என்பதால் சுடுதண்ணீர் வைத்து குளிப்பது நல்லது. மேலும் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் ராஸ்னாதி சூரணம் வாங்கி உச்சந்தலையில் வைத்தால் நல்லது. மேலும், கற்பூராதி தைலம் என்று கிடைக்கும். அதை வாங்கி தேய்த்து வருவதாலும் தலைவலி, சளி பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு மந்தமாக இருந்தால் ஓமம் சிறிதளவு எடுத்துக்கொண்டு, சுடுதண்ணியில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மந்தத்தால் வாந்தி எடுக்க முயன்றால், இதை குடிக்க வேண்டும். அப்போது இது சரியாகும். 

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்பட்டால் ஓமம், சீரகம், இந்து உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், காலையில் சிக்கல் சரியாகிவிடும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி தீனியால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

 

கடையில் தீபாவளி லேகியம் என்றே வைத்திருப்பார்கள். அவையெல்லாம் இது போன்ற வீட்டில் கிடைக்கும் மளிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவையே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.