Skip to main content

"அப்படியென்றால் எங்குதான் அடித்தீர்கள்?'' -  நகைச்சுவையாக கேட்ட கலைஞர் !

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

நிறவெறியை முறித்தெறிந்து, அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்த ஆப்ரஹாம் லிங்கன் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த காரணத்தை வைத்துக்கொண்டு அவரை ஏளனப்படுத்தியவர்கள் ஏராளம். ஆனால் அந்த உலகப் பெருந்தலைவன் தன் கடும் உழைப்பாலும் ஓயாத படிப்பாலும் வரலாற்றில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அப்படித்தான் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தை வைத்துக்கொண்டு கலைஞரையும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தியே தீரவேண்டும் என்று திட்டங்கள் தீட்டியதையும் செயல்படுத்தியதையும் கண்டு கதிகலங்கியவர்கள் இட்டுக் கட்டிய கதைகளை வேறு எந்தத் தலைவனாலும் தாங்கிக்கொண்டு தடைகளைக் கடந்திருக்க முடியாது. இதுதான் உண்மை.

 

kamaraj - kalaingnar



உலகை வியக்க வைத்த வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர். தன்னிகரற்ற பேச்சாளர், எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர். நகைச்சுவை உணர்வோடு உடனுக்குடன் பதிலளித்து எதிர்க்கட்சியினரை வாய்மூட வைத்தவர்.

அவர் மீது ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு ஈர்ப்புண்டு. ஒருமுறை இலண்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் உரைநிகழ்த்தும்போது இந்த அவையில் பாதி உறுப்பினர்கள் "முட்டாள்கள்' என்றார். உடனே அவையில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சர்ச்சில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்கள்.

 

kalaingnar



அலட்டிக் கொள்ளாத சர்ச்சில் உடனடியாக, "மன்னிக்க வேண்டும். இந்த அவையில் ஐம்பது விழுக்காடு உறுப்பினர்கள் "புத்திசாலிகள்' என்றார். இப்படிப்பட்ட அவரின் அறிவுக்கூர்மை வியக்கவைப்பது. அப்படித்தான் ஒருமுறை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர், "கழகத் தொண்டர்கள் கும்பகர்ணர்கள்'’என்று ஏளனமாகப் பேசினார். அடுத்தநொடி கலைஞர் சிரித்துக்கொண்டே சொன்னார். “"என் தம்பிகள் தூங்கினால் கும்பகர்ணன். எழுந்தால் இந்திரஜித்.' அதற்கு மேல் அவரால் பேச முடியுமா?

கலைஞரின் நகைச்சுவை இயல்பானது. உடனுக்குடன் உதிர்வது. கேட்போரை வியக்க வைப்பது. சிந்திக்க வைப்பது. இலக்கிய மேடையென்றாலும், அரசியல் மேடையென்றாலும் அவர் பேச்சில் வந்து விழுகிற நகைச்சுவைக்கு வசப்பட்டு எதிர்க்கட்சியென்றாலும் வாய்விட்டுச் சிரிப்பார்கள்.

பெருந்தலைவர் காமராசர் முதல்வர். கலைஞர் எதிர்க்கட்சித் துணைத்தலைவர். சட்டமன்ற உறுப்பினர்ஒருவர், "திருச்சியில் ஊர்வலம் வந்த காமராசர் மனுக்கொடுக்க வந்த பொற்கொல்லர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார்'’என்று குற்றம்சாட்டினார். உடனே கோபத்தோடு எழுந்த பெருந்தலைவர், "நான் கன்னத்தில் அடிக்கவில்லை'’என்று மறுத்தார்.

சட்டென்று எழுந்த கலைஞர் கேட்டார், "அப்படி யென்றால் எங்குதான் அடித்தீர்கள்?' என்றார் சிரித்துக்கொண்டே. குபீர்ச் சிரிப்பு சட்டமன்றத்தைக் கலகலப்பாக்கியது. பெருந்தலைவரும் சிரித்தார். உடனுக்குடன் பதிலளிப்பதில் வல்லவர் கலைஞர் என்பதை வரலாறு நெடுகக் காணமுடியும். திராவிட இயக்கம் திடீரென்று முளைத்த காளான் கட்சிகளைப் போல எழுந்த இயக்கமா என்ன? எத்தனையோ இழிமொழிகள், போராட்டங்கள், எதிர்ப்புகள், ஏளனங்கள், வஞ்சகச் செயல்கள், துரோகங்கள் என்று எல்லாவற்றையும் உடைத்தெறிந்து எழுந்துவந்த இயக்கம். பண்ணைகளும் பணக்காரர்களும், ஆண்டைகளும், ஆதிக்கச் சக்திகளும் ஆட்டிப் படைத்த அரசியல் உலகைச் சாமான்யனும் வந்து சரித்திரம் படைக்கமுடியும் என்பதைச் சாதித்துக் காட்டுவதற்காக எழுந்த இயக்கம்.


- சென்னிமலை தண்டபாணி

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.