Skip to main content

குழந்தையின்மைக்கு இது தான் தீர்வு - பிரபல கருவுறுதல் நிபுணர் டாக்டர் தாட்சாயினி விளக்கம்

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

Infertility Specialist  Dr. Dakshayani

 

குழந்தையின்மை பிரச்சனையால் தற்போது உலக அளவில் பல தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 சதவீதத்திற்கும் அதிகமான தம்பதியினருக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, இதற்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்து கருவுறுதல் நிபுணர் டாக்டர் தாட்சாயினி விளக்குகிறார்.

 

திருமணமாகி ஒரு வருடத்திற்குப் பிறகும் குழந்தை பெறுவதில் சிக்கல் இருந்தால், கருவுறாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குழந்தை பெற முடியாவிட்டால், அதனால் சமுதாயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். தொழில்நுட்பங்களும் சமூகப் புரிதலும் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் இதை நாங்கள் தம்பதியினருக்கான பிரச்சனையாகத் தான் பார்க்கிறோம். சில தம்பதியினருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டாலும் கருவுறாமை ஏற்படும்.

 

கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டி, சினைப்பையில் ஏற்படும் கட்டி ஆகியவற்றால் கருவுறாமை ஏற்படலாம். ஆண்களின் விந்தணுக்களில் உள்ள குறைபாடுகளாலும் கருவுறாமை ஏற்படும். பல நேரங்களில் கணவன், மனைவி இருவருக்கும் புரிதல் இல்லாத காரணத்தினாலும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் பருமனும் இதற்கான காரணங்களில் ஒன்று. கர்ப்பப்பைக்கும் சினைப்பைக்கும் இடையில் உள்ள குழாயில் ஏற்படும் அடைப்பும் ஒரு காரணம்.

 

கருவுறாமை பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்களுக்குப் பொதுவானது. இதற்கு முழுமையான மருத்துவம் கிடைக்காததாலும் பலர் அவதிப்படுகின்றனர். இது குறித்த மருத்துவத்தை நாடுபவர்கள், தம்பதியராக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலம் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை முழுமையாக அறிந்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும். 

 

முதலில் சாதாரண மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சை வழங்கப்படும். வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமும் பெரிய மாற்றம் ஏற்படும். அதிக காலமாகியும் சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் புதிய சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படும். லேப்ரோஸ்கோபி சிகிச்சை இதில் முக்கியமானது. கர்ப்பப்பையில் உள்ள பிரச்சனைகள் பரிசோதனை மூலம் கண்டறியப்படும். சரியான சிகிச்சையின் மூலம் நிச்சயம் இந்த பிரச்சனையை குணப்படுத்த முடியும்.

 

கருத்தரித்தல் மையங்களில் தற்போது ஆலோசகர்கள் பலர் உள்ளனர். அவர்களோடு உரையாடும்போது வீட்டில் கணவன், மனைவி இடையே நிலவும் பிரச்சனைகளைச் சரி செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும். கூட்டுக் குடும்பத்தினால் தம்பதியினருக்குத் தனிமையான சூழல் கிடைப்பதில் சிக்கல் இருந்தால், அவர்களுடைய பெற்றோரையும் அழைத்து ஆலோசனைகள் வழங்கப்படும். சரியான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளின் மூலம் பெரும்பாலானோருக்கு மூன்று முதல் ஆறு மாதங்களில் இந்தப் பிரச்சனை தீரும்.

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.