Skip to main content

நமக்கும் நேரத்துக்கும் ரேஸ்... ஜெயிப்பது யார்?

Published on 21/03/2018 | Edited on 21/03/2018

'டைம் மேனேஜ்மென்ட்' என்ற ஒரு சொல்லை நம் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விளையாடும் இடங்கள் என எங்கு சென்றாலும் சொல்கிறார்கள். உண்மையில் நேரத்தை நிர்வகிக்க முடியுமா? ஒரு நாளைக்கு 24 மணிநேரம், ஒரு மணிநேரத்துக்கு 60 நிமிடம், ஒரு  நிமிடத்துக்கு 60 வினாடி என்பது உலகத்தில் உள்ள எல்லோருக்கும் சமம். அதை குறைக்கவோ கூட்டவோ முடியாது. ஆனால் நாம், தேவையில்லாத இடத்தில், நம் நேரத்தை வீணடிப்பவர்களிடத்தில் செலவழிப்பதை குறைக்கவோ தவிர்க்கவோ முயற்சிக்கலாம். உண்மையில் நம்மை நிர்வாகிப்பது தான் நேரத்தை நிர்வாகிப்பது. 

 

Time management



பரீட்டோ (Pareto) விதி என்று ஒன்று உண்டு. அதன்படி மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் 80 சதவிகித விளைவு என்பது 20 சதவிகித காரணத்தால் நிகழ்வது. அதாவது, ஒரு சேல்ஸ் ரெப் இருக்கிறார் என்றால், அவருடைய என்பது சதவிகித டார்கெட், அவருடைய மொத்த உழைப்பில் 20 சதவிகித உழைப்பு செலுத்தப்படும் இடத்திலிருந்து தான் வரும். ஒரு தேசத்தில், 80 சதவிகித நிலம் 20 சதவிகித செல்வந்தர்களிடம் தான் இருக்கும். இப்படி எல்லாவற்றுக்கும் இந்த 80/20 பொருந்தும். எனவே நேரத்தை அந்த முக்கியமான 20 சதவிகித வேலைகளில் செலவு செய்கிறோமா இல்லையா என்பதே நமக்கும், சுந்தர் பிச்சைக்கும் ஜிக்னேஷ் மேவானிக்கும் முகேஷ் அம்பானிக்கும் நரேந்திர மோடிக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

'சேதுபதி IPS' படத்தில் கேப்டன் போல கடிகாரத்தில் ஏறி நின்று நேரத்தை நிறுத்த முடியாது. நேரம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறது, பிடித்து வைக்க முடியாது. ஆனால், அதற்கு இணையாக வேகமாக ஓடலாம். நமக்கும் நேரத்துக்குமான ரேஸில் வெல்ல சில வழிகள்...
 

Sethupathi IPS



எது நம் இலக்கு... 

மிகவும்  முக்கியமான ஒன்று என்னவென்றால் நம்முடைய குறுகிய கால  இலக்கு - நீண்ட கால  இலக்கு என்னவென்று நாம் அறிவோம். அதுதான் நம்மிடையே  எது முக்கியம் எது முக்கியமில்லை  என்பதை வேறுபடுத்திக்காட்டும். நாம் எதைநோக்கி செல்லவேண்டும், எதை அடைய வேண்டும் என்ற தெளிவான சிந்தனை நம் தினசரி வேலைகளை வரிசைப்படுத்த உதவும். பின்னர், சரியான வேலைக்கு அதிக நேரத்தை செலவிட முடியும்.  

லிஸ்ட் போடுங்க 

மாறி வரும் வாழ்வில், ஸ்மார்ட் ஃபோன் காலத்தில் நாம் தவற விட்டிருக்கும் முக்கிய பழக்கம் 'லிஸ்ட் போடுவது'. ஆம்,  மளிகை கடைக்கு போனாலும், மலையேற போனாலும் நம் வேலைகளை, எடுத்து செல்ல வேண்டியவற்றை, முடித்து வர வேண்டியவற்றை பட்டியலிடுவது நம் நேரத்தை நிர்வகிக்க உதவும். ஒரு பேப்பர் எடுத்து எழுத வேண்டுமென்றில்லை. எத்தனையோ 'டே பிளானிங் ஆப்'கள் (day planning app) இருக்கின்றன. பட்டியல் போடுவது நம்முடைய அந்த 20 சதவீதத்தின் உற்பத்தியை அதிகரிக்கும். நம்முடைய மனதை தெளிவாக வைக்கவும்,நம்முடைய ஆற்றலையும்,மன அழுத்தத்தையும் பாதுகாக்க உதவும். எதையும் பிளான் பண்ணி பண்ணனும். 

ஒரு பேப்பரிலோ, கைபேசியிலோ அல்லது கணினியிலோ நம்முடைய பார்வைக்கு படும்படி வேண்டும். பெரியவேலைகளை  சிறு சிறு குறிப்புகளாக எழுதிவைத்துக்கொண்டு சோர்வடையாமல் ஒன்றொன்றாக முடிக்கலாம். முடித்தவுடன் அதனை டிக் அல்லது அடித்துவிட்டால் நமக்கு முடித்துவிட்டோம் என்ற திருப்தி இருக்கும்.

தள்ளிப்போடாதே...

முக்கியமான வேலைகளை தள்ளிப்போடுவது என்பது, அந்த வேலையை செய்யாததற்கு சமம். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். முதல் நாள் முக்கிய செய்தியாக இருப்பது, செயல்படுத்தாவிட்டால் மறுநாள் முக்கியத்துவமற்றுப் போகும். ஒரு சேல்ஸ் மேனேஜருக்கு 31ஆம் தேதி முடிக்காத வேலை, மறுநாள் முடித்தால் பயனில்லாமல் போகும். அதே நேரம், தள்ளிப்போடுவது பல சமயங்களில் உதவும். எப்படி? உடனடி தேவையில்லாத வேலைகளை தள்ளிப் போட வேண்டும்.       
 

இந்த ஸ்மார்ட் போன் தான் எல்லாத்துக்கும்  காரணம்... 

 

smart phone addicts



நாம் அட்டவணையிட்டுள்ள வேலைகளைச் செய்யும்போது நமக்கு தொலைபேசி அழைப்பு மற்றும் மின்னஞ்சல் இடையூறாக இருக்குமெனில் அவற்றை தவிர்த்து நம் வேலைகளை இடையூறின்றி தொடரலாம். 2017 ஆய்வு ஒன்றின்படி, ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 மணிநேரத்தை அதில் செலவிடுகிறார்களாம். பொன்னான காலத்தை போனில் தொலைக்கலாமா?  

ஒரு பிரேக் வேணும்ப்பா... 

நாம்  செய்யும் வேலைகளுக்கிடையே இடைவேளை விட்டு தொடருவது மிகவும் அவசியம். அப்படிவிடும்போது நமக்கு அது புத்துணர்ச்சியாக இருக்கும். அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்கலாம். தொடர்ந்து மணிக்கணக்கில் ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பது உண்மையில் 'ப்ரொடக்டிவிட்டி' (productivity) எனப்படும் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தும்.    


ஷேர் பண்ணுங்கள்  

இன்றைய மேலாண்மை திறன்களில் மிக முக்கியமாகக் கருதப்படுவது டெலிகேஷன்  (delegation) எனப்படும் 'வேலையை சரியாக பிரித்து வழங்குதல்'. எப்போதுமே எல்லா நேரங்களிலுமே நம்மால் எல்லா வேலைகளை இழுத்துப்போட்டு செய்ய இயலாது. அந்த சமயத்தில் யார் அதற்கு தகுதியானவரோ அவரிடம் அந்த வேலையை ஒப்படைக்கவேண்டும். இதைத் தான் திருவள்ளுவர், 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்று அன்றே கூறினார். 


'நோ' சொல்லிப் பழகுங்கள்  

இது மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய நேரம் மிகக்குறைவு என்றபொழுது, நாம் அனைத்துக்கும் 'முடியும்' என்று சொல்ல முடியாது. எனவே நமக்கு கொடுக்கப்பட்ட வேலை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என தீர்மானித்து அதை நம்மால் செய்ய இயலாத நேரத்தில் பக்குவமாக "முடியாது" என்று சொல்லிவிடலாம். சில படங்களில், கதைகளில் சொல்வது போல 'முடியாது என்ற வார்த்தையே என் அகராதியில் கிடையாது' என்பதெல்லாம் இல்லை. தேவையில்லாததற்கு முடியாது என்று சொல்லாவிட்டால், தேவையானது உங்களை விட்டுச் செல்லும்.   

இந்த டிப்ஸ்களை செயல்படுத்துங்கள். நம் பொன்னான நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள்.  நேரத்துடனான ரேஸில் நாமே ஜெயிக்க வேண்டும்.
 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.