![How to recover from stress? - Explained by Homeopath Aarti](http://image.nakkheeran.in/cdn/farfuture/zaVAEe60Y0Ijy7DAtM78uicziZixcdJm8kY_p0xVii4/1684921832/sites/default/files/inline-images/Aarthi_3.jpg)
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வது பற்றி நம்மோடு ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி பகிர்ந்து கொள்கிறார்.
19 வயது பெண் ஒருவரின் தந்தை திடீரென இறந்துவிட்டார். அந்தப் பெண்ணுக்கு அதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. அவருடைய சகோதரி என்னிடம் வந்தார். தந்தை இறந்த பிறகு அந்தப் பெண் மற்றவர்களோடு பேசுவதையே நிறுத்திவிட்டார் என்று கூறினார். யாரைப் பார்த்தாலும் அவருக்கு பயம் ஏற்பட்டது. வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார். அந்தப் பெண்ணை அவருடைய சகோதரி என்னிடம் அழைத்து வந்தார். அந்தப் பெண்ணைப் பேச வைப்பதற்கே எனக்கு நேரம் ஆனது.
வீட்டில் இருட்டான ஒரு ரூமில் எப்போதும் அவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவருக்கு நான் கவுன்சிலிங் கொடுத்தேன். ஹோமியோபதி மருந்துகளையும் கொடுத்தேன். 10 நாட்கள் கழித்து தன்னிடம் ஒரு மாற்றம் தெரிவதாகவும், தற்போது தான் வெளியே செல்வதாகவும் அந்தப் பெண் என்னிடம் கூறினார். ஒரு மாதத்தில் அவரிடம் நல்ல மாற்றம் தெரிந்தது. அடிக்கடி எனக்கு ஃபோன் செய்வார். இப்போது அந்தப் பெண் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருந்துகொண்டு தன் குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறார்.
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் எப்போதும் ஏதாவது யோசித்துக்கொண்டே இருப்பார்கள். சிலர் தவறான பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். தூக்க மாத்திரைகள் எடுப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கு அடிமையாக நேரிடும். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு உதவி வேண்டும் என்று மற்றவர்களிடம் கேட்க வேண்டும். நம்முடைய பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். நம்மை நாமே கவனித்துக்கொள்ள வேண்டும்.
பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க வேண்டும். உடன் இருப்பவர்களிடம் சொல்ல முடியவில்லை என்றால் மருத்துவர்களை அணுக வேண்டும். நன்றாக சாப்பிட வேண்டும். கஷ்டங்களை மனதுக்குள் அடக்கி வைப்பதால் தான் ஒரு கட்டத்தில் அது வெடிக்கிறது. ஈகோ இல்லாமல் அனைவரோடும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.