அண்மையில் இணைய தளத்தில் பார்த்த ஒரு வீடியோ காட்சி மனதைத் தொட்டது. சிங்கம் எத்தனை கொடிய விலங்கு என்பது நமக்குத் தெரியும். அதன் காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அது மிகவும் கஷ்டப் பட்டு வந்தது. நடக்க முடியவில்லை. வலி வேறு.இந்நிலையில் மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்த மிருக டாக்டர் ஒருவர் அந்த சிங்கம் அவதிப்படுவதைப் பார்த்தார். அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். பின்னர் மிருகக்காட்சி அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்று சிங்கத்திற்கு சிகிச்சை அளித்தார். விரைவில் சிங்கத்திற்குக் குணமாகியது. அதன் வலி சுத்தமாக மறைந்து போயிற்று. பழைய மாதிரி நன்றாக, கம்பீரமாக அதனால் நடக்க முடிந்தது. சிங்கத்திற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இந்நிலையில் சில மாதங்கள் கழித்து அந்த மருத்துவர் மிருகக் காட்சி சாலைக்கு வந்தார். கம்பி வேலிக்குள் கம்பீரமாக உலா வந்த அந்த சிங்கத்தைப் பார்த்தார். அவருக்கு சந்தோஷமாக இருந்தது. சற்று தொலைவில் நின்றிருந்த சிங்கம் வெளியே டாக்டர் நிற்பதைப் பார்த்தது. தீராத நோயைக் குணமாக்கி மீண்டும் வலியற்ற நடையைத் தந்தவர் என்ற நன்றி விசுவாசம் அதனுள் துளிர்த்தது. அங்கிருந்து சந்தோஷமாக ஓடிவந்த சிங்கம் கம்பி வேலி வழியாகத் தனது முன்னங்கால்களை நீட்டி டாக்டரைத் தொட்டுத் தழுவியது. அத்துடன் கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு டாக்டரின் தலை, முகம், உடம்பு, கை என்று அனைத்து பாகங்களிலும் முத்த மழையைப் பொழிந்து தள்ளிவிட்டது. அங்கிருந்த பார்வையாளர்கள் பலரும் இந்த அரிய காட்சியைக் கண்டு அப்படியே அடித்து வைத்த கற்சிலைபோல ஆகிவிட்டனர். இது அண்மையில் நடந்த உண்மை நிகழ்ச்சி. யோசித்துப் பாருங்கள். கொடிய மிருகமாக இருந்தாலும் பரிவு காட்டினால் அதற்கு நன்றியாகப் பாசத்தைப் பொழிகிறது. இது இயற்கையின் நியதி.அனைத்து உயிர்களிடத்திலும் பரிவு காண்பித்தால் அதனால் கிடைக்கும் சந்தோஷங்கள் ஏராளம். கடை முதலாளி ஒருவர் வாழைக்குலை ஒன்றைத் தனது வேலைக்காரனிடம் கொடுத்து அருகிலுள்ள கோயிலில் தானமாகக் கொடுத்து வருமாறு கூறினார்