Skip to main content

"கால் பாத சிகிச்சை மூலமாக நோய்களை குணப்படுத்துதல்" - விளக்குகிறார் ஆல்பா சுதாகர்

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

  Foot theraphy Cure disease - Explains Alpha Sudhakar

 

கால் பாதத்தில் தான் நம்முடைய அனைத்து பிரச்சனைகளும் இருக்கின்றன. எனவே, அதை சரி செய்தால் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாம் என்கிறார் திருவண்ணாமலையில் இயங்கி வரும் பாத சிகிச்சை மருத்துவர் ஆல்பா சுதாகர். பல்வேறு நோய்களை குறைந்த காலத்தில் குணமாக்கிக் காட்டிய இவர், ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவு முறை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

திருவண்ணாமலையில் எங்களுடையது கிட்டத்தட்ட ஒரு குட்டி ஆசிரமம் போல தான். அங்கு பெரும்பாலும் என்னுடைய நண்பர்களும் உறவினர்களும் தான் மருத்துவர்கள். அனைவரும் பாத சிகிச்சையில் பயிற்சி பெற்றவர்கள். அக்குபஞ்சர் போல் சீனாவில் தொடங்கிய சிகிச்சை முறைதான் இது. அதன் பிறகு ஜப்பானில் இந்த சிகிச்சை முறை வளர்ந்தது. தற்போது இந்தியாவில் மத்திய அரசுடன் இணைந்து இந்த சிகிச்சை முறை இயங்கி வருகிறது. 

 

தைராய்டு சிகிச்சையை கால் கட்டை விரலில் எந்தப் பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதை நோயாளிகளுக்கு நாங்களே சொல்லிக் கொடுப்போம். மொத்தம் 12 வாரங்களில் தைராய்டு நோயை எங்களால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். நோயின் தன்மையைப் பொறுத்து கால அளவு அமையும். ஆட்டிசம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 13 வயதிற்குள் எங்களிடம் அழைத்து வந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். நாங்கள் கண் சிகிச்சையும் அளிக்கிறோம். 

 

பல்வேறு உரங்களைப் போட்டு நாம் நம்முடைய மண்ணை மலடாக்கி வைத்துள்ளோம். அதன் மூலம் கிடைக்கும் உணவுகளை நாம் உண்பதால் நம்மிடம் வீரியம் குறைகிறது. இளைஞர்கள் பலர் நம்மிடம் வருகின்றனர். இதில் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகளும், ஆண்களுக்கு போதை தொடர்பான பிரச்சனைகளும் அதிகம் இருக்கின்றன. இளைஞர்கள் பல்வேறு வகைகளிலான போதையில் சிக்கித் தவிக்கின்றனர். 

 

மஞ்சள் தேய்த்துக் குளிப்பது, மிளகு சாப்பிடுவது உள்ளிட்ட அனைத்தும் இன்று குறைந்துவிட்டன. மரணத்தைத் தவிர அனைத்தையும் குணப்படுத்துகிற தன்மை கருஞ்சீரகத்தில் இருக்கிறது. கருஞ்சீரகம், சீரகம், ஓமம், வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, 5 கிராம் பட்டை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நம் தமிழ் மருத்துவத்தில் இல்லாத மருந்துகளே இல்லை. ஆனால், மேற்கத்திய கலாச்சாரத்தை நாம் அதிகம் பின்பற்றுகிறோம்.

 

அனைத்தையும் விட மனிதனுக்கு அன்பு தான் பிரதானம். தமிழ் உணவுகளை நாம் அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின் சி அதிகம் பெற நெல்லிக்கனியை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை. பால் கலந்து டீ குடிப்பதை விட புதினா டீ, லெமன் டீ குடிக்கலாம். வெற்றிலையோடு வெல்லம் கலந்து டீ குடிக்கலாம். கற்பூரவள்ளி, துளசி போன்ற அனைத்து இலைகளையும் வைத்து டீ கலந்து குடிக்கலாம். உடல் நோயிலிருந்தும் மனநோயிலிருந்தும் நாம் குணமடைய வேண்டும் என்றால் நம்முடைய பாரம்பரிய உணவு முறைக்கு நாம் திரும்ப வேண்டும்.