Skip to main content

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

  DrSuganthan | Karunai kilangu| Ayurvedic medicine

 

வள்ளலார் பரிந்துரைத்த கிழங்குகளில் மிகவும் அற்புதமான கிழங்கு கருணைக்கிழங்கு. இதை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்.

 

கிழங்கு வகைகளில் கண்டிப்பாக நாம் சாப்பிட வேண்டிய ஒரு கிழங்கு கருணைக்கிழங்கு. இதைச் சாப்பிடுவதால் மூலம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். சித்தர்கள் அனைவரும் பரிந்துரைக்கும் முக்கியமான கிழங்கு இது. பித்தம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கருணைக்கிழங்கு ஒரு வரப்பிரசாதம் தான். உணவை சரியான முறையில் செரிமானம் செய்வதற்கு கருணைக்கிழங்கு உதவுகிறது. 

 

இப்போது நாம் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு தான் அதிகமாக கொடுக்கிறோம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிள்ளைகளுக்கு நாம் கருணைக்கிழங்கு தர வேண்டும். மூலநோய் ஏற்பட்டவர்களுக்கு கருணைக்கிழங்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது. கருணைக்கிழங்குகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அதில் நமக்கு கிடைப்பது ஒரு வகை தான். மற்றவை மலைப்பிரதேசங்களில் கிடைக்கும். கருணைக்கிழங்கு சாப்பிட்டால் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை குறையும். புளிக்கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்தால் அமிர்தம் போன்ற சுவை தரக்கூடியதாக கருணைக்கிழங்கை நிச்சயம் மாற்ற முடியும். 

 

கருணைக்கிழங்கை மசியலாகவும், லேகியமாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் கருணைக்கிழங்கு லேகியம் சாப்பிடலாம். கருணைக்கிழங்குடன் மோரையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இதில் அதிகம் மிளகாய் தூள் சேர்த்து கொடுக்கக்கூடாது. அகத்திக்கீரை சேர்த்து கருணைக்கிழங்கை சமைத்துக் கொடுப்பது நல்லது. 

 

இதன் மூலம் உட்காரவே முடியாமல் சிரமப்படுபவர்கள் கூட வித்தியாசத்தை உணர்வார்கள். குடல் சார்ந்த பிரச்சனைகளால் தான் நிறைய பேருக்கு பைல்ஸ் ஏற்படுகிறது. குடல் சார்ந்த பிரச்சனைகளையும், பித்தத்தையும் தணிக்கக் கூடியதாக கருணைக்கிழங்கு இருக்கிறது. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கிழங்கும் புளித்த கீரையும் சாப்பிட வேண்டும் என்று வள்ளலார் சொல்கிறார். இது உடல் சூட்டைத் தணித்து மலமிளக்கியாகவும் செயல்படும். எனவே கருணைக்கிழங்கை ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு முறையாவது நாம் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

 

 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.

Next Story

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.