Skip to main content

"காய்ச்சல் நின்றுவிட்டால் டெங்கு போய்விட்டது என்று அர்த்தமல்ல" - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

DrRajendran | Dengue fever | Clean water |

 

டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் வழங்குகிறார்

 

டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிடும். தண்ணீரை சரியாக மூடி வைக்காமல் இருப்பதே இதற்கான காரணம். தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் இந்த கொசுக்கள் உட்காரும். இந்த கொசுக்கள் பெரும்பாலும் காலையில் நம்மைக் கடிக்கும். நாம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் போதாது. பாத்திரங்களையும் நன்கு மூடி வைக்க வேண்டும். பாத்திரங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் நாம் செய்தால், கொசு வேறு இடத்தைப் பார்த்து ஓடிவிடும். 

 

காய்ச்சல் நின்றுவிட்டால் டெங்கு போய்விட்டது என்று அர்த்தமல்ல. காய்ச்சல் என்பது நீங்கள் மாத்திரை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் இருக்காது. அனைவருக்கும் வரும் காய்ச்சல் போல் தான் இதுவும் ஆரம்பிக்கும். முதல் இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும். அதன் பிறகு காய்ச்சல் நின்றுவிடும். அதன் பிறகு உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைக்கு இது ஏற்பட்டால், குழந்தையால் சரியாக சாப்பிட முடியாது. அவர்களுக்கு மிகுந்த உடல் பலவீனம் ஏற்படும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். 

 

இந்த நிலையில் ரத்தம் இறுகிப் போகும். திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு ரத்தம் மாறும். இதன்மூலம் இதயத்துடிப்பு அதிகமாகும், ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும். இது மிக முக்கியமான ஒரு மாற்றம். இதை நாம் கவனிக்காமல் இருக்கும்போது தான் குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக தட்டணுக்கள் குறைய ஆரம்பிக்கும். உடலின் வெள்ளை அணுக்களும் குறைய ஆரம்பிக்கும். ஹீமோகுளோபின் அளவு அதிகமானது போல் தெரியும். இதைப் பார்த்து ரத்தம் நன்றாக இருக்கிறது என்று நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. ரத்தம் இறுகிப்போவது என்பது அபாயமான ஒரு அறிகுறி. இதைத் தவறான முறையில் புரிந்துகொள்பவர்கள் தான் இன்றும் அதிகம் இருக்கிறார்கள்.

 

 

 

 

Next Story

பன்றிக் காய்ச்சல் நுரையீரலை பாதிக்குமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
 Dr Rajendran | Swine flu 

மழைக் காலங்களில் பரவக்கூடிய பல்வேறு வகையான காய்ச்சலைப் பற்றி நமக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன் விளக்குகிறார்.

இன்றைய காலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு தவிர மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் ஆகும். ஸ்வைன் ப்ளூ ஹெச்1 என் 1 இன்புளுயன்சா வைரஸ், இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடியது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு மற்றவரை கடிக்கும்போது அதனால் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். 

ஆனால் பன்றிக் காய்ச்சல் என்பது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வருகிற மூச்சுக்காற்று, இருமல், சளி ஆகியவற்றாலும், கை, கால் ஆகியவற்றைக் கொண்டு எங்கெல்லாம் தொடுகிறோமோ அதன் மூலம் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது. 

பன்றிக் காய்ச்சல் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் தீவிரமான உடல் சூட்டோடு காய்ச்சல், உடல் வலி, வரட்டு இருமல், கடுமையான தலைவலி, தொண்டை வலி ஏற்படும். மருத்துவர்கள் தொண்டை வலி என்றதும் தொண்டையை பரிசோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் அங்கே வலியால் வீங்கியோ அல்லது சிவந்து போயோ இருக்காது இப்படியாக எந்த அறிகுறிகளுமே இல்லாமல் கடுமையான தொண்டை வலி ஏற்பட்டால் அது பன்றிக் காய்ச்சல் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 

நோயின் தீவிரத்தன்மையை அறியாமல் சாதாரண காய்ச்சல்தான் என்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்து விடக்கூடாது. தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டால் சுவாசப் பாதையிலிருந்து நுரையீரலை நோக்கி காய்ச்சல் நகரக்கூடும் இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும்.  

பன்றிக் காய்ச்சல் என்றதும் நாங்கள் பன்றிக்கறி எதுவும் சாப்பிடவில்லையே, பன்றியிடம் அருகில் எதுவும் போகவில்லையே என்று நினைப்பார்கள். அது காய்ச்சலை வேறுபடுத்த வைக்கப்பட்ட பெயராகும். காய்ச்சலின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள பரிசோதனை செய்து உறுதிசெய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையையோ, மருத்துவரையோ அணுகி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 

Next Story

வடலூரில் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு? போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

வடலூர் அருகே தென்குத்து புதுநகர், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி வெண்ணிலா என்கின்ற குமாரி(30); மணிகண்டன் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி குமாரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வடலூரில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். தென்குத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள கல்லுக்குழி மணல் குவாரியில், வடலூர் நகராட்சி குப்பை கொட்டப்படுவதால் ஏராளமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குமாரியும் டெங்கு காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி  குப்பை கொட்டப்படும் கல்லுக்குழி மண் குவாரி பகுதியில் திரண்டனர்.

Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதனை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் வடலூர் நகராட்சி குப்பை இங்கு கொட்டப்படுவதால்தான் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலமுறை குப்பை கொட்ட கூடாது எனக் கூறியும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இங்க குப்பைகளை கொட்டி வருகிறது. அதனால் அங்கு சென்று கேட்போம் எனக்கூறி அவர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அங்கு பேச்சு வார்த்தைக்கு வந்த வடலூர் சேர்மன் சிவக்குமாரை முற்றுகையிட்டு அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சேர்மன் சிவகுமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமாரை கேட்டபோது அந்த பெண் இறந்ததுக்கும் குப்பை கொட்டியதுக்கும் சம்பந்தம் இல்லை. பல இடங்களில் டெங்கு உள்ளது. ஆனால் அந்த பெண் இறந்தது டெங்குவால் இல்லை, இனிமேல்தான் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறினார். இதுகுறித்து மருத்துவத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அந்த பெண் டெங்குவால் தான் இறந்துள்ளாரா? என சரியான விளக்கத்தை கூறினால் தான் மக்கள் மத்தியில் டெங்கு குறித்த அச்சம் போகும் எனக் கூறப்படுகிறது.