Skip to main content

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

 DrRadhika Murugesan - mental health tips

 

பில்லி, சூனியம், செய்வினை, பேய் பிடித்தல், சாமி ஆடுதல் ஆகியவற்றிற்கு பின்னே இருக்கும் அறிவியல் காரணங்களை மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்

 

நம்பிக்கை என்பது ஆதாரப்பூர்வமானவை; மூட நம்பிக்கை என்பது  ஆதாரமற்றவை, இருந்தாலும் மக்கள் அதை நம்புவார்கள். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் இரண்டிற்கும் சிறிய வித்தியாசம் தான். மழை மேகத்தைப் பார்த்து மழை வரப்போகிறது என்றால் அறிவியலின் துணையுடனான நம்பிக்கை. காக்கா கத்தியது, அதனால் மழை வரும் என்பது மூடநம்பிக்கை சார்ந்தது. 

 

டாக்டர்கள் எப்போதும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது. இந்த ஆஸ்பிட்டல் இருக்கிறது, இங்கே கிளினிக் இருக்கிறது என்பதை சொல்லலாம்; ஆனால் இந்த டாக்டர் இந்த நோயை குணப்படுத்திவிடுவார் என்று விளம்பரப்படுத்தக் கூடாது என்பது மருத்துவத் துறையில் பின்பற்றப்படும் விதி. ஆனால் தொலைக்காட்சிகளில் பில்லி, சூனியத்திற்கு எல்லாம் தீர்வு தருகிறோம் என்று விளம்பரப்படுத்தி தொடர்பு எண் தருவார்கள். இதெல்லாம் ஒரு வகை மனநோய் தான். இவர்களால் அதை சரி செய்ய முடியாது ஆனால் விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். முறையான மனநல மருத்துவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.

 

இப்போது பில்லி சூனியம் என்றால் என்னவென்று பார்ப்போம். ஏதோ ஒரு வகையான சக்தியின் துணைகொண்டு மற்றொருவரை நாம் ஆட்டிப்படைக்க முடியும் என்கிறார்கள். ஆனால் இதை மனநல மருத்துவத் துறையில் ஸ்கீசோபெர்னியா (மனச்சிதைவு) மனநோயில் டெலூசினல் கண்ட்ரோல் என்கிறோம். நமது சிந்தனைகளை யாரோ குறுக்கிட்டு அவர்களுடைய சிந்தனையை நமக்கு திணிக்கிறார்கள் என்ற சிந்தனை வரும். இது ஸ்கீசோபெர்னியா நோய் அறிகுறியாகும். இதை பில்லி சூனியம் என்று நம்பி போலியான சாமியார்களை நம்பி ஏமாறுபவர்கள் இருப்பார்கள்.

 

செய்வினை வைப்பது என்பார்கள் அதாவது யாரோ ஒருவர் நமக்கு பிடிக்காதவர்கள் நம்மை நல்லபடியாக வாழக் கூடாது என்று செய்வினை வைத்து விட்டார்கள் என்று நம்புவார்கள். அதனால் அவர்கள் சோர்வாகவே இருக்கிறார்கள், ஒழுங்காக சாப்பிடுவதில்லை, எடை குறைகிறார்கள், யாருடனும் பேச மாட்டேன்  என்பார்கள். ஆனால் இது டிப்ரெசன் அறிகுறியாகும். பேய் பிடித்தல் என்பார்கள். இதை நாம் கன்வென்சன் டிஸ்ஸாடர் என்போம். நம்மால் சமூகத்தில் பல விசயங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. அழுத்தப்பட்டு இருப்போம். அதை இது போன்ற சமயத்தில் வெளிப்படுத்தி விடுவார்கள். அது தான் பேய்ப்பிடித்தல். இதே தான் சாமி வருவது ஆகும். 

 

இந்த பில்லி, சூனியம், செய்வினை, பேய்பிடித்தல், சாமி ஆடுதல் போன்றவற்றின் மீது அதிக மூடநம்பிக்கையைக் கொண்டு அதற்கு முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், தனிப்பட்ட போலியான நபர்களை அணுகி பெரிய சிக்கலாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பது தான் வருத்தம் அளிக்கிறது. 

 

 

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.