Skip to main content

திருமண முறிவு சிக்கல் நிறைந்ததா? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 29/01/2024 | Edited on 01/02/2024
 DrRadhika Murugesan| Marriage | Divorce |

டைவர்ஸ் குறித்து சமூகத்தில் பல்வேறு விதமான பார்வைகள் உள்ளன. அதை எப்படி பார்க்க வேண்டும் என்ற உளவியல் பார்வையை நமக்கு மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

திருமணத்தையும், டைவர்ஸையும் ஒரே தராசில் வைத்துத்தான் பார்க்க வேண்டும். திருமணமும் வளர்ச்சி சம்பந்தப்பட்டது தான், அதைப்போலத்தான் டைவர்ஸும். இதற்கு இன்னும் நாம் பக்குவமடைய வேண்டும். ஆய்வின் அடிப்படையில் உலக நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்முடைய டைவர்ஸ் செய்து கொள்ளும் அளவு என்பது குறைவானது தான்.

டைவர்ஸ்க்குப் பிறகு ஆண்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது. புகை மற்றும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். அதே சமயத்தில் டைவர்ஸ் ஆன தம்பதியினரின் குழந்தைகளை விட, சண்டை போட்டுக் கொண்டே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற தம்பதிகளின் குழந்தைகள் நிறைய மன அழுத்தத்தில் இருப்பார்கள்.

டைவர்ஸ் ஆன ஒருத்தரை இந்த சமூகம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் மனநிலை அமைகிறது. டைவர்ஸ் நடந்துவிட்டால் அவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகர முடியாமல் இருக்கிறார்கள். இந்த சமூக கட்டமைப்பு அவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. 

வர்க்க ரீதியில் இதைப் பார்த்தால் பணமிருக்கிற ஒருவர் டைவர்ஸ் செய்தால் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது. பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள ஒருவர் டைவர்ஸ் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஏனெனில் பணம் உள்ளவர்கள் செய்கிற செயல்களை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. இந்த டைவர்ஸும் அப்படித்தான். 

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஒரு பெண்ணுக்கு அவளுடைய தந்தை சொன்னது என்னவென்றால், “காசில்லாமல் இருப்பதால், அட்ஜஸ்ட் பண்ணி சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும்” என்றிருக்கிறார். அப்படியான சூழல்தான் இங்கே நிலவுகிறது.

ஆணின் உறவை பெண் உதறித்தள்ளிச் செல்கிறாள் என்றால் ஆணுக்கு அது ஈகோ பிரச்சனையாகி சுமூகமான டைவர்ஸ் தர மறுக்கிறார். அதனால் தான் இங்கே திருமணத்தை மீறிய உறவுகள் பெருகி வருகிறது. டைவர்ஸ் செய்து கொண்டவர்களை சோகமாக பார்ப்பது தான் இங்கே நிலவி வருகிற சூழலாக உள்ளது. கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்கிறவர்கள், டைவர்ஸ் நடந்தால் அதை வித்தியாசமாக பார்க்கிறார்கள். டைவர்ஸ் நடந்தாலும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்கிற மனப்பக்குவத்திற்கு நாம் வர, நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.