Skip to main content

படிக்காமலே முன்னோர்கள் எப்படி பிரசவம் பார்த்தார்கள்? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

DrArunachalam | Pragnancy | Health tips

 

பிரசவம் பார்க்கும் சரியான முறை குறித்து டாக்டர். அருணாச்சலம் விளக்குகிறார்

 

குழந்தை பிறப்பு என்பது ஒரு நோய் கிடையாது. அது ஒரு சாதாரண நடைமுறை. அந்தக் காலத்தில் பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் படித்தவர்களாக இல்லாவிட்டாலும், பல பிரசவங்களைக் கையாண்ட அனுபவம் அவர்களிடம் இருந்தது. நவீன மருத்துவம் வளர்ந்த பிறகு, ஒவ்வொரு வாரமும் கரு எந்த அளவுக்கு வளர்கிறது என்பது கண்காணிக்கப்படுகிறது. சில நேரங்களில் கருவின் தலை பெரிதாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுப்பார்கள்.

 

பிரசவம் நல்லபடியாக அமைய வேண்டும் என்பது மட்டும்தான் அறுவை சிகிச்சை செய்வதற்கான நோக்கம். தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது இப்போது குறைந்துவிட்டது. அரசு மருத்துவமனைகளில் தான் இப்போது அதிகம் பிரசவம் பார்க்கப்படுகிறது. அங்கு நல்ல முறையிலேயே வைத்தியம் பார்க்கப்படுகிறது. அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்காக குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இறக்கும் சம்பவங்கள் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் குறைவாகவே நடைபெறுகின்றன.

 

பெண்களைக் காக்கவும், மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் அனைவரும் முயற்சி செய்வதற்கு முக்கியமான காரணம், இந்த பிரசவ நேரம் என்பது அவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறவி போன்றது என்பதால் தான். பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதமும் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும், மருத்துவர்கள் எவ்வளவு பயிற்சி பெற்றிருந்தாலும், மருத்துவ கட்டமைப்பு எந்த அளவுக்கு முன்னேறியிருந்தாலும், தாய் மற்றும் குழந்தையின் இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. 

 

தாய் மற்றும் குழந்தையின் இறப்பைத் தவிர்க்கவே மருத்துவமனைகள் பயன்படுகின்றன. கர்ப்ப காலத்தில் மருத்துவர்களை நிச்சயம் தவிர்க்கக் கூடாது. செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். பல ஆண்களுக்கு இதன் முக்கியத்துவம் புரிவதில்லை. பெண்களின் கர்ப்பகால வேதனைகள் அவர்களுக்குத் தெரிவதில்லை. மருத்துவரின் உதவி இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் விபரீதத்தை நிச்சயம் அனைவரும் தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் முன்னேறிய நாம், மருத்துவ விஷயத்தில் பின்னோக்கி செல்வது தவறு. நவீன மருத்துவர்களின் கைப்பிடித்து நாம் செல்வதுதான் நம் நாட்டின் வளர்ச்சிக்கான பாதையாக இருக்க முடியும்.

 


 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.