Skip to main content

பெண்களின் சிறுநீர் கசிவிற்கு தீர்வு - டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்கம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

பெண்களின் சிறுநீர் கசிவிற்கு தீர்வு - டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்கம்

 

பெண்களின் சிறுநீர் கசிவு பிரச்சனைகள் குறித்தும், அதை சரி செய்யும் விதம் குறித்தும் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்

 

இருமல், தும்மல், குனிந்து பளுதூக்குதல் போன்ற வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகளைச் செய்யும்போது பெண்களுக்கு அவர்களை அறியாமல் சிறுநீர் கசிவு ஏற்படும். அடக்க முடியாத சிரிப்பு ஏற்படும்போது கூட சிறுநீர் கசிவு ஏற்படும். இது திடீரென்று நடக்கும்போது அதை அவர்கள் அவமானமாக உணர்வார்கள். நடுத்தர வயது பெண்களுக்கே இந்தப் பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. உடல் பருமனும் இதற்கான முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது. நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு தசைகள் பலவீனமாகும். அவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும். 

 

அவர்களுக்கு அனைத்து வகையான பரிசோதனைகளையும் நாம் மேற்கொள்வோம். அவர்கள் மருத்துவரிடம் சொல்வது குறைவாகவே இருக்கும். ஆனால் பரிசோதனை செய்யும்போது தான் அவர்களுக்கு எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். எனவே முழுமையான பரிசோதனை அவசியம். உடல் பருமனைக் குறைப்பது முக்கியமான ஒரு தீர்வாக இருக்கும். கர்ப்ப காலத்திலிருந்தே பெண்கள் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறப்புறுப்பை நன்கு உள்ளே இழுத்து, ஐந்து வரை எண்ண வேண்டும்.

 

பலர் இப்படிப்பட்ட பயிற்சிகளை செய்வதில்லை. மறதியும் வேலைப்பளுவும் இதற்கான காரணமாக இருக்கிறது. இதுகுறித்து தங்களுக்கு நினைவூட்டும் வழிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சிக்கும் அடுத்த பயிற்சிக்கும் இடையில் சரியான இடைவெளி விட வேண்டும். உங்களுடைய சாதாரண பணிகளுக்கு நடுவிலேயே இந்தப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். இதன் மூலம் சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு முடிவுகட்டலாம்.

 

 

 

Next Story

அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா? - டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்கம்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Srikala Prasad - water issue

 

சிறுநீரக கற்கள் ஏற்படாமல் இருக்க எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், என்னென்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பது குறித்து டாக்டர்  ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்

 

தண்ணீரே குடிக்காமல் இருப்பது போல, அதிகமாக தண்ணீர் குடிப்பதும் சிறுநீரகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். தினமும் இரண்டரை லிட்டர் வரை தண்ணீர் குடித்தால் போதும். சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மாத்திரைகள் இருக்கின்றன. பெரிய கற்கள் இருந்தால், சிறிய துளை போட்டு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை நீக்கலாம். கற்களின் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் சிறுநீரக கற்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். 

 

அப்படி விடுவதால் கற்களின் அளவு பெரிதாகிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்துவிடுவார்கள் என்று பயப்பட வேண்டாம். உங்களுடைய சிறுநீரக கல்லின் தன்மையைப் பொறுத்து தான் அதற்கான சிகிச்சையும் முடிவு செய்யப்படும். சிறுநீரகத்தில் கற்கள் இருந்து, வலி ஏற்படாமல் இருந்தால் உங்களுடைய சிறுநீரகம் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். எனவே வலி ஏற்படவில்லை என்பதற்காக கவனமில்லாமல் இருந்து விடாதீர்கள். எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதால் சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தயிர் சாதத்தில் உப்பு சேர்க்காதீர்கள். ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். பாட்டிலில் வரும் குளிர்பானங்களைத் தவிருங்கள். மோர், இளநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. பாலில் உள்ள கால்சியம் சத்து உடலுக்கு மிகவும் தேவையானது. எனவே நாம் நிச்சயம் பால் சாப்பிட வேண்டும். பாலை முற்றிலுமாக நிறுத்தினால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும். எப்போதும் Balanced Diet எடுத்துக்கொள்வதே சரியானது.
 

 

 

Next Story

பெண்களுக்கு ஒரு வரப்பிரசாத மூலிகை இது - விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Dr Suganthan | Impooral Benefits | Autism | Womens

 

பெண்களுக்கு மருத்துவர் ரீதியில் மிகவும் உதவும் இம்பூறல் மூலிகையின் நன்மைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்

 

இம்பூறல் மூலிகை மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. சித்தர்கள் இதைப் பெரிய அளவில் பயன்படுத்தினார்கள். ரத்த சம்பந்தமான நிறைய வியாதிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கக்கூடியது இந்த மூலிகை. இது லேகியமாகவும், கடைகளில் மாத்திரையாகவும் கிடைக்கிறது. நிறைய கம்பெனிகள் இதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. TB நோய் உள்ளவர்களுக்கு இந்த மூலிகை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தொடர்ந்து இருமிக்கொண்டே இருப்பதால் அவர்களுடைய எனர்ஜி குறையும். அவர்களுடைய எனர்ஜி லெவலை இந்த மூலிகை அதிகரிக்கச் செய்கிறது. 

 

இதை உணவுக்கு முன்பும் எடுத்துக்கொள்ளலாம், உணவுக்கு பின்பும் எடுத்துக்கொள்ளலாம். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைக்கு இந்த மூலிகை சிறந்த தீர்வாக அமையும். ரத்தக் கசிவிலிருந்து தடுக்கும் மருந்தாக இது இருக்கும். இந்த மூலிகையை இப்போது நாம் பயன்படுத்துவது மிகவும் குறைந்துவிட்டது. இந்த மூலிகையுடன் வல்லாரைக் கீரையையும் சேர்த்து அரைத்து, உருண்டையாக செய்து, மோருடன் சேர்த்து கொடுத்தால் ரத்தக்கசிவு குறையும். பைல்ஸ் நோயாளிகளுக்கும் இந்த மூலிகை ஒரு சிறந்த தீர்வாக அமையும். 

 

கபம் சம்பந்தமான நோய்களுக்கு எதிரான பேராற்றல் தரக்கூடிய மருந்தாக இது அமையும். பார்ப்பதற்கு சிறிய மூலிகையாக இருக்கும் இம்பூறல், ரத்தத்தையே சுத்தம் செய்யும் சக்தி படைத்தது. இப்போது பலருக்கும் புற்றுநோய் வருகிறது. அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் இந்த மூலிகை பயன்படுகிறது. நோய் வராமல் தடுக்கும் இந்த மூலிகையை நாம் உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும்.