Skip to main content

முருங்கைக் கீரை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை சரிசெய்யலாமா? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Dr Suganthan Murungai Keerai diabetes

 

சர்க்கரை நோய் குறித்த பல்வேறு தகவல்களை ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.  

 

உலகில் சர்க்கரை நோய்க்கான தலைநகரமாக இன்று இந்தியா விளங்குகிறது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதைவிட மன அழுத்தம் தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம். நடைப்பயிற்சி என்பது மிக மிக முக்கியம். அதன் முக்கியத்துவம் காரணமாகவே அந்தக் காலத்தில் மன்னர்கள் நடந்தே நகர்வலம் சென்றனர். சர்க்கரை என்பது ஒரு குறைபாடு தானே தவிர நோய் அல்ல. இதைச் சரிசெய்வதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. 

 

தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். இதன் மூலம் ஒரு புத்துணர்வு கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். உடலில் எனர்ஜி கூடும். கொழுப்பின் அளவு குறையும். அனைவரும் பிராணயாமம் செய்ய வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் கோவக்காய் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய், மஞ்சள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாகப் பருகினால் சர்க்கரை அளவு குறையும். ஆவாரம் பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்தல் பிரச்சனை தீரும். 

 

இப்போது நாம் உணவில் அதிகமாக நெய்யை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் நெய் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. முருங்கைக் கீரையில் பேராற்றல் உண்டு. ஆனால் இப்போது பலரும் அதைச் சாப்பிடுவதில்லை. தொடர்ச்சியாக முருங்கைக் கீரை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து நாம் வெளிவர வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை இதற்கு மிகவும் அவசியம். மருந்து மாத்திரைகளையும் மீறி, மன அழுத்தத்தை நாம் குறைத்தால் தான் சர்க்கரையின் அளவு குறையும். மூச்சுப் பயிற்சி இதற்கு மிகவும் உதவும்.

 


 

Next Story

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.

 

 

 

 

Next Story

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு பிரச்சனையா?  -  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் ஹெல்த் டிப்ஸ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Dr Suganthan | Digestion tips

 

தீபாவளி தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டு வயிறு மந்தமாகவே இருந்தால் பின்வருகிற டிப்ஸை பின்பற்றி சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன்

 

தீபாவளிக்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்திருப்போம். இப்போதைய பருவ கால மாற்றத்தால் இதில் உங்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. மழை காலம் என்பதால் சுடுதண்ணீர் வைத்து குளிப்பது நல்லது. மேலும் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் ராஸ்னாதி சூரணம் வாங்கி உச்சந்தலையில் வைத்தால் நல்லது. மேலும், கற்பூராதி தைலம் என்று கிடைக்கும். அதை வாங்கி தேய்த்து வருவதாலும் தலைவலி, சளி பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு மந்தமாக இருந்தால் ஓமம் சிறிதளவு எடுத்துக்கொண்டு, சுடுதண்ணியில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மந்தத்தால் வாந்தி எடுக்க முயன்றால், இதை குடிக்க வேண்டும். அப்போது இது சரியாகும். 

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்பட்டால் ஓமம், சீரகம், இந்து உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், காலையில் சிக்கல் சரியாகிவிடும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி தீனியால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

 

கடையில் தீபாவளி லேகியம் என்றே வைத்திருப்பார்கள். அவையெல்லாம் இது போன்ற வீட்டில் கிடைக்கும் மளிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவையே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.