Skip to main content

ஆயுளை வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும்? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்

Published on 30/06/2023 | Edited on 11/07/2023

 

 Dr Suganthan - Hair Problem

 

விடியற் காலையில் நாம் எழும்போது நல்ல ஆக்ஸிஜன் நமக்குக் கிடைக்கும். நமக்குத் தேவையான எனர்ஜி அனைத்தும் காலை 3 மணி முதல் 6 மணிக்குள் கிடைத்து விடுகிறது. அதன் பிறகு மலம் கழிப்பது அவசியம். வாரத்தில் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். அதுவும் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் இருக்கும் உஷ்ணம் வெளியேறும். ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இவ்வாறு குளிக்கலாம். காலை நேரத்தில் தான் குளிக்க வேண்டும்.

 

பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குளிக்கலாம். இதன் மூலம் உடல் எப்போதும் குளிர்ச்சியாக, ஏசி அறையில் இருப்பது போன்று இருக்கும். இன்று பலருக்கு முடி உதிர்தல் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் அந்தப் பிரச்சனையிலிருந்து நாம் விடுபட முடியும். உடலின் உஷ்ணம் குறையும்போது முடி உதிர்தலும் குறையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதத்தில் எரிச்சல் இருக்கும். எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் அதுவும் சரியாகும். 

 

இதன் மூலம் சர்க்கரையின் அளவும் குறையும். கேரள மக்கள் தங்களுடைய உணவிலும் குளியலிலும் தினசரி எண்ணெய் சேர்த்துக் கொள்வதால் அவர்களுக்கு கேன்சர் நோய் ஏற்படுவது குறைவாக இருக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சுடு தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். மதிய நேரத்தில் உறங்கக் கூடாது. அந்த நாளில் உணவில் நீர் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளக் கூடாது. வெற்றிலை பாக்கு போடுவதன் மூலம் உணவு எளிதில் ஜீரணமாகும்.
வெற்றிலை சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. இதன் மூலம் உடலுக்குள் இருக்கும் சளியும் எளிதில் வெளியேறும். செல்போனின் தாக்கத்தால் நம்முடைய கண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. கண்களில் எண்ணெய் தடவுவதன் மூலம் கண் பிரச்சனைகள் தீரும். மொபைல் போன் பார்ப்பதால் இன்று சிறு பிள்ளைகள் கூட கண்ணாடி போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கண்களில் நல்லெண்ணையை நாம் தடவுவதன் மூலம் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கிறது. இதன் மூலம் கண் பார்வை இன்னமும் சிறப்பாக இருக்கும். முடிந்தவரை சுட வைத்த நீரையே நாம் பருக வேண்டும். இதன் மூலம் உணவு எளிதில் செரிமானமாகும்.