Skip to main content

நீண்ட காலம் யார் தான் வாழ்கிறார்கள்? - டாக்டர் சசிகுமார் குருநாதன் விளக்கம் !

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
 Dr SasiKumar Gurunathan Interview

முந்தைய காலங்களில் இருந்தவர்கள் தான் ஆரோக்கியமாக இருந்தார்கள். இப்பொழுது உள்ளவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இது மருத்துவக் கூற்றின்படி எந்த அளவிற்கு உண்மை என்ற நம் கேள்விக்கு பிரபல முதியோர் நலம் சிறப்பு மருத்துவர் சசிகுமார் குருநாதன் பதிலளிக்கிறார்.

முந்தைய காலங்களில் உள்ளவர்களை விட இப்போது இருப்பவர்கள் வாழும் காலம் என்பது அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் வாழும் ஆண்டுகள் 40 முதல் 60 வயதிற்குள் முடிந்து விடும். ஆனால் இப்பொழுதெல்லாம் சர்வசாதாரணமாக 70 வயதிற்கு மேல் வாழ்கிறார்கள். நம்முடைய வாழ்வியலில் மாற்றங்கள் இருப்பினும், இப்பொழுது மருத்துவம், அறிவியல் எல்லாம் அடுத்தகட்டத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனால் இப்பொழுது சிறப்பானதொரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முந்தைய காலங்களில் கேன்சர் போன்ற நோய்களுக்கெல்லாம் மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வந்தாலே இறந்துவிடுவார்கள் என்ற சூழல்தான் நிலவி வந்தது. ஆனால் இப்பொழுது எல்லா நோய்களுக்குமான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இறப்பின் அளவு குறைந்திருக்கிறது. நோய்களை குணப்படுத்த முடியும், கட்டுக்குள் வைக்க முடியும். 

வெளிநாடுகளில் வயதாகி விட்டாலே தனக்கென்று ஒரு மருத்துவரை அடிக்கடி அணுகி நோய் எதாவது இருக்கிறதா? உணவில், வாழ்க்கை முறையில் என்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று பெரும் அக்கறை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். நம் நாட்டில் வயதானவர்கள் பலர் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளமாட்டேன். வேறு மருத்துவமுறையை அணுகி நோயை குணப்படுத்திக் கொள்கிறேன் என்று செல்வதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் மாற்று மருத்துவ மருந்துகளை ஒரு எக்ஸ்ட்ரா காம்ப்ளிமெண்டரியாக எடுத்துக் கொள்வார்களே தவிர அதையே நம்பி இருக்கமாட்டார்கள். 

மாற்று மருத்துவத்தை நோக்கி போகிறவர்கள் அலோபதி மருந்துகளை கெமிக்கல் என்கிறார்கள். கெமிக்கல் என்று எதுவும் தனியாக வந்து விடுவதில்லை, இங்கிருக்கிற பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. அவைதான் மருந்து, மாத்திரை, ஊசிகளாக இருந்து வருகிறது. அவற்றை எல்லாம் அக்காலத்தில் கண்டுபிடிக்கப்படவுமில்லை. அவற்றை இப்போது கண்டறிந்து பயன்படுத்தப்படுவதால் இறப்பின் விகிதம் குறைந்து இப்பொழுது உள்ள மக்கள் தான் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.

Next Story

வயதானவர்கள் அடிக்கடி தூக்கமாத்திரை எடுத்துக் கொள்ளலாமா? -  பிரபல மருத்துவர் சசிகுமார் குருநாதன் விளக்கம்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Dr SasiKumar Gurunathan  health tips

வயதான காலத்தில் தூக்கமின்மை சிக்கல் வருகிறதென்று மருத்துவர் பரிந்துரையின் பேரில் தூக்கமாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதற்கு வேறு ஏதாவது மருத்துவ அறிவுரை இருக்கிறதா? என்பதைப் பற்றி முதியோர் நலம் சிறப்பு மருத்துவர் சசிகுமார் குருநாதன் விளக்குகிறார்.

பெரும்பான்மையான மருத்துவர்கள் நோயாளிகளின் கட்டாயத்தில் பேரில் தான் தூக்க மாத்திரையை பரிந்துரைக்கிறார்களே தவிர நாங்கள் கொடுக்க மாட்டோம். தூக்கத்திற்கான இயற்கையான வழிமுறைகளேயே பரிந்துரைப்போம். மன அழுத்தம் பல்வேறு வகைகளில் இருக்கும், அப்படியானவர்கள் திடீரென இரவில் தூக்கமில்லாமல் எழுந்து உட்கார்ந்து கொள்வார்கள், அதை முதலில் சரி செய்ய சிகிச்சை அளிக்கும் போது தூக்க சுழற்சி சரியாகும். 

தூங்கும் முன் காபி குடித்தால் தூக்கம் வராது, தூங்கும் முன் நிறைய செயல்பாடுகளை தவிர்த்தல் நலம். குறிப்பாக போன் பார்ப்பது, டிவி சீரியல்களை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே இருப்பது, இரவு தாமதமாகி சாப்பிடுவது போன்ற செயல்பாடுகளெல்லாம் தூக்கமின்மையை உருவாக்கும். 

தூக்க மாத்திரை குறைந்த கால தீர்வாக எடுத்துக் கொண்டு, முறையான மருத்துவ சிகிச்சையை செய்து சரிசெய்து கொண்டு, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு தூக்க மாத்திரையை தூக்கத்திற்காக பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும். அது பழக்கமாக மாறும் பட்சத்தில் அதுவே நோயாகவும் ஆகக்கூடும்.

வயதானவர்களுக்கு மரணம் குறித்த பயத்தாலும் தூக்கம் வராமல் கஷ்டப்படுவதாக வெளிநாடுகளில் ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் வயதான காலத்தில் தீவிரமான ஆன்மீக சிந்தனை பலரை அதிலிருந்து வெளியே கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. எனவே தூக்கமாத்திரை எடுத்துக் கொள்வது என்பது தற்காலிக தீர்வே, அது நிரந்தர தீர்வல்ல. தூக்கம் வராமல் தவிக்கின்ற வயதானவர்கள் முறையாக மருத்துவரை அணுகி தங்களுடைய மனம், உடல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்ள வேண்டுமே தவிர, தூக்க மாத்திரை சாப்பிட்டால் தான் தூக்கம் வரும் என்று ஆகி விடக்கூடாது, அது ஆரோக்கியமானதல்ல.

Next Story

விடியற்காலை உடற்பயிற்சியால் இவ்வளவு சிக்கல்களா? - டாக்டர் அருணாச்சலம்  விளக்கம் 

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

 Is morning exercise such a problem? - Answered by Dr. Arunachalam

 

உடற்பயிற்சி மீதான அதீத மோகத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு பலர் ஆளாகி வருவதை நாம் பார்க்கிறோம். உடற்பயிற்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நம் கேள்விக்கு டாக்டர். அருணாச்சலம் விரிவான விளக்கத்தை அளிக்கிறார்.

 

அதிகாலையில் எழுந்து வாக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. உடற்பயிற்சிக்கு அதிகாலை நேரம் தான் சரியானது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு அவற்றைச் செய்வதால் பயனில்லை. ஏனெனில் அதிகாலை நேரம் தான் நாம் நன்றாக உறங்கும் நேரம். குறைந்தது 7 மணி நேரமாவது தூக்கம் அனைவருக்கும் வேண்டும். சரியான அளவு தூக்கம் இல்லாமல் உடற்பயிற்சி செய்யக்கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்று எந்த மருத்துவமும் சொல்லவில்லை.

 

உடல் உழைப்பு இல்லாமல், உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கும் நிலைக்கு இன்று நாம் வந்துவிட்டோம். நம்முடைய உடல் கடிகாரம் அதனுடைய இயல்பிலேயே இயங்க வேண்டும். தூக்கம் கெட்டுப்போனால் எந்தெந்த வியாதிகள் வரக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அவை அத்தனையும் வந்துவிடும். உடற்பயிற்சி கூடங்களில் இழக்கும் சக்தியை தண்ணீர் குடிப்பதன் மூலம் ஈடுசெய்ய வேண்டும். உடலில் வேர்வை தங்குவதைத் தடுக்க வேண்டும். உடலில் கிருமிகள் ஏற்படுவதற்கு இன்று பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. 

 

வயிற்றில் தான் அதிகம் கிருமிகள் ஏற்படும். விவசாயிகள் பலருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே இருக்கும். ஆனால் நகர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சிறிய அளவில் கிருமிகள் உள்ளே சென்றாலும் அதனுடைய பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். கிருமிகளின் தாக்கத்தினால் தான் வெளிநாடுகளிலிருந்து இங்கு வருபவர்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு போன்ற நம்முடைய பாரம்பரிய உணவு முறையையும் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்.