Skip to main content

மூல நோய் சில புரிதல்கள் - விளக்குகிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன்

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

 Dr Kannan Health tips 

 

ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் முறை தற்போது அதிகமாகியுள்ள சூழ்நிலையில், அதனால் ஏற்படும் மூல நோய் குறித்து விரிவாக விளக்குகிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன் அவர்கள்.

 

ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கத்தைத் தான் நாம் மூலம் என்கிறோம். நம்முடைய நவீன வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் மூலமும் ஒன்று. சிலர் நீண்ட நேரம் அமர்ந்துகொண்டோ நின்றுகொண்டோ வேலை செய்வார்கள். ஐடி துறையில் வேலை செய்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். இவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். சரியான வகையில் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது முக்கியமான காரணம். இவர்களுக்கு மூல நோய் ஏற்பட அதிகமான வாய்ப்புண்டு. உடல் பருமன் இருப்பவர்களுக்கும் இது ஏற்படும்.

 

தொற்றுகளால் சிலர் ஒரு நாளைக்கு 15 முறைக்கு மேல் கூட மலம் வெளியேற்றுவார்கள். இவர்களுக்கும் மூலம் ஏற்பட வாய்ப்புண்டு. மலக்குடலில் கேன்சர் உள்ளவர்களுக்கும் இது நடக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் அழுத்தம் காரணமாக மூலம் உண்டாகலாம். 45 வயது முதல் 65 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மூலம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இரத்தப்போக்கு தான் மூல நோயின் முக்கியமான அறிகுறி. ஆசனவாய் பகுதியில் வீக்கம், எரிச்சல், வலி ஆகியவையும் ஏற்படலாம். மூல நோய் 4 நிலைகளைக் கொண்டது.

 

முதல் நிலையில் மலம் வெளியேற்றும்போது வலி இருக்கும். முதலில் அது மூலநோய் தானா என்பதை நாங்கள் பரிசோதிப்போம். மலச்சிக்கல் என்றால் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளச் சொல்வோம். மாதுளை, பப்பாளி, கொய்யாப்பழம், வாழைப்பழம், உலர் திராட்சை ஆகியவை உடலுக்கு நல்லது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 60 கிலோ எடை உள்ளவர்கள் மூன்று லிட்டர் தண்ணீரையாவது தினமும் குடிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், தியானமும் செய்ய வேண்டும்.

 

தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும். இரண்டாம் நிலை மூலத்துக்கும் இதே தீர்வு தான். மூன்றாம் நிலை மூலத்தை லேசர் ட்ரீட்மென்ட் மூலமும் அறுவை சிகிச்சை மூலமும் குணப்படுத்தலாம். நான்காம் நிலை மூலத்தை அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும். வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலமும் சிகிச்சைகளின் மூலமும் குணப்படுத்தக்கூடிய நோய் தான் மூல நோய்.

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.