Skip to main content

பிரசவ நேரத்தில் மயக்க மருந்து ஏன் போட வேண்டும்? - மயக்கவியல் நிபுணர் டாக்டர் கல்பனா விளக்கம்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Dr Kalpana | Anesthesia | pragnency |

 

மயக்க மருந்து குறித்த புரிதலை நமக்கு உண்டாக்குகிறார் மயக்கவியல் நிபுணர் டாக்டர் கல்பனா.

 

சினிமாவில் ஒரு துணியில் தண்ணி போல ஏதோ ஒன்றை தெளித்து மூக்கில் வைப்பார்கள் உடனே மயங்கி விடுவார்கள். அல்லது ஸ்பிரே போன்று ஏதோ ஒன்றை அடித்ததும் மயங்கி விடுவார்கள் என்று காண்பிப்பது உண்டு. அப்படி யாரையும் உடனடியாக மயக்கமாக்கி விட முடியாது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.  

 

அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் இருப்பதற்காகத்தான் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. கைகளில், முதுகில், தோள்பட்டையில், கால் பாதங்களில் எனப் பல்வேறு வகைகளில் செலுத்தப்படுகிற மயக்க மருந்து உண்டு. குறிப்பிட்ட இடத்தில் ஒரு சின்ன கட்டியை நீக்குகிறோம் என்றால் அதைச் சுற்றி வலி மரத்துப் போகும் தன்மைக்காக மயக்க மருந்து ஊசி வழியாகச் செலுத்தப்படும்.

 

18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக கொடுத்து மயக்க நிலைக்கு செல்ல வைத்து அறுவை சிகிச்சை செய்வார்கள். ஆனால் அது வலியை ஏற்படுத்தச் செய்யும். ஆனால் முறையான மயக்க மருந்து ஊசி வந்த பிறகு வலியின் தன்மை மரத்துப்போகச் செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து ஊசி போடப்படும். அது இடுப்பிற்கு கீழே மரத்துப்போகச் செய்யும். ஆனால் உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டது போன்ற உணர்விலும் இருக்கச் செய்யும். அதே சமயத்தில் குழந்தை பிறந்த உடனேயே அதன் அழுகுரல் கேட்டதுமே தாயால் அந்த குழந்தையை தொட்டு தடவிப் பார்க்கும் அளவிற்கு உணர்வும் இருக்கும். முழு அனஸ்தீசியா கொடுக்காமல் முதுகுத் தண்டில் மட்டும் கொடுக்கும் மயக்க மருந்து ஊசியால்தான் உங்களுக்கு பிரசவம் நடக்கிறது.

 

பிரசவ வலியைப் போன்று உலகில் வேறு எந்த வலியும் கிடையாது. அந்த அளவிற்கு கொடுமையான வலி பிரசவத்தின் போது உருவாகும் வலி. வலியே இல்லாமல் பிரசவத்தினை அறுவை சிகிச்சை மூலமாக செய்வதற்கு தான் அனஸ்தீசியா என்னும் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. பிரசவத்தின் போது கர்ப்பப்பையானது கரு முழு வளர்ச்சி அடைந்து விட்டது என்று வெளியேற்றும் வேலையை செய்யும் அதனால்தான் பிரசவத்தின் போது வலி ஏற்படுகிறது.

 

சுயமாகவே குழந்தை வெளியே வரும்போதும் வலி ஏற்படும். அதை தாங்க முடியாத நிலையில் லேபர் அனஸ்தீசியாவின் தேவை குறித்து கர்ப்பிணிகளுக்கு தெரிவித்து அந்த ஊசியை செலுத்தும்போது வலியற்று குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும்.

 


 

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை

Published on 20/12/2023 | Edited on 20/12/2023

 

 Woman rescued by helicopter has baby boy

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. முன்னதாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் சிக்கியிருந்த 1000க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்த மூன்று நாட்களாக உணவு, குடிநீர் இன்றி அவதி அடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

அதே சமயம் ரயிலில் மீதமுள்ள 530 பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் நேற்று மாலை மீட்கப்பட்டனர். 6 பேருந்துகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதற்கு முன்னதாக சூலூரில் இருந்து வந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரின் உதவியுடன் கர்ப்பிணி பெண்,  3  குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் அனுசுயா மயில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.