Skip to main content

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம். 

 

 

Next Story

ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா? - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

  DrNithiya | Siddha | Sleepless |

 

தூக்கமின்மையால் வரும் சிக்கல்கள் குறித்து சித்த மருத்துவர் நித்யா விளக்கம் அளிக்கிறார்.

 

இன்றைக்கு இருக்குற காலகட்டத்தில் பல நோய்களுக்கு காரணமாக இருப்பது தூக்கமின்மை பிரச்சனைதான். இது வயது வித்தியாசமின்றி எல்லா வயதினருக்கும் உள்ளது. இரவில் சில வேலைகளை செய்வதால் தூக்கம் வந்தும் நாம் தூங்காமல் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கிறோம். குறிப்பாக இரவில் அதிகமாக போன் பயன்படுத்திக் கொண்டிருப்பதும், நைட் சிப்ட் வேலை செய்து அதனால் நான் பகலில் தூங்கி சமப்படுத்திக் கொள்கிறேன் என்று நினைப்பது முற்றிலும் தவறானதாகும். 

 

ஒரு நாளுக்கு எட்டு மணி நேர உறக்கம் என்பது மிக மிக முக்கியமானது. எப்போதாவது இதில் முன்ன பின்ன கூடுதல் குறைதல் இருந்தால் பிரச்சனையில்லை. எப்போதுமே இந்த தூக்க நேரம் குறைந்தால் உடலுக்கு கண்டிப்பாக சிக்கலை உருவாக்கும். சித்த மருத்துவத்தை பொறுத்தவரை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றிற்கு முக்கியத்துவம் தரப்படும்.

 

பித்தம் அதிகரித்தால் தூக்கமின்மை சிக்கல் உருவாகும். பித்தம் எப்படி அதிகரிக்கிறது என்றால் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் பித்தம் அதிகரிக்க காரணமாகும். சிலர் எவ்வளவு தூங்கினாலுமே நான் அசதியாக இருக்கிறேன், தூங்கியது போலவே இல்லை என்பார்கள். இதற்கெல்லாம் பித்தப் பிரச்சனை காரணமாகிறது. உடலின் உள் உறுப்புக்களான கிட்னி, கல்லீரல், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தூக்கமின்மை முக்கிய காரணமாக அமையும்.

 

ஒழுங்காக தூங்காதபோது உள் உறுப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். இது நோய் வர வழிவகுக்கும். காலை எழுந்ததும் தலைவலி இருப்பது, முடி கொட்டுவது, காதில் இரைச்சல் இருப்பது போல உணர்வது இதெல்லாம் தூக்கமின்மையால் நோய்கள் பெரிதாய் வரப்போவதற்கான ஆரம்ப அறிகுறிகள். தூக்கமின்மையால் மலச்சிக்கல் உருவாகும்.