Skip to main content

இரத்தசோகைக்கு தீர்வு என்ன? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்கம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

 Dr Arthi | Homeopathy | Health care

 

இரத்த சோகை குறித்தும் அதன் தீர்வு குறித்தும் ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்

 

இரத்த சோகை என்றாலே உடலில் இரத்தம் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஹீமோகுளோபினை வைத்து தான் இதை நாம் கண்டறிய முடியும். இரத்த சோகை இருப்பவர்கள் எப்போதும் பலவீனமாக இருப்பது போல் உணர்வார்கள். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அவர்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கும். 

 

இரத்த இழப்பு காரணமாகவும் இரத்த சோகை ஏற்படும். முடி உதிர்தல், நெஞ்சு படபடப்பு ஏற்படுதல், இதயத்துடிப்பு சீரான நிலையில் இல்லாமல் இருத்தல், தலைசுற்றல், எப்போதும் தூக்க நிலையில் இருத்தல் போன்ற பல்வேறு அறிகுறிகள் இரத்த சோகை நோய்க்கு உண்டு. பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படும். ஆண்களுக்கு சர்க்கரை, சிறுநீரக நோய், கேன்சர், அல்சர் போன்ற நோய்கள் இருக்கும்போது இரத்த சோகை ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலத்தை சமாளிப்பது கடினமாக இருக்கும். 

 

இந்த நோயால் மிகவும் சோர்வாக உணரும்போது யாராவது கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் நிச்சயம் கோபம் வரும். இரத்த சோகை இருப்பவர்களுக்கு தூக்கம் அதிகமாக வரும். உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஹீமோகுளோபின் செல்லாமல் இருப்பதே இதற்கான காரணம். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைக் கீரையை உணவாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம். நாம் வெட்டிய உடனேயே கருத்துவிடும் காய்கறிகளும் பழங்களும் இரும்புச்சத்து அதிகம் உள்ளவை. அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

அத்திப்பழம், பேரிச்சம்பழம், பாதாம், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை சாப்பிடுவது நல்லது. ராகி, சாமை, தேன் நெல்லிக்காய் ஆகியவை நல்லது. மட்டனில் உள்ள சுவரொட்டி மிகவும் நல்லது. ஆட்டு ரத்தம், மீன் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். முடிந்த அளவுக்கு நிறைய காய்கறிகள், பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நாம் கவனிக்காமல் விட்டால் மரணம் வரை கூட செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிக சோர்வாக உணர்ந்தால் நிச்சயமாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 

 

 

Next Story

மூல நோய்க்கு என்னதான் தீர்வு? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி  விளக்கம்

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

homeopathy Doctor Arthi health tips

 

பைல்ஸ் பிரச்சனை குறித்தும் அதற்கான சிகிச்சை வழிமுறைகளைப் பற்றியும் ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்.

 

ஆசனவாயில் உள்ள நரம்பு வீக்கத்தினால் ஏற்படுவது தான் பைல்ஸ் என்கிற மூல நோய். உள்ளுக்குள் இருக்கும் பைல்ஸ் நோயில் நமக்கு எந்த அறிகுறியும் தெரியாது. வெளியேற்றத்தின் போது ரத்தம் வெளிவரும். வெளியே ஏற்படும் பைல்ஸ் நோயில் அதிகமான எரிச்சல் இருக்கும், உட்காரும்போது வலி ஏற்படும். வெளியேற்றத்தின் போது கொஞ்சமாகவோ அதிகமாகவோ ரத்தம் வெளிவரும். பலருக்கு ஏற்படும் பைல்ஸ் என்பது வெளியே ஏற்படுவது தான். 

 

பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்படும். அதிகமான பளுவைத் தூக்குபவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும். கர்ப்ப காலத்தில் இருப்பவர்கள், வயதானவர்கள், குறைவான அளவில் தண்ணீர் குடிப்பவர்கள் ஆகியோருக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் மருந்துகளின் விளைவுகளினால் கூட இது ஏற்படும். குழந்தைகளைப் பொறுத்தவரை மலச்சிக்கல் மட்டுமே இதற்கான அறிகுறியாக இருக்கும். 

 

30 வயதுக்குப் பிறகு பலருக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்படும். ஹோமியோபதியில் இதற்கான நல்ல மருந்துகள் இருக்கின்றன. ஆரம்ப கட்டத்திலேயே நம்மிடம் வரும்போது இதை முழுமையாக குணப்படுத்த முடியும். பைல்ஸ் பரிசோதனைக்காக மருத்துவரை அணுகுவதற்கு நாம் கூச்சப்படக்கூடாது. காலம் தாழ்த்தி மருத்துவரிடம் சென்றால் நோயை குணப்படுத்துவது கடினமாகிவிடும். ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொண்டால் மீண்டும் பைல்ஸ் நோய் வராது. 

 

ஹோமியோபதியில் உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற எண்ணத்தில் பலர் நம்மிடம் வருகின்றனர். ஆனால் முழுமையாக குணமடைய நிச்சயம் காலம் எடுக்கும். இனிப்பு உணவுகள், மைதா, கோதுமை, கேக் போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். கீரை, காய்கறிகள், பழங்களை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பாத்ரூமில் நீண்ட நேரம் செலவழிக்கக் கூடாது. உணவு உண்ணுவதற்கு சற்று இடைவெளி விட வேண்டும்.

 

நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றுக்கு அழுத்தம் கொடுப்பதுபோல் உடை அணியக்கூடாது. தண்ணீரால் ஆசனவாயை சுத்தப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் நிச்சயமாக சுத்தப்படுத்தலாம். மருந்துகளோடு சேர்த்து நாம் சுத்தமாக இருப்பதும் முக்கியம்.

 

 

Next Story

செரிமான கோளாறுக்கும் கேன்சருக்கும் என்ன சம்பந்தம்? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்கம்

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

 Dr.Arthi |Homeopathy| Digestive disorder

 

செரிமான கோளாறுக்கான காரணங்கள் குறித்து ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்

 

நெஞ்சு எரிச்சல் என்பது பலருக்கும் நிகழக்கூடிய ஒன்று. நேரம் தவறி சாப்பிடுவது இதற்கான முக்கியமான காரணம். நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, அதிகமான அளவில் உண்ணுவது, இரவு நேரங்களில் மிகத் தாமதமாக சாப்பிடுவது, சாப்பிட்ட உடனேயே படுப்பது, ஆல்கஹால் எடுத்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் இது ஏற்படும். முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே வந்த இந்தப் பிரச்சனை, இப்போது இளைஞர்களுக்கும் வருகிறது. இதற்கான காரணம் நம்முடைய உணவு முறைதான்.

 

ஆரோக்கியமான உணவு முறை என்பதையே நாம் மறந்துவிட்டோம். எண்ணெய் நிறைந்த உணவுகள், காரமான உணவுகள், துரித உணவுகள் என்று இவற்றைத் தான் நாம் அதிகமாக உண்ணுகிறோம். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதும் தவறு. உணவில் எதையுமே அதிகமாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை தான். உடலுக்கென்று ஒரு கடிகாரம் இருக்கிறது. அதை நாம் மாற்றாமல், செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டும். 

 

நடைமுறையை நாம் மாற்றும்போது, உணவு வயிற்றுக்குள் செல்லாமல் மேலே வரும். இதனால் ஏப்பம் உள்ளிட்டவை ஏற்படும். இதனால் இதயத்துக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் அதிகமான எண்ணெய் உணவுகளை நாம் பயன்படுத்தினால், இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உணவுக்குழாய் தான் முதலில் பாதிக்கப்படும். இது கேன்சர் வரை கூட கொண்டுபோய் விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வது தவறு.

 

மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். குப்பை போல் வயிற்றுக்குள் அனைத்தையும் நாம் அடைக்கக் கூடாது. ஆரோக்கியமாக நம்முடைய வாழ்க்கை முறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். செரிமான கோளாறு பிரச்சனைக்கு ஹோமியோபதி சிகிச்சை முறையில் நிறைய மருந்துகள் இருக்கின்றன. அறிகுறிகளை வைத்து சரியான சிகிச்சை வழங்கப்படும். இதில் முழுமையான தீர்வு கிடைக்கும்.