Skip to main content

உடல் பருமன் குழந்தையின்மையை ஏற்படுத்துமா? - விவரிக்கிறார் கருவுறுதல் நிபுணர் டாக்டர். தாட்சாயினி

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

Does obesity cause infertility?

 

குழந்தையின்மை பிரச்சனை என்பது பலரும் சந்திக்கக் கூடிய ஒன்று. அதற்கான காரணங்கள் குறித்தும் தீர்வுகள் குறித்தும் கருவுறுதல் நிபுணர் டாக்டர் தாட்சாயினி விவரிக்கிறார்.

 

குழந்தையின்மை என்பது பெண்களால் மட்டும் ஏற்படுவது அல்ல என்பதை நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இருபாலருக்கும் அதில் சமமான பங்கு உள்ளது. பெண்கள் பருவம் அடைவது என்பது பொதுவாக 12 வயது முதல் 15 வயதுக்குள் நடக்கக் கூடியது. ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் 10 வயதிலேயே பருவம் அடைவதும் நிகழ்கிறது. அந்தக் குழந்தைகள் அதிக உடல் பருமனோடு இருக்கின்றனர். இதற்கு உணவுப் பழக்கங்களும் காரணமாக இருக்கலாம்.

 

அப்படி உடல் பருமனோடு வளரும் குழந்தைகள் திருமணம் முடிந்த பிறகு குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆளாக நேரிடுகிறது. பிறக்கும்போதே சரியான கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களும் இருக்கலாம். இதனால் தாமதமாகப் பருவம் அடைதலும் நிகழலாம். இவர்களுக்கு நிச்சயம் சிகிச்சை தேவைப்படும். கர்ப்பப்பையின் வடிவம் மாறினாலும் பிரச்சனை ஏற்படும். சினைப்பையில் உள்ள நீர் கட்டிகளாலும் மாதவிடாயில் பிரச்சனை ஏற்படுகிறது.

 

இவர்களுக்கு ஆண் ஹார்மோன் அதிகம் இருப்பதால் முகத்தில் அதிக அளவிலான முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சினைப்பையில் ரத்தக் கட்டிகள் ஏற்படுவதும் முக்கியமான பிரச்சனை. பெண்ணின் மாதவிடாய் வரலாற்றை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் பிரச்சனை என்ன என்பதைக் கண்டறிய முடியும். ரத்தப் பரிசோதனை மிக முக்கியமானது. இதன் மூலம் எந்த வகையான சிகிச்சை அவர்களுக்குத் தேவை என்பதை மருத்துவர்களால் முடிவு செய்ய முடியும்.

 

 

Next Story

குழந்தையின்மைக்கு இந்த முத்திரை தீர்வா? - சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Infertility - dr salai jaya kalpana Mudra 

குழந்தையின்மை, பிசிஓடி போன்ற பிரச்சனைகளுக்கு முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

பி.சி.ஓ.எஸ் என்று சொல்லக்கூடியது 'பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ரோம்'. பொதுவாக சின்ரோம் என்று சொன்னால் நிறைய குறைபாடுகளை கொண்டிருக்கும். ஹார்மோன்ஸ் சரியின்மை, குழந்தை கருத்தரித்தலில் பிரச்சனை, முகத்தில் முடி முளைத்தல்,  தூக்கமின்மை, மாதவிலக்கு முறையின்மை என்று பல குறைபாடுகளை சேர்த்துச் சொல்வது. இந்த பிரச்சனைக்கு பிராண முத்திரை, அபான முத்திரை செய்யலாம். 

அபான முத்திரையை வெறும் வயிற்றில் கட்டை விரல் நுனியுடன், சுண்டு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற இரு விரல்கள் நீட்டி உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வரும்போது, குழந்தையின்மை, காரணம் இல்லாமல் குழந்தைப்பேறு தள்ளிப் போவது, பி.சி.ஓ.டி தொந்தரவு, குறிப்பாக கருப்பை குழாயில் அடைப்பு இருந்து அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாமல் இருப்பவர்கள் மூன்று மாதம் செய்யும்போது கண்டிப்பாக தீர்வு காணலாம். 

Mudra

நிறைய பேர் சினைமுட்டை வெளிவந்து அது முதிர்ச்சி அடைய மாற்றி மாற்றி ஹார்மோனல் ஊசி போட்டுக் கொள்வர். அப்படி இருக்கும்போது, இந்த முத்திரையை செய்வதன் மூலம் மட்டுமே இயற்கையாக அந்த சூழல் உடலில் நடக்கும். கழிவு நீக்க முத்திரையில் ஆரம்பித்து, பஞ்சபூத முத்திரையில் சமப்படுத்தி, தசவாயுக்களில் இருக்கும் ஐந்து வாயுக்களுக்கான முத்திரையில் இருக்கும் பிராண முத்திரை, அபான முத்திரைகளை செய்து வரும்போது முழுமையாக இந்த பி.சி.ஓ.டி, குழந்தையின்மை போன்ற தொந்தரவுகளுக்கு  தீர்வு காணலாம்.

அடுத்து பெண்களுக்கு, பி.சி.ஓ.டி க்கு நிகராக இருந்து வருவது தைராய்டு பிரச்சனை. இதில் குறிப்பாக ஹைபோ தைராய்டுக்கு முதல் அறிகுறியாக மாதவிலக்கு பிரச்சனை. ஏற்கனவே பி.சி.ஓ.டி இருப்பவர்குளுக்கு எடை அதிகரிப்பு, உடல் சோர்வு, மனச் சோர்வு, தோல் வறட்சி, தலை முடி வறட்சியாக காணப்படும். இதற்கெல்லாம் சூரிய முத்திரை நல்ல தீர்வு கொடுக்கும். மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மத்த விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இதை இரண்டு கைகளிலும், இரண்டு வேளையிலும் 10 முதல் 20 நிமிடம் வரை செய்யவேண்டும். உடல் வெப்பம் அதிகம் இருப்பவர்களும், தொந்தரவு இல்லாதவர்களும், வெப்ப மண்டலங்களில் வசிப்பவர்களும், கோடை காலத்திலும் செய்யக்கூடாது. மேலும் செய்யும்போது நீர்க்கடுப்பு வந்தாலோ, கல்லடைப்பு பிரச்சனை ஏற்கனவே இருந்து எடுத்தவர்களோ, அதற்கான அறிகுறி தென்பட்டாலோ உடனடியாக இந்த முத்திரையை விட்டு விட வேண்டும். செய்து முடித்தவுடன் கண்டிப்பாக தண்ணீர் பருக வேண்டும். இதிலே குரல் தொந்தரவும் இருப்பவர்கள் சங்கு முத்திரை செய்து வரலாம்.   

முத்ரா

ஒரு கை உள்ளங்கையில் மற்றொரு கையின் கட்டை விரலை வைத்து மற்ற விரல்களால் கட்டை விரலை மூடிவிட்டு, மீதி நான்கு விரல்களின் நுனியை கட்டை விரலின் நுனி மீது தொட வேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். சங்கின் தன்மை, சங்கின் நாதம், சங்கின் ஒலி இவை அனைத்தும் நம் உடலின் நரம்பு மண்டலங்களை சுத்திகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. குரலை சார்ந்து இருக்கும் பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள், தைராய்டு நோயினால் ஏற்பட்டிருக்கும் குரல் தொந்தரவுக்கு இந்த முத்திரை கொண்டு நிச்சயமாக தீர்வு காணலாம். மேலும் இதன் மூலமாக பாசிட்டிவ் எனெர்ஜியை நன்கு பெறலாம்.

Next Story

ஒழுங்காக தூங்காவிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Dr Arunachalam | Insomnia |

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் நாம் வாழும் இன்றைய நவீன உலகில், நம் நேரத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை, தவிர்க்கமுடியாத சங்கிலியாக அது தூங்கும் நேரத்தையும் சேர்த்து கடன் வாங்கிகொள்ளத்தான்  செய்கிறது. அமெரிக்க மனநல சங்கத்தின் படி, மூன்றில் ஒரு பங்கு மக்கள் தூக்கமின்மை அறிகுறிகளைப் புகாரளிப்பதாகவும், 6 முதல் 10 சதவீதம் பேர் தூக்கமின்மை சிகிச்சையை சந்திக்கும் அறிகுறிகளையும் கொண்டுள்ளனர். ஒரு நாள் அல்லது இரண்டு நாள்  தூக்கம் கெடுவது ஒரு முக்கியமான பிரச்சனை அல்ல. ஆனால் அதுவே வாரங்களாக, மாதங்களாக தொடரும்போது தான் அது அந்த தனிபட்ட நபரை மட்டுமல்லாது, அவரை சார்ந்த முழு குடும்பத்தின் இயக்கவியலையும் பாதிக்கிறது. இப்படியான தூக்கமின்மையின் காரணிகளையும், விளைவுகளையும், பற்றி மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடன் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.. 

தூக்கமின்மையால் இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் பாதிப்படைய பெரிய காரணங்கள் என்ன ? அதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

அக்கியூட் இன்சோம்னியா என்று குறிப்பிடுவது ஒரு இரவு முழுக்க தூங்காமல் இருப்பது, ஒரு சில வாரங்களோ அல்லது, வாரத்திற்கு 3 நாள் என்று மூன்று மாதங்கள் நீடித்து இருக்கும் நிலையை தூக்கமின்மைக்குள்  வகைப்படுத்தலாம். தூக்கம் என்பது நம் செல்போன்க்கு ரீச்சார்ஜ் செய்வது போன்று. தூக்கம் இல்லையென்றால் ஒருநாள் சமாளிக்கும் உடம்பு, அதுவே வாடிக்கையாகும் போது நம் சிந்தனை வேகம் குறைவது முதல் மனஎரிச்சல் வரை  வருகிறது. 

நான் 1994ல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்தபோது ஒரு நோயாளி மட்டுமே காணப்பட்ட நிலையில், நைட் ஷிப்ட் , ஐ .டி  நிறுவனங்கள் தொடங்கிய காலம் பிறகு, தூக்கமின்மையால் வரும் அவ்வளவு நோய்களையும் பார்க்க வேண்டி வருகிறது. தண்ணீரை எவ்வாறு முறைப்படுத்தி காய்ச்சி குடிக்கவேண்டும் என்று நோயாளிகளுக்கு எடுத்துரைக்கும்போதே, இவ்வாறு அனுப்பிவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு நோயாளிகளே வரமாட்டார்கள் என்று என்னிடம் கருத்துகள்  வந்தது. இது இல்லையென்றால் இன்னொரு நோய் வரும் என்று பதிலளித்தேன். அதுபோல இப்போது பொது வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, அது சிறுநீர் கல் பிரச்சனைகளுக்கு வழிசெய்து, மருத்துவமனைக்கு சென்று அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

எனவே, நாம் என்னதான் கற்பித்தாலும், அது வேறொரு பாதையைதான் சென்று அடைகிறது. தூக்கமின்மை நோயாளிகளை அதிகமாக இன்று பார்ப்பது  போல் 1994ல் பார்த்தது இல்லை. காலத்திற்கேற்ப, மனிதன் தன் உடலை புரிந்துக்  கொள்ளாத வரைக்கும் நோய்  வந்து கொண்டே இருக்கும். 

தூக்கமின்மை வராமல் இருக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

நம் உடல் ஒரு கிரோனோலோஜிக்கல் கிளாக்கின்  கட்டளைப்படி தான் இயங்கி வருகிறது. அந்த 24 மணி நேரம் இயங்கும் கடிகாரத்திற்கு ரிதம் தான் பிடிக்கும்.  எப்படி காலை, மாலை என்று இரு வேளையும்  சூரியன் உதிக்கும் நேரமும், அஸ்தமன நேரம் தவறாமல் நடப்பதை போன்றது அது. பகலில் தூங்கி, இரவில் விழிக்கும் விலங்குகளைப்  போன்று அல்லாது, இரவில் தூங்கி பகலில் 12 மணி நேரம் இயங்கும் விலங்குகளை சேர்ந்தவர்களே மனிதர்கள். நம் உடலே இயற்கையின் ரிதமோடு ஒன்றியது தான். சூரியனால் உதயமாகும் மலர்கள் முதல், கண்கள் தெரியும் விலங்குகள் வரை,  சூரியன் உதித்தலோடு வாழ்க்கையை தொடர்ந்து, சூரியன் மறையும் வரை முடித்து 12 மணி நேரம் ஓய்வெடுக்கும் வகையாகத்தான், நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. 

தூங்கினால் மட்டும்தான் பல உறுப்புகள் சரியாக இயங்கும். 3 மாதம் தொடர்ந்து தூங்காத ஆண்களுக்கும், 6 மாதம் தொடர்ந்து தூங்காத  பெண்களுக்கும், வாழ்க்கை முறை மாற்ற நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மரணங்கள் அதிகமாக உலகில் காணப்படுவதற்கு இது போன்று தொற்று அல்லாத நோய்களே  பெருமளவு காணப்படுகிறது. இதற்கு தூக்கமின்மை மிக முக்கியமாக இருக்கிறது. மன அழுத்தம் அல்லது வேலையை சரியாக கையாளுதல் இல்லாமல்  இருப்பது போன்ற காரணியாக தூக்கமின்மைக்கு  இருக்கலாம்.  

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திருமணமான பெண்களையும் , ஆண்களையும் இது மிகவும் பாதித்தது. இரவெல்லாம் அலுவலகத்தில் மேலாளரோடு வேலை நிமித்தமாக வாக்குவாதம் செய்கிறார்கள் என்றெல்லாம் பாதிக்கப்பட்ட  அவரவர் தந்தைமார்கள் என்னிடம் கூட்டி வருவார்கள். இதுபோன்று காலகட்டத்தில் உழைக்கும்போதும், குறிப்பாக கல்வியும் இதில் முக்கிய பங்காக இருக்கிறது. என்னைப்பொறுத்த வரை ஒரு தொழிலை செய்வதற்கு அவனின் ஈடுபாடு தெரிந்து வாய்ப்பை தருவதே முக்கியமானதாக இருக்க முடியுமே தவிர்த்து, மனப்பாடம் செய்து வென்று ஒரு சமுதாயத்தில் நல்ல தொழில் வல்லுநராக இருப்பது கேள்வி குறியாகவே இருக்கிறது. 

ஒரு தாயார், தன் மகள் இரவு 12 மணி நேரம் தாண்டி படிப்பதாகவும், முடி கொட்டுவதாகவும் சமீப காலத்தில் நிறைய பேர் என்னிடம் வருகிறார்கள். இப்படி இரவு உறங்காமல் படித்து கொண்டே இருந்தால் பகலில் ஒன்றுமே நினைவில் இருப்பதில்லை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரவர் வாழ்க்கையை எவ்வாறு தயார்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இது விளைகிறது. எனவே தூக்கம் என்பது உடலை பொறுத்த வரை, மிக மிக அத்தியாவசியமான  தேவை. எனவே தூக்கமின்மையை விட்டு நல்ல தூங்கும் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.