Skip to main content

நீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா? இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

tourism

 

ஒட்டுமொத்த உலகமும் கரோனா வைரஸால் ஸ்தம்பித்துப்போன நிலையில், சுற்றுலா தளங்கள் அனைத்தும் 2020 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

 

கரோனாவால் வீட்டைவிட்டு வெளியே போக முடியாமல் பலரும் முடங்கிக் கிடந்த சூழலில், புத்தாண்டு மற்றும் கிறித்துமஸ் விழாக்களை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் மூலம் மகிழ்ச்சியாக கொண்டாடிய பல தருணங்கள் நினைவூட்டப்பட்டு, மீண்டும் அதே இடங்களைச் சுற்றி பார்க்கும் ஏக்கத்தை தூண்டியிருக்கின்றன.

 

எனவே, தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியினைக் கருத்தில் கொண்டு குறைந்த செலவிலும், சுற்றி பார்ப்பதற்கு பாதுகாப்பான முறையிலும் உள்ள 5 அழகான வெளிநாட்டு சுற்றுலாத்தலங்கள் தேர்தெடுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

இலங்கை  

 

இலங்கையானது உலகின் பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு, பார்த்தே ஆக வேண்டிய ஒரு நாடாக அவர்களின் பட்டியலில் ஆண்டுதோறும் இடம்பிடித்து வந்துள்ளது.  

 

இங்கு குறைந்த செலவில் விடுதிகள் கிடைக்கிறது. ஒரு நாளைக்கான சுற்றுலா கட்டணம் இந்திய மதிப்பில் 1500 ரூ முதல் 2000 ரூ மட்டுமே.

 

இங்குள்ள காலி கடற்கரை, கண்டி மலைப்பகுதி, அனுராதபுர பொலநறுவை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் பெளத்த விகாரகைகள் முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன.

 

இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய உணவு, கொட்டிக்கிடக்கும் வளம், மத்திய மலைநாட்டு இயற்கை காட்சிகள், மற்றும் விருந்தினர்களை உபசரிக்கும் தன்மை என பல்வேறு காரணங்களால் வேறு எந்த நாட்டையும் விட இலங்கை தனித்தன்மை வாய்ந்ததாக திகழ்கிறது.

 

இங்குள்ள துறைமுகம், புவியியல் அமைவிடம், காலநிலை, புனித மேரி தேவாலயம், ஏராளமான வண்ணமயமான பூங்காக்கள் போன்றவை மிக அழகாக, பார்ப்பவரைக் கவரும் வண்ணம் உள்ளன.

 

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

 

மாலத்தீவு

 

மாலத்தீவு இந்திய பயணிகளுக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்றாகும். மிகவும் குட்டி நாடான மாலத்தீவு முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கிறது.

 

மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு போன்றவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்களாகும். மேலில் இருக்கும் வெள்ளி தொழுகை மசூதி உலகின் பழமையான மசூதிகளில் ஒன்று.

 

மாலத்தீவின் அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் அள்ளும் இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வண்ணம் அமைந்துள்ளன.

 

இங்கு நீங்கள் சுற்றிப்பார்க்க பொது படகுகளை எடுத்துச் செல்லலாம். இருப்பினும், வாரத்தின் 7 நாளும் அவை இயங்காததால், அவற்றின் கால அட்டவணையை நீங்கள் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

இங்கு ஒரு நாளைக்கு செலவாகும் சுற்றுலா கட்டணங்கள் (இந்திய மதிப்பில்) 2,000 ரூ முதல் 2,500 ரூ மட்டுமே. இங்கு ஒரு நாளைக்கு 80 ரூ முதல் 100 ரூ வரை குறைந்த விலையில் உணவுகள் கிடைக்கின்றன.

 

நேபாளம்  

 

உலகின் மிக உயர்ந்த மலைத்தொடர்களை கொண்ட நேபாளத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் போன்றவை சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவா்ந்துள்ளது.

 

நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல விரும்பினால், நேபாளம் சிறந்த இடமாகும். இந்திய - நேபாள எல்லையில் இருந்து ஒருமணி நேரத்தில் நேபாளத்தில் உள்ள முக்கிய மலை பிரதேசங்களை அடைந்துவிட முடியும். இங்கு, அதிகபட்சம் 10 நாளுக்கான சுற்றுலா செலவு (இந்திய மதிப்பில்) 15,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். எனவே தான், நேபாள நாட்டில் ஆண்டுக்காண்டு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும்.

 

வியட்நாம்  

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்லும் விருப்பமான  நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

 

வியட்நாமின், பழங்கால கட்டடங்கள் அனைத்தும் இன்றுவரை உறுதியுடன் நிற்கின்றன. இங்குள்ள நவீன வரலாறு, அழகான கடற்கரைகள், அழகிய நிலப்பரப்புகள், அற்புதமான உணவு மற்றும் படகு சவாரி போன்றவற்றைப் பார்வையிட குறைந்த செலவில் விலை நிர்ணயம் செய்திருப்பது சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

 

இங்குள்ள மலை நகரமான Sape- விற்குச் செல்லாமல் வியட்நாமிலிருந்து யாரும் தாய்நாடு திரும்புவதில்லை. மலைசூழ் பிரதேசமான இதில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

 

மியான்மர்  

 

இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடு. மியான்மரில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் யாங்கோன் மற்றும் மாண்டலே போன்ற பெரிய நகரங்கள் உள்ளன.

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மியான்மருக்கு குறைவான சுற்றுலா பயணிகளே வருவதால், கரோனா காலகட்டத்தில் பாதுகாப்பிற்கு ஏற்ற இடமாக உள்ளது.

 

மியான்மரின் கலாச்சாரங்கள், இரவு சந்தைகள், பாரம்பரிய சுற்றுலா, ஏராளமான கடற்கரைகள், ஆன்மீக சுற்றுலா போன்றவை இந்திய சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன.

 

இங்கு இருப்பிடம், உணவு முதல், உள்ளூர் போக்குவரத்து, சுற்றுலா கட்டணங்கள் வரை, எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு (இந்திய மதிப்பில்) 3000 ரூபாய்க்கும், ஒரு வாரத்திற்கு 10,000 முதல் 15,000க்குள்ளேயும் செலவாகும்.

 

எனவே, நீங்கள் வரும் ஆண்டின் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நாட்டினைத் தேர்வு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மன மகிழ்ச்சியோடு கழிக்க வாழ்த்துக்கள்!

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

'இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Action should be taken without further delay'-Anbumani insists

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்கதையாகி வரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள்  21 பேரை சிங்கள கடற்படையினர்  கைது  செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை  சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றன.  கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும்,  15-ஆம் தேதி  15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.   அதனால், அந்தப் பகுதிகளில்  ஏற்பட்ட பதட்டமும், கவலையும்  விலகுவதற்கு  முன்பே  மேலும் 21  மீனவர்களை  சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

'Action should be taken without further delay'-Anbumani insists

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை  மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம்  தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை  அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ள  58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.