Skip to main content

கரோனாவை விரட்ட டயட் டிப்ஸ்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று, உலகமெல்லாம் பரவி இந்தியாவையும் பதம்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் தொற்று நாம் நினைத்ததை விடவும் அதிவேகமாக இருப்பதால், 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவித்திருக்கிறது, இந்திய அரசு. கரோனா வைரஸ் உள்ளூர் வரை வந்திருந்தாலும், நம்மிடம் வருவதற்கு முன் காத்துக் கொள்வது மிக அவசியம். வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் இந்த நாட்களில் தொடர்ந்து உடலை வலுவாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்வது நம் கடமை. அதற்கான சில வழிமுறைகளை ஊட்டச்சத்து ஆலோசகர் மினாஜ் சரானியா கூறியதாவது;

வழிபாடும் தியானமும்
கடவுளையோ, இயற்கையையோ மனதிற்கு நிறைவாக தொடர்ந்து வழிபடுவதும், சுற்றத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு தினமும் தியானம் செய்வதும் நம்மை அமைதியாகவும், மனதளவில் வலிமையாகவும் இருக்க உதவுகிறது. இதனால், நுரையீரல் தூய்மை அடைந்து, திடமாக இருக்கலாம்.

coronavirus food tips


சத்தான நீராகாரங்கள்
இஞ்சி, எலுமிச்சை, துளசி, புதினா ஆகியவற்றை நீரில் கலந்து தொடர்ந்து பருகுவதால், உடல் நீர்ச்சத்து பெற்று ஆரோக்கியமாக இருக்கும். அதேநேரம், கொய்யா, வாழை, குளிர்ந்த பால், தயிர், மோர், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், குளிரூட்டிய உணவுகள் போன்ற எளிதில் சளித்தொல்லையை ஏற்படுத்தக்கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

நன்கு சமைத்த உணவுகள்
தற்சமயம் உணவு டெலிவரி போன்ற வசதிகள் இல்லாத நிலையில், வீட்டு உணவே நமக்கு பிரதானம். ஆனால், சமைப்பதற்கு சளைத்துவிட்டு பச்சைக் காய்கறிகளை உட்கொள்வது இந்த நேரத்தில் ஆரோக்கியமாக இருக்காது. நீண்டதூரம் பயணித்து வருவதாலும், குளிர்பதனத்தில் இருப்பதாலும் இயல்பாகவே அவை அசுத்தம் நிறைந்ததாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, வீட்டில் நன்கு சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நன்கு சமைப்பதால், நச்சுக் கிருமிகளின் தொல்லையும் இருக்காது.

coronavirus food tips

கூடுதல் அக்கறை
முழுக்க முழுக்க வீட்டிலேயே இருப்பதால், நொறுக்குத் தீனிகளின் மீது கவனம் திரும்பலாம். ஆனால், நமக்குக் கிடைத்திருக்கும் இந்த நேரம் மிகமுக்கியமானது. அதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உலகிலேயே இந்தியாவில் கிடைக்கும் துளசி, மஞ்சள், மிளகு, இஞ்சி, அமுக்கிரா போன்ற மூலிகைப் பொருட்கள் அதிக மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றை உணவிலும், நீரில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், மாதுளை சாறு, வெல்லம் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

coronavirus food tips

அரசு காட்டும் கெடுபிடியால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இறைச்சி மூலம் கிடைக்கக்கூடிய புரதம் கிடைக்காமல் போகலாம். அதற்கு பதிலாக, தினந்தோறும் பருப்பு வகைகளை 25 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் வேர்கடலையை எடுத்துக் கொள்ளலாம்.  

வாய் சுத்தம்
ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டிருப்பதைப் போல, வாயையும் கைகளையும் தொடர்ந்து சுத்தம் செய்யவேண்டும். உப்பு கலந்த நீரை தினமும் இரண்டு வேளை கொப்பளித்துத் துப்புவது தொண்டையில் ஏற்படும் தொற்றிலிருந்து விடுதலை தருகிறது. சுடுநீரில் ஆவி பிடிப்பதன் மூலம் நுரையீரலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். தினந்தோறும் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து பருகுவதன் மூலம், உடலுக்குத் தேவையான காரத்தன்மை சீராகிறது.

coronavirus food tips

உடல் தூய்மை
வீட்டில்தானே இருக்கிறோம் என்று அசட்டையாக இருக்காமல், உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதால், வீட்டில் இருப்பவர்களுக்கும் நாம் நல்லது செய்கிறோம். அதேபோல், உறங்கும்போது உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது வேசலினை தேய்த்துக் கொள்வதால், தொடுதலில் ஏற்படும் தீங்குகள் குறையும்.

விடுமுறை கிடைத்துவிட்டது என்பதற்காக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் என்று இரவெல்லாம் தூங்காமல் இருந்து உடலைக் கெடுக்காதீர்கள். பொழுதுபோக்கு ஒருபுறம் என்றாலும் உறக்கம் முக்கியம். நல்ல தூக்கம் மட்டுமே போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தைரியமாக இருங்கள். வீட்டிலேயே இருங்கள்.

 

Next Story

உடல் எடையினால் மன அழுத்தம் அதிகரிக்குமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Krithika Tharan | Diet | Nutrition |

உடல் எடையினால் மன அழுத்தம் அதிகரிக்குமா என்ற நம்முடைய கேள்விக்கு, தான் டயட் சார்ட் கொடுத்த ஒருவரைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

40 வயது பெண்மணி அவருடைய கணவருடன் வந்திருந்தார். தன் குழந்தைகள் தன்னை மதிப்பதில்லை என்று கவலைப்பட்டார். உடல் 100 கிலோவைத் தாண்டி இருந்தது. உடல் குண்டாக இருப்பதாலும் அழகாக இல்லாததாலும் தன்னை யாரும் மதிப்பதில்லை என்று தன் மேலேயே ஒரு தன்னம்பிக்கை இல்லாமல் நிறைய டிப்ரஷனோடு இருந்தார். உடல் அழகை தாண்டி வாழ்க்கை சிக்கல்களால் கூட இருக்கலாம். உணவு மட்டுமே தனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என்று மூன்று வேளை நன்றாக சுவையாக சமைத்து சாப்பிட்டு உடல் எடை அதிகமாகி 80லிருந்து 100 கிலோ  தொடும் அளவுக்கு போயிருக்கிறார். 

அவர் கணவரும் உடல் இளைப்பதில் தான் சிக்கல் என்று டயட்டிற்காக வந்தார். ஆனால் இந்த பெண்மணிக்கு கூடவே டிப்ரஷன் இருந்தது என்று அவர்கள் வீட்டில் என்னை யாரும் கவனிக்கவில்லை. வயதினால் அவ்வப்போது வரும் இரிட்டேஷன் தான்  என்று சாதாரணமாக விட்டு விட்டனர். ஆனால் இவரோ மருத்துவ சிக்கல் வந்து ஆன்டி டிப்ரசென்ட் மாத்திரை எடுக்கும் அளவு மனப் பிரச்சனை இருந்திருக்கிறது. இதுபோன்ற மாத்திரை ஆரம்பத்தில் எடுக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுக்க போட முடியாது. அதற்கு முதலில் வாழ்வியல் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இவருக்கு  முதலில் உடல் எடை குறைப்பதில்  கவனம் கொள்ளப்பட்டது.

முதலில் டயட் சார்ட் போட்டுக் கொடுத்தோம். அடுத்து அது கூடவே CBT என்ற Cognetive Behavior Therapy, மெடிட்டேஷன், மூச்சுப் பயிற்சி, உடற் பயிற்சி என எல்லாவற்றையும் தொடர்ந்து கொடுத்து வர அவர் வாழ்க்கையை இயல்பாக பாசிட்டிவிட்டியோடு பார்த்தார். என் பேச்சை யாரும் மதிப்பதில்லை போன்ற எண்ணத்திலிருந்து மிக அழகாக தினசரி வாழ்வையே ரசித்து ஆத்மார்த்தமாக எல்லா பயிற்சியையும் செய்தார். ஒழுக்கமாக கடைபிடித்ததால் சரியாக 100 நாட்களில் 17 கிலோ குறைத்தார். கூடவே சில ட்ரைனிங்குடன் கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டது. அந்த கவுன்சிலிங்கினால் தான் இவ்வளவு முயற்சிகள் எடுத்து உடல் எடை தன்னால் குறைக்க முடியும் என்று பார்த்ததும் தன்னம்பிக்கை தானாக பிறந்தது. மேலும் தன்னுடைய குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும், எவ்வளவு எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர் 40 வயதை ஒட்டித்தான் இருப்பர். எனவே அவர்களோடு ஏற்படாத புரிதலினால் குடும்பத்தில் சில சிக்கல்கள் வந்து நிறைய பெற்றோர்கள் டிப்ரசனுக்கு போவதை அதிகம் பார்க்க முடிகிறது. 

உடலை குணப்படுத்த மனம் சீராகும். மனதை குணப்படுத்த உடல் சீராகும். இப்படித்தான் அவருக்கு தெரப்பி, கவுன்சிலிங், உடற்பயிற்சி என்று இரண்டு புறமும் கொடுத்து தேற்ற, அவர் நன்றாக உடலை மாற்றினார். அடிக்கடி தனக்கு ஓவர் திங்கிங் இருக்கிறது என்று சொல்லும் போதெல்லாம் ஓவர் திங்க் செய்யும்போது மூச்சை கவனியுங்கள். சிந்திக்கும் விஷயம் பயனுள்ளதாக இருந்தால் தொடர்ந்து சிந்தியுங்கள். தேவையில்லாத சிந்தனை என்றால் விட்டுவிடுங்கள் என்று சிறு சிறு டிப்ஸ் கொடுத்து அவரை சரி செய்தோம். உடல் எடை அதிகம் இருக்கிறது என்பது ஆரோக்கியமற்ற செயல்தான். அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அதற்கு தாழ்வு மனப்பான்மை கொள்வது சரியாகாது. பொதுவாக பெண்களுக்கு முக்கியமாக 40 வயதிற்கு பின் உடல் எடை கூடுவது போன்ற தொந்தரவு பல காரணங்களால் வரலாம்.

சில பேருக்கு குழந்தை பிறந்தவுடன் அதை குறைக்க முடியாமல் போகலாம். சில பேர் பாலூட்டும் போது நிறைய சாப்பிட்டு விடுவர். அதை குறைக்க முடியாமல் போகலாம். சத்து குறைபாட்டினால் அடிக்கடி பசி எடுத்து தவறான உணவுகளை எடுப்பதினால் வரலாம். நரம்பு பிரச்சனை, ஹார்மோனல் இம்பேலன்ஸ் மற்றும்  வீட்டில் இருக்கும் சில பிரச்சினைகளால் கூட டிப்ரஷன் அதிகமாகி உடல் எடை போடலாம். சின்ன சின்ன ஸ்டிரஸ் லெவல்கள் வாழ்க்கையில் இயல்புதான். அதனால் நொந்து போகாமல் துணிவோடு செய்யும் போது எல்லாமே சாத்தியம். உடல் எடையோ எந்த தொந்தரவோ எதுவானாலும் அவர்களுக்கு துணிவையும் தன்னம்பிக்கையை மட்டும் கொடுத்துவிட்டால் போதும். அடுத்து அந்த பிரச்சனையை சரி செய்ய அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

Next Story

மெடிட்டரேனியன் டயட் என்றால் என்ன?- ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 28/08/2023 | Edited on 28/09/2023

 

Kirthika Tharan - diet tips - mediterranean diet

 

புதிதாக ஒரு டயட் முறையைப் பற்றி  ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்

 

உலகில் மிக ஆரோக்கியமான டயட் முறை எது என்பது குறித்த சந்தேகம் ஆராய்ச்சியாளர்களுக்கு வந்தது. இதனால் 7000 பேரை வைத்து ஒரு ஆராய்ச்சியை நடத்தினார்கள். அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் பரிசோதனை செய்து பார்த்தது மெடிட்டரேனியன் முறையைத் தான். இந்த முறையில் நட்ஸ், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், இனிப்பான பழங்கள், சிக்கன், முட்டை, வெண்ணெய், சீஸ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வார்கள். 

 

இதில் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக தேன் சேர்த்துக்கொள்ளலாம். இயற்கையான முறையில் கிடைக்கும் இறைச்சியை மட்டுமே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். உணவில் மீன் சேர்த்துக்கொள்ளலாம். துரித உணவுகள் எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. இதை நம்மால் தொடர்ந்து பின்பற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடல் உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். இதை தினமும் நம்மால் பின்பற்ற முடியும் என்பது தான் இதன் சிறப்பு அம்சம். 

 

சுத்திகரிக்கப்பட்ட கோதுமையை நாம் பயன்படுத்தக் கூடாது. இந்த உணவு முறையை முழுக்க முழுக்க இந்தியத் தன்மைக்கு மாற்றுவது சற்று கடினம். பாரம்பரியமான இந்தியப் பழங்கள் ஆரோக்கியமானவை. உடல் உழைப்பு இப்போது அதிகம் நமக்கு இல்லை என்பதால் கார்போஹைட்ரேட் அதிகம் தேவைப்படுவதில்லை. இதனால் முழு தானியங்கள், கடல் உணவுகள், நட்ஸ் ஆகியவற்றை நாம் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். கொழுப்புள்ள மீன், நண்டு, இறால் ஆகியவற்றை உண்ணலாம்.

 

உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். சிறுதானியங்கள், சிவப்பு அரிசி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். பட்டாணி, பருப்பு வகைகள் ஆகியவற்றை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதிகமான இனிப்புள்ள பழங்களை எப்போதாவது தான் நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மெடிட்டேரியன் டயட் என்பதை இந்திய முறைக்கு நாம் மாற்றிப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உடல் பருமன் நிச்சயம் குறையும். குழந்தைகளுக்கும் இந்த உணவு முறை மிகவும் நல்லது. மருத்துவ உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நல்ல உணவு முறை தான் இது.