வழியெங்கும் மடக்கிய காவலர்களை பணிவு கலந்த புன்முறுவலுடன் வணங்கி கடந்து அக்காவிடம் பணமும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். வரும்போது சுமார் 30 வயதுடையவர் கை காட்டி 'லிப்ட்' கேட்டார். மாஸ்க் அணிந்திருப்பதை பார்த்தபின் ஏற்றிக் கொண்டேன். வரும் வழியில் அவர் வீட்டில் இறங்கிக் கொண்டவர் என்னையே உற்று பரிதாபமாக பார்த்தார். அவர் கண்களில் ''பசிக்கலையும் இயலாமையும்'' தெரிந்தது. என்னங்க என்றேன் நான். இதுதான் சார் என் வீடு.... எங்க சொந்த ஊர்ல எல்லோருமே எனக்கு இருந்தாலும் இந்த நிமிஷம் கரோனாவால நான் ஒரு அநாதை. உங்களால முடிஞ்சா ஏதாவது பணம் குடுங்க. தலை குனிந்து கேட்டார்.
நான் ''சர்க்''...கென்று வண்டி எடுத்து வந்து விட்டேன். இரவு முழுவதும் அந்த மனிதர் நினைவாகவே இருந்தது. கூச்சமே இல்லாமல் கேட்டாரே, அவர் கண்களில் பொய்மை இல்லை. ஏதாவது கொடுத்துவிட்டு வந்திருக்கலாமோ என்று என் ''அடி மனசு'' சொல்லிக் கொண்டே இருந்தது. எனக்கு அக்காவீடு இருந்ததுபோல அவருக்கு இல்லாமல்கூட இருந்திருக்கலாம். அதிகாலையிலேயே அவரைப் பார்த்து கொஞ்சமாவது செலவுக்கு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தபின்னரே என்னால் நிம்மதியாக தூங்க முடிந்தது.