Skip to main content

ரூ. 2500 -க்கு வாங்கப்பட்டு 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட கிண்ணம்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

chinese artifact bowl sold for huge price in auction

 

15 ஆம் நூற்றாண்டின் ஒரு அரிய சீன கலைப்பொருள், 35 டாலருக்கு நபர் ஒருவரால் வாங்கப்பட்டு சுமார் 7,00,000 டாலருக்கு அண்மையில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இங்கிலாந்தின் கனெக்டிக்கட் (Connecticut) பகுதியில் இருந்து நபர் ஒருவரால் 35 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு மலர் பீங்கான் கிண்ணம், சோத்பேயின் (Sotheby) ஏலத்தில் 7,00,000 டாலருக்கு விற்கப்பட்டது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சோத்பே (Sotheby) நிறுவனத்தின் சீன கலைப்பொருள் நிபுணர்கள் இந்த கிண்ணத்தை ஆய்வு செய்த போது, சீனாவில் ஆட்சி செய்த 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிங் வம்சத்துக்குச் சொந்தமான கிண்ணம் என்பதைக் கண்டுபிடித்தனர். உலகிலேயே  இது போன்ற கிண்ணங்கள் இதுவரை 6 மட்டுமே உள்ளதாக அறியப்படுகிறது. அவற்றில் தைவானில் உள்ள தைப்பேயில் தேசிய அருங்காட்சியகத்தில் இரண்டு கிண்ணங்கள், லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இரண்டு கிண்ணங்கள் மற்றும் ஈரானின் தேசிய அருங்காட்சியகத்தில் மற்றொன்று உள்ளது.

 

தாமரை மொட்டு போல வடிவமைக்கப்பட்டு நீல நிற கோபால்ட் கொண்டு வரையப்பட்ட இந்த கிண்ணத்தை 3,00,000 முதல் 5,00,000 டாலர் வரை மதிப்புள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டனர். ஆனால், கடந்த மார்ச் 17 அன்று நியூயார்க்கில் நடந்த சோத்பேயின் (Sotheby) முக்கியமான சீன கலை ஏலத்தில் நான்கு ஏலதாரர்களுக்கு இடையிலான போட்டிக்குப் பின்னர், கிண்ணம் 7,21,800 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இது ஏலத்தின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட விலையை விட 20,000 மடங்கு அதிகமாகும். மிகவும் விலை உயர்ந்த கலைப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்படும் இந்த கிண்ணம் 16 சென்டி மீட்டர் விட்டத்துடன் உள்ளது.

 

"இந்த கிண்ணம் 1403 முதல் 1424 வரை ஆட்சி செய்த யோங்கிள் பேரரசர் என அழைக்கப்படும் மிங் வம்சத்தின் மூன்றாவது பேரரசரின் ஆட்சிக்கு முந்தையது. இது யோங்கிள் அரசின் நீதிமன்றத்திற்காகச் செய்யப்பட்ட கிண்ணம் என நம்பப்படுகிறது. இது ஜிங்டெஷன் நகரில் உள்ள பீங்கான் சூளையில் யோங்கிள் நீதிமன்றத்திற்காக புதிய பாணியில் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மிகச்சிறந்த யோங்கிள் தயாரிப்பாகும். அந்த காலத்தின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் வண்ணம் மற்றும் வடிவமைப்புகள் இருந்துள்ளன. அந்த கிண்ணம் தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருந்தது. அவர்கள் ஆட்சி செய்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கிண்ணங்களின் பொற்காலம்" என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இதுகுறித்து சோதேபியின் மூத்த துணைத் தலைவரும் சீன கலைத் துறையின் தலைவருமான மெக்டீர் கூறும்போது, "நாங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பொருளைப் பார்க்கிறோம். ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த கிண்ணத்தில் நம்பமுடியாத கதை உள்ளது" என்றார். மேலும் அவர் ஒரு அறிக்கையில், "கிண்ணத்தை முதன் முறையாகப் பார்த்தவுடன், எங்கள் குழு இந்த மறுக்க முடியாத ரத்தினத்தின் தரத்தை உடனடியாக அங்கீகரித்தது. இது விலைமதிப்பற்ற கலைப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்படும்" என்றார். மேலும் அவர், மிகவும் அரியவகை கலைப்பொருட்களில் ஒன்றான இந்த கிண்ணம் கிடைத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” - கனிமொழி எம்.பி. கேள்வி

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.