Skip to main content

குறிவைக்கப்படும் அன்பிற்குரியோரின் கரும்பக்கங்கள்! -தொழிலதிபர் ஒருவரின் அனுபவப் பகிர்வு!  

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
sad couple

 

 

பெண்களுக்கான ஆடைத் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் அது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதன் கிளைகள் உள்ளன. ‘மூச்சுவிடக்கூட நேரமில்லை..’ எனச் சொல்வார்கள் அல்லவா! அந்த அளவுக்கு பிசியாக இருந்த அந்த நிறுவனத்தின் இயக்குநரை, எங்கும் நகரவிடாமல், கரோனா காலக்கட்டம் கட்டிப்போட்டது. அவ்வப்போது, சும்மா பொழுதை கழிப்பது மனதை உறுத்த, சிந்திக்கவும், எழுதவும் ஆரம்பித்தார். அத்தனையும் அனுபவமே! அவரது சிந்தனைத் துளிகளில் சிலவற்றை இங்கு காண்போம்!

 

தேவைக்கும் அதிகமாகவே பேசுகிறோம்!

‘சொல்லிமுடியாதவை’ என்ற பதம் நம் எல்லோருக்கும் பொதுவானது. நம் செயல்களுக்கானது. எனக்கு சொல்லிமுடியாதவை என்று பெரிய லிஸ்ட் இல்லை. ஏனென்றால்,  அனேகமாக எனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லவேண்டியவற்றை, தேவைக்கும் அதிகமாகவே சொல்லிவிடுகிறேன். அதனால் பிரச்சனைகளும், காதல்களும், உறவுகளும், பூகம்பங்களும்,  பிரிவுகளும், வந்தாலென்ன என நினைத்து சொல்லிவிடுகிறேன். 

 

தந்திர தாக்குதல் உத்திகள்!

சில நேரம் 'அதை சொல்லியிருக்க வேண்டியதில்லை', 'அதை அந்த வார்த்தைகளில் சொல்லியிருக்க வேண்டியதில்லை', 'அதை அந்த நேரத்தில் சொல்லியிருக்க வேண்டியதில்லை' என்று வேண்டுமானால் பிறகு தோன்றுமே தவிர,  சொல்லியது பெருந்தவறு என எப்போதும் தோன்றியதில்லை. சொன்ன விஷயங்களால், சொன்ன தொனியால் ஏற்பட்ட உறவுகள் உண்டென்றாலும்,  ஏற்பட்ட பிரிவுகளும் உண்டு.  வாயை மூடிக் கொண்டிருந்தால்,  மனிதன் பெரும் பிரிவுகளைச் சந்தித்திருக்க வேண்டியிராத வாழ்வை வாழ்ந்திருக்கலாம். ஒரு விவாதத்தினிடையே, யார் முதலில் ஆயுதத்தை தூக்குகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்களாகிறார்கள், கொலைக்கருவிகள் வேண்டியதில்லை. தந்திர தாக்குதல் உத்திகளை, வெறுமனே சொற்களின் வழியாக பயன்படுத்த முடியும். அந்த ஆயுதங்கள் எளிமையானவை. 

 

வார்த்தை யுத்தத்தால் அழியும் உறவுகள்!

எந்த உறவிலும் சில கரும்பக்கங்கள் இருக்கும். அதை அழகியலாகவே பார்த்து வந்திருப்போம். எந்த உறவைக் காப்பதற்காக விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோமோ, அந்த உறவின் கரும்பக்கங்களைக் குறி வைத்துவிடுவோம். கடும் விவாதத்தின்போது, அந்த கரும்பக்கங்களைக் குறி வைப்பது ஒரு கூர்மையான ஆயுதம்தான். எதிரி தடுமாறி விட அது உதவலாம். அந்த விவாதமும் சட்டென முடிவுக்கு வந்து விடும். எதிரி கடந்து வர விரும்பும் ஒரு விஷயத்தை தூக்கி முன்னால் போட்டு நிலைகுலைய வைப்பது, எல்லோரும் அவரவர் தரத்திற்கு செய்வதுதான். அந்த திடுக்கிடும் வார்த்தைகள் சற்று கொடூரமானவைதான். ஆனால், எதிராளியை யுத்த களத்திலிருந்து வெளியேற்றிவிடும் அந்த வார்த்தைகள். இந்த யுத்த நெறியை துரதிர்ஷ்டவசமாக நம் நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலர்கள், காதலிகள், சக வேலையாட்கள் ஆகியோரிடம்தான் உபயோகப்படுத்துகிறோம். எதிரிகள் எப்போதும் நம்மிடம் அதை செய்வதில்லை. நாமும் எதிரிகளிடம் அதை செய்வதில்லை. நம் அன்பிற்குரியவர்களாக இருந்தவர்களிடம்தான், அதை உபயோகித்திருப்போம். நானும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறேன் - உங்களைப் போலவே! 

 

அந்தரங்க ரகசியம் ஆயுதமானால்?

ஒருவருடன் நீங்கள் அந்தரங்க நெருக்கத்தோடு இருந்தபோது, அவர் தன்னைப் பற்றி, உங்களிருவர் உறவு குறித்து அவர் நெகிழ்வது பற்றி,  தன் குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொண்ட ரகசியத்தை, அவரை விரோதித்தோ, வாதத்திலோ, ஒரு நாளில், ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம்தான்.  அந்த கணம் நீங்கள் வெற்றியும் பெறலாம். ஆனால்,  என்றென்றும் திரும்ப அடைய முடியாதபடி, மனிதனுக்கே உரிய ஒரு ஆதார தகுதியை நிரந்தரமாக இழக்கின்றீர்கள். அந்த இழப்பின் மதிப்பு,  பல ஆண்டுகளுக்கு பிறகே தெரியவரலாம். ஒரு சிறிய விவாத வெற்றிக்காக, நாம் நம்மளவில் அடையும் மாபெரும் தோல்வி அது. பிறரை அவமதிக்க வேண்டும் என நினைப்பது ஒரு மனிதனுடைய அகங்காரத்தின் இடையறாத விருப்பம். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஒரு விவாதத்தின் கொடூர வேகத்தில் அது வெளிப்பட்டு விடுகிறது. 

 

கொடூர கொடுக்குகளாய் வார்த்தைகள்!

வார்த்தைகளால் எரிந்து போன அளவுக்கு,  உலகில் அழிந்த உறவுகள், பெரும் யுத்தங்களால்கூட நிகழ்ந்ததில்லை.  ஏதோ ஒரு வார்த்தைக்காக,  பல ஆண்டுகள் பேசிக் கொள்ளாமல் வாழ்ந்த தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு வார்த்தை வெளிவந்ததற்காக, பல ஆண்டுகளாக முகத்தில் விழிக்காத சகோதர, சகோதரிகள் இருக்கின்றனர்.  குழந்தைகளை விட்டு விலகிய பெற்றோர், நண்பனைப் பிரிந்தவர்கள் என வீதிதோறும் இருக்கிறார்கள். அதை சரி பண்ணிக் கொள்ளும் வாய்ப்புகளையாவது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால்,  உதிர்ந்த வார்த்தைகள் ஒட்டவிடாது விரட்டும்.  ‘சொல்லிமுடியாதவை’ எத்தனையோ இருந்தாலும், சொல்லிவிட்ட வார்த்தைகளின் காயங்களுக்குத்தான் உடனடி மருந்து தேவை. சொல்லிமுடியாதவை நல்ல வார்த்தைகளாகத்தான் இருக்கும். ஆனால் சொல்லிவிட்டவை கொடூர கொடுக்குகள். சொல்லிவிட்டவற்றை திரும்பப்பெற ஜென்மங்கள் தாண்ட வேண்டும்!

 

அனுபவத்  தெறிப்புகள் தொடரும்…

 

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.