Skip to main content

சுரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய் ஜூஸ் மரணத்தை ஏற்படுத்துவது ஏன்?

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

பூனே நகரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரியும் இளம்பெண் கௌரி விடியற்காலையில் எழுந்து 5 கிலோ மீட்டர் வாக்கிங், ஜாக்கிங் செல்வார். அடுத்த நாள் 10 கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிளிங் செல்வார். எல்லாம் காலை 8 மணிக்குள் முடித்துவிட்டு பழக்கடையில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது வழக்கம். சுரைக்காய் ஜூஸ் குடிப்பதனால், உடல் எடை குறையும் என்பது பொதுவான நம்பிக்கை. அதோடு சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய், சீறுநீரகப் பிரச்சினை போன்றவற்றிற்கு அருமருந்து என ஆயுர்வேதமும் பரிந்துரை செய்கிறது. அதனால் சுரைக்காய் ஜூஸ் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.

 

gowri

கௌரி



காலை டிபன் முடித்துவிட்டு அலுவலகத்திற்கு தனது காரிலேயே போனார். அப்போது திடீரென வயிற்று வலி ஆரம்பித்தது. நேரம் போகப் போக அது கடுமையான வயிற்று வலியாக மாறியது. அடுத்து  வாந்தி பேதியும் வர ஆரம்பித்தது. வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார். வயிற்றுவலி இன்னும் கடுமையானது. இரத்த வாந்தியும் வயிற்று போக்கும் அதிகரித்தது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல்நோய் நிபுணர் தீவிர சிகிச்சை அளித்தார். வயிறு சுத்தம் செய்யப்பட்டது. இரத்தம் பரிசோதனை செய்ததில் இரத்தத்தில் விஷத்தன்மையான மூலக்கூறுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நாள் தொடர் தீவிர சிகிச்சை அளித்தும் உயர் இரத்தம் அழுத்தம் ஏற்பட்டு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டது. மூன்றாவது நாள் இறந்து போனார்.

 

 


இதற்கு முன்னர் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உட்பட எந்த பிரச்சினையும் இல்லாத உடல் ஆரோக்கியமாக இருந்தவர். காலை வாக்கிங் போனபோது குடித்த சுரைக்காய் ஜூஸ் உயிரை பறித்துவிட்டது. இப்போது உங்களுக்கு ஏற்படும் ஆச்சர்யம் சுரைக்காய் ஜூஸ் விஷமாக மாறுமா? மாறும்... சில சுரக்காய்கள் விஷம் தான். சுரைக்காய் மட்டுமல்ல வெள்ளரிக்காய், பூசணிக்காய், பாகற்காய், சாம்பல் பூசணி, பீர்க்கங்காய், புடலங்காய், தர்பூசணி, சீமை பூசணி, சீமை பூசணியில் செம்மஞ்சள், கரும்பச்சை, வெளிர்பச்சை நிறங்களில் இருப்பது இவையெல்லாம் மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் விஷமாக மாறிவிடும். இவைகளுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை இவை வெள்ளரிக் குடும்பத்தை சேர்ந்த காய்கள். 

  bottlegourd juice

 

மனிதன் எப்போதும் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். தாவரங்களும் அப்படித்தான். தாவர இனங்களில் சப்பாத்திகள்ளி செடி விலங்குகள் தங்களை தின்றுவிடக் கூடாதென முட்களுடன் வளரும். அதே போல சில தாவரங்கள் தங்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள விஷத்தன்மைக்கான மூலக்கூறுகளை கொண்டிருக்கும். அப்படி விஷத்தன்மை கொண்ட தாவர இனம் தான் வெள்ளரிக் குடும்ப வகை தாவரங்கள். இந்த வகை தாவரங்களில் இருக்கும் டெட்ராசிகிளிக் டிராட்டர்ஸ்பிராய்ட் (Tetracyclic triterperiod) எனப்படும் உயிர்வேதி மூலக்கூறுகள்தான் விஷத்தன்மைக்கு காரணம். இது வெள்ளரிக் குடும்பத்தில் குகர்பிடாசின்ஸ் (Cucurbitacins) எனப்படுகிறது. 

 

 

இந்த குகர்பிடாசின்ஸ்தான் குறிப்பிட்ட காய்கள் கசப்பாகவும் விஷத்தன்மையாகவும் இருப்பதற்கான காரணம். இயற்கையாகவே இது தாவரங்களில் உற்பத்தியாகிறது. அதிலும் குறிப்பாக அதிக வெப்பநிலை, குறைவான தண்ணீர், வளமற்ற மண் போன்றவற்றில் வளர்வதனால் உயிர் வேதிப்பொருள்களில்  pH அளவு மிக குறைந்து அமிலத்தன்மை அதிகமாகும். இது விஷத்தன்மையை உருவாக்கும். தாவரவியல் விஞ்ஞானிகள் குகர்பிடாசின்ஸ் உயர் வேதிப்பொருட்களில் உள்ள குகர்பிடாசின்ஸ் A முதல் T வரை வகைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சுரைக்காயில் குகர்பிடாசின்ஸ் B, D, G, H வகைகள் உள்ளன. பாகற்காயில் குகர்பிடாசின்ஸ் A, B, C, D , E வகைகள் உள்ளன. சாதரணமாக நாம் சாப்பிடும் சுரைக்காயில் குகர்பிடாசின்ஸ் B, D, G, H வகைகளின் மொத்தம் 130 ppm மூலக்கூறு அளவை தாண்டாது. ஆனால் இந்த அளவைத் தாண்டினால், அந்த சுரைக்காய் விஷத்தன்மையாகவும் கசப்பாகவும் மாறிவிடும். ஆக அதிகளவிலான குகர்பிடாசின்ஸ் அதிக சகப்பாகவும் கடுமையான விஷமாகவும் இருக்கும், எட்டிக்காய் கசப்பை போல. 

 

bottle gourd

 

இப்போது பிரச்சனை சாதாரணமாக சாப்பிடும் சுரைக்காயில் விஷத்தன்மை சேர்ந்திருப்பது எப்படி என்பதுதான். இதற்கு காரணம் தேனீ, வண்டு, பட்டாம் பூச்சி என பல்வேறு வகை பூச்சிகள். தாவர உற்பத்திக்கு மகரந்த சேர்க்கை மிக முக்கியமானது. அதில் அயல் மகரந்தச் சேர்க்கை ஒன்று. மகரந்தத் துகள்கள் ஒரு தாவரத்தின் ஒரு மலரிலிருந்து மற்றொரு தாவரத்தில் உள்ள ஒரு மலரின் சூல்முடிக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை. இந்த இரண்டு தாவரங்களுக்கும் இடையே நடக்கும் அயல் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணம் பூச்சிகள் தான். வனங்களை ஒட்டி பயிரிடப்பட்டிருக்கும் வெள்ளரிக் குடும்ப செடிகளில் இதே இனத்தில் விஷச் செடி பூக்களில் அமர்ந்த பூச்சிகள் தோட்டத்தில் பயிரிடப்பட்ட சுரைக்காய் செடி பூவில் அமர்ந்து அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. அதன்மூலம் உற்பத்தியாகும் தோட்டத்து சுரைக்காயில் விஷத்தன்மை அதிகரித்து விடுகிறது. இந்த மாதிரியான சுரக்காய்தான் கண்ணுக்கு தெரியாத விஷமாக மாறி காய்கறி கடைக்கு வந்துவிடுகிறது. 

 

 

வெள்ளரிக் குடும்ப காய்களில் அபூர்வமாக இப்படி விஷமாகி ஆயிரக்கணக்கான மக்கள் உலகெங்கும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோல விஷமாக மாறிய பூசணியை சாப்பிட்ட அமெரிக்க பெண்மணிக்கு தலைமுடி அனைத்தும் உதிர்ந்துவிட்டதும் நடந்துள்ளது. ஆக சுரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய் ஜூஸ் சாப்பிடுபவர்கள் சொல்வதெல்லாம் நோய்களை இது தீர்க்கிறது என்பதுதான். இதில் உண்மை இல்லாமலில்லை. குறிப்பாக பாகற்காயில் உள்ள குகர்பிடாசின்ஸ் A, B, C, D, E புற்றுநோய் செல்களை வளரவிடாமல் கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் இதனை கவனமாக சாப்பிட வேண்டும்.

 

bitter gourd



குறிப்பாக வெள்ளரிக் குடும்ப காய்களை ஜூஸ் அல்லது பச்சையாக சாப்பிடும் போது இயல்புக்கு மாறாக அதிக கசப்பாக இருந்தால் ஒதுக்கிவிடுவது நல்லது. பாகற்காயைப் பொருத்தவரை இயல்பிலேயே கசப்பானதுதான். இதனை ஜுஸாகக் குடிப்பதை விட துண்டாக்கி வேக வைத்து சாப்பிடுவதால், இதன் கசப்பு மட்டுமல்ல குகர்பிடாசின்ஸ் அளவும் குறைந்துவிடும். ஒருவேளை பாகற்காய் விஷத்தன்மையாக இருந்தால் கூட இந்த முறையில் விஷத்தன்மை இழந்துவிடும். இன்றைய காலக்கட்டத்தில் பச்சையாக காய்கறிகளை சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு கேடு அதிகம். அதிக அளவில் பூச்சிமருந்து தெளித்து பயிரிடப்படும் காய்களை பச்சையாக சாப்பிடுவதால் புற்றுநோய் ஆபத்தும் அதிகம். வைரஸ் தொற்று ஏற்படவும் வழி உள்ளது. குடி நீரையே காய்ச்சிக் குடிக்கும் காலத்தில் இருப்பதால் காய்கறிகளையும் வேகவைத்து சாப்பிடுவதே மிகவும் சிறந்தது. 

 

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

ஒழுங்காக தூங்காவிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Dr Arunachalam | Insomnia |

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் நாம் வாழும் இன்றைய நவீன உலகில், நம் நேரத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை, தவிர்க்கமுடியாத சங்கிலியாக அது தூங்கும் நேரத்தையும் சேர்த்து கடன் வாங்கிகொள்ளத்தான்  செய்கிறது. அமெரிக்க மனநல சங்கத்தின் படி, மூன்றில் ஒரு பங்கு மக்கள் தூக்கமின்மை அறிகுறிகளைப் புகாரளிப்பதாகவும், 6 முதல் 10 சதவீதம் பேர் தூக்கமின்மை சிகிச்சையை சந்திக்கும் அறிகுறிகளையும் கொண்டுள்ளனர். ஒரு நாள் அல்லது இரண்டு நாள்  தூக்கம் கெடுவது ஒரு முக்கியமான பிரச்சனை அல்ல. ஆனால் அதுவே வாரங்களாக, மாதங்களாக தொடரும்போது தான் அது அந்த தனிபட்ட நபரை மட்டுமல்லாது, அவரை சார்ந்த முழு குடும்பத்தின் இயக்கவியலையும் பாதிக்கிறது. இப்படியான தூக்கமின்மையின் காரணிகளையும், விளைவுகளையும், பற்றி மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடன் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.. 

தூக்கமின்மையால் இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் பாதிப்படைய பெரிய காரணங்கள் என்ன ? அதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

அக்கியூட் இன்சோம்னியா என்று குறிப்பிடுவது ஒரு இரவு முழுக்க தூங்காமல் இருப்பது, ஒரு சில வாரங்களோ அல்லது, வாரத்திற்கு 3 நாள் என்று மூன்று மாதங்கள் நீடித்து இருக்கும் நிலையை தூக்கமின்மைக்குள்  வகைப்படுத்தலாம். தூக்கம் என்பது நம் செல்போன்க்கு ரீச்சார்ஜ் செய்வது போன்று. தூக்கம் இல்லையென்றால் ஒருநாள் சமாளிக்கும் உடம்பு, அதுவே வாடிக்கையாகும் போது நம் சிந்தனை வேகம் குறைவது முதல் மனஎரிச்சல் வரை  வருகிறது. 

நான் 1994ல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்தபோது ஒரு நோயாளி மட்டுமே காணப்பட்ட நிலையில், நைட் ஷிப்ட் , ஐ .டி  நிறுவனங்கள் தொடங்கிய காலம் பிறகு, தூக்கமின்மையால் வரும் அவ்வளவு நோய்களையும் பார்க்க வேண்டி வருகிறது. தண்ணீரை எவ்வாறு முறைப்படுத்தி காய்ச்சி குடிக்கவேண்டும் என்று நோயாளிகளுக்கு எடுத்துரைக்கும்போதே, இவ்வாறு அனுப்பிவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு நோயாளிகளே வரமாட்டார்கள் என்று என்னிடம் கருத்துகள்  வந்தது. இது இல்லையென்றால் இன்னொரு நோய் வரும் என்று பதிலளித்தேன். அதுபோல இப்போது பொது வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, அது சிறுநீர் கல் பிரச்சனைகளுக்கு வழிசெய்து, மருத்துவமனைக்கு சென்று அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

எனவே, நாம் என்னதான் கற்பித்தாலும், அது வேறொரு பாதையைதான் சென்று அடைகிறது. தூக்கமின்மை நோயாளிகளை அதிகமாக இன்று பார்ப்பது  போல் 1994ல் பார்த்தது இல்லை. காலத்திற்கேற்ப, மனிதன் தன் உடலை புரிந்துக்  கொள்ளாத வரைக்கும் நோய்  வந்து கொண்டே இருக்கும். 

தூக்கமின்மை வராமல் இருக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

நம் உடல் ஒரு கிரோனோலோஜிக்கல் கிளாக்கின்  கட்டளைப்படி தான் இயங்கி வருகிறது. அந்த 24 மணி நேரம் இயங்கும் கடிகாரத்திற்கு ரிதம் தான் பிடிக்கும்.  எப்படி காலை, மாலை என்று இரு வேளையும்  சூரியன் உதிக்கும் நேரமும், அஸ்தமன நேரம் தவறாமல் நடப்பதை போன்றது அது. பகலில் தூங்கி, இரவில் விழிக்கும் விலங்குகளைப்  போன்று அல்லாது, இரவில் தூங்கி பகலில் 12 மணி நேரம் இயங்கும் விலங்குகளை சேர்ந்தவர்களே மனிதர்கள். நம் உடலே இயற்கையின் ரிதமோடு ஒன்றியது தான். சூரியனால் உதயமாகும் மலர்கள் முதல், கண்கள் தெரியும் விலங்குகள் வரை,  சூரியன் உதித்தலோடு வாழ்க்கையை தொடர்ந்து, சூரியன் மறையும் வரை முடித்து 12 மணி நேரம் ஓய்வெடுக்கும் வகையாகத்தான், நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. 

தூங்கினால் மட்டும்தான் பல உறுப்புகள் சரியாக இயங்கும். 3 மாதம் தொடர்ந்து தூங்காத ஆண்களுக்கும், 6 மாதம் தொடர்ந்து தூங்காத  பெண்களுக்கும், வாழ்க்கை முறை மாற்ற நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மரணங்கள் அதிகமாக உலகில் காணப்படுவதற்கு இது போன்று தொற்று அல்லாத நோய்களே  பெருமளவு காணப்படுகிறது. இதற்கு தூக்கமின்மை மிக முக்கியமாக இருக்கிறது. மன அழுத்தம் அல்லது வேலையை சரியாக கையாளுதல் இல்லாமல்  இருப்பது போன்ற காரணியாக தூக்கமின்மைக்கு  இருக்கலாம்.  

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திருமணமான பெண்களையும் , ஆண்களையும் இது மிகவும் பாதித்தது. இரவெல்லாம் அலுவலகத்தில் மேலாளரோடு வேலை நிமித்தமாக வாக்குவாதம் செய்கிறார்கள் என்றெல்லாம் பாதிக்கப்பட்ட  அவரவர் தந்தைமார்கள் என்னிடம் கூட்டி வருவார்கள். இதுபோன்று காலகட்டத்தில் உழைக்கும்போதும், குறிப்பாக கல்வியும் இதில் முக்கிய பங்காக இருக்கிறது. என்னைப்பொறுத்த வரை ஒரு தொழிலை செய்வதற்கு அவனின் ஈடுபாடு தெரிந்து வாய்ப்பை தருவதே முக்கியமானதாக இருக்க முடியுமே தவிர்த்து, மனப்பாடம் செய்து வென்று ஒரு சமுதாயத்தில் நல்ல தொழில் வல்லுநராக இருப்பது கேள்வி குறியாகவே இருக்கிறது. 

ஒரு தாயார், தன் மகள் இரவு 12 மணி நேரம் தாண்டி படிப்பதாகவும், முடி கொட்டுவதாகவும் சமீப காலத்தில் நிறைய பேர் என்னிடம் வருகிறார்கள். இப்படி இரவு உறங்காமல் படித்து கொண்டே இருந்தால் பகலில் ஒன்றுமே நினைவில் இருப்பதில்லை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரவர் வாழ்க்கையை எவ்வாறு தயார்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இது விளைகிறது. எனவே தூக்கம் என்பது உடலை பொறுத்த வரை, மிக மிக அத்தியாவசியமான  தேவை. எனவே தூக்கமின்மையை விட்டு நல்ல தூங்கும் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.