Skip to main content

இப்போவே என்ஜாய் பண்ணிக்கோங்க.. குழந்தை பெற்றுவிட்டால் ஒண்ணுமே முடியாது என்பவர்களுக்கு! 

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

அடிலெய்டில் வாழும் எரின் (36) - டேவ்(35) இணை டிசம்பர் 2015 ஆம் ஆண்டு கடல்வழி சுற்றுப்பயணம் பற்றிய ஆவணப்படத்தை இணையத்தில் கண்டனர். நாம் பார்க்கும் திரைப்படங்கள் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்துவதும், அந்த ஆரோக்கியமான தாக்கத்தை நம் தினசரி வாழ்க்கை அழிப்பதும் வாடிக்கையான ஒன்று தான். ஆனால் எரின்-டேவ் இணை அன்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தனர். மூன்று குழந்தைகள் கொண்ட இணை எடுத்த அந்த அதிரடி முடிவு "இன்னும் இரண்டு வருடங்களில் ஒரு சிறிய கப்பலை விலைக்கு வாங்கி  குழந்தைகளுடன் இரண்டு வருட சுற்றுலா செல்வது" என்பதாகும்.

 

ausie family


எரின் அரசு பணியிலும், டேவ் விமானத்துறையில் வல்லுநராகவும் பணியில் இருந்தனர். "ஞாயிறு மட்டுமே வேலை தொடர்பான எந்தவித சிந்தனையும் இன்றி  மகிழ்ச்சியுடன் உள்ளோம். ஒரு நாள் கூத்துக்காக வாரம் ஆறு நாட்கள் இயந்திர வாழ்க்கையில் சிக்கித்தவிக்கிறோம்" என நாம் அனைவரும் கடந்து போகும் சலிப்பே இவர்களை அந்த சாகசத்தை நோக்கி தள்ளியது.மாத சம்பளம், மூன்று குழந்தைகள் (8,7 மற்றும் 4 வயதில்), ஒரு சொந்த வீடு என்ற சராசரி வாழ்க்கையில் இருந்து இரண்டு வருட கப்பல் பயணத்திற்கான திட்டம் தயாரானது.


 

aussie family enjoying life 1



ஆஸ்திரேலியா அரசு இலவச மருத்துவ வசதிகளை தரமாக அளித்தாலும் அதைவிட கவர்ச்சியாக இருக்கும் தனியார் மருத்துவ வசதிகள் மூலம் பயனடைய மாத காப்பீட்டுத் தொகை கட்டுவது வழக்கம். முதற்கட்டமாக அதை நீக்கினர். குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து இலவச அரசுப் பள்ளிகளுக்கு மாற்றினர். வீட்டில் இருந்த ஒரு காலி அறையில்  சர்வதேச மாணவர்களை வாடகைக்கு குடியமர்த்தினர். அன்றிலிருந்து எதை வாங்கினாலும் தங்களது பயணத்தின் தேவையை முன்வைத்தே வாங்கினர் .

எரினின் தந்தையிடம் கப்பலை முறையாக இயக்க பயிற்சி பெற்றனர். நடுக்கடலில் வீசும் சூறாவளி போன்ற பேராபத்துக்களை சமாளிக்க கப்பல் போக்குவரத்துக்கு சம்பந்தமான பாதுகாப்பு  வகுப்புகளை கற்றுத் தேர்ந்தனர். இப்படி முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருந்த டேவும்,எரினும்  இரண்டு வருட நெடிய பயணத்திற்கு எந்த மாதிரி கப்பலை வாங்குவது என்ற பெருங்குழப்பத்தில் மூழ்கினர். 10 வருடமாக உலகத்தை சுற்றிய ஒரு குடும்பத்திடம்  தங்கள் கேள்விகளுக்கு விடைகளை பெற்று, கரிபியக் கடல் பகுதியில் உள்ள கிரெனடா என்னும் தீவில் கப்பலை வாங்க முடிவு செய்தனர்.
 

aussie family


 

இறுதியாக தங்களது மகிழுந்துகளையும் விற்று, வீட்டை அடமானம்  வைத்து ஒரு கணிசமான தொகையை தங்கள் சேமிப்புடன் சேர்த்துள்ளனர். இரண்டு வருடம் ஊதியம் இல்லாமல் ஊரைச் சுற்ற போவதால் வீட்டின்  மாத தவணையை  சரிகட்ட வீட்டையும்  வாடகைக்கு விடவும் தவறவில்லை. திட்டமிட்டதில் இருந்து இரண்டு வருடம் இரண்டு மாதம்.. சேர்ந்தது  43 லட்சம். குழந்தைகள் படிப்பு, தங்களது வேலை, சராசரி வாழ்க்கை என அனைத்திற்கும் இரண்டு வருட விடுமுறை விடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவை விட்டு எரின்-டேவ்  தங்களது மூன்று குழந்தைகளுடன் கிரெனடா தீவிற்கு பறந்துள்ளனர். சில காலம் கப்பலே இனி தங்கள் இல்லம் என்பதால், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கப்பலை மாற்றி அமைத்து வருகிறார் டேவ். 


 

Aussie family5


 

"நாங்கள் 2015ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் போது,  உலகக் கடல்களை கடக்க திட்டமிட்டோம். கடுமையான உழைப்பின் விளைவாக இன்னும் இரண்டு வாரங்களில் பயணம் தொடங்கயிருக்கிறது. உலக வரைபடத்தில் இடதோரம் விரிந்து கிடக்கும் கரிபியக் கடலில் தொடங்கி, ஐரோப்பா ஆப்பிரிக்கா கண்டங்களுக்கு இடையே உள்ள மத்திய தரைக்கடலை ஊடுருவி, ஆஸ்திரேலியாவை அடையும் இலக்கோடு உள்ளோம். எனினும் கடல் பயணங்கள் வானிலையை பொறுத்ததே. கடலும்,காற்றும் எங்களை எங்கு இழுத்துச் செல்லவிருக்கிறது என்று தெரியவில்லை. பயண முடிவு எப்படி இருப்பினும் எங்கள் கனவை நனவாக்க வானமே வளைந்து கொடுத்தது போல் உணர்கிறோம்" என்று நெகிழ்ந்துள்ளார் எரின்.

இதயத்தைத்  தொடரும் மனிதர்கள் கனவுகளை எட்ட வானமே வளையும் போது, கடல் மட்டும் தாங்காதா என்ன?
 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மீண்டும் ஒரு ஐசிசி கோப்பை; தொடரும் மஞ்சள் படையின் ஆதிக்கம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
An ICC trophy again; The continued dominance of the yellow army!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் வில்லோமூரே பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கொன்ஸ்டாஸ் ரன் ஏதும் எடுக்காமல் இந்திய அணியின் லிம்பானியின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேப்டன் வெய்ப்கென் உடன் சேர்ந்து டிக்சன் நிதானமாக ஆடத் தொடங்கினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வெய்ப்கென் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். டிக்சனின் 42, ஹர்ஜாஸ் சிங்கின் 55, ஆலிவர் பீக்கின் 46 ரன்கள் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் லிம்பானி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும், சாவ்மி, முக்‌ஷீர் கான் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அர்ஷினை ஆரம்பத்திலேயே 3 ரன்னில் வெளியேற்றி ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட் முஷீர் கானும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமற்றினார். அடுத்து வந்த கேப்டன் சஹரனும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அரையிறுதியில் சிறப்பாக ஆடிய சச்சின் தாஸ் 9 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த மோலிய 9 ரன்களுக்கும், அவனிஷ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுபக்கம் பொறுமையாக ஆடிய ஆதர்ஷ் சிங் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் அபிஷேக் மட்டும் 42 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸி.யின் பீடர்மேன், மேக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், விட்லர் 2 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் மற்றும் ஸ்ட்ரேக்கர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ஆவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது. பீடர்மேன் ஆட்டநாயகனாகவும், மாபகா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2021 முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள ஐசிசி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022 டி20 உலகக்கோப்பையை இங்கிலந்து அணி வென்றது. அதைத் தவிர்த்து 2021 டி20 கோப்பை, 2022 மகளிர் டி20 கோப்பை, 2023 மகளிர் உலகக்கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஆண்கள் உலகக்கோப்பை தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை என 6 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2023 இல் 3 ஐசிசி கோப்பைகள், 2024இல் தற்போது என தொடர்ச்சியாக 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 1999 ஸ்டீவ் வாக் கேப்டன்சியில் இருந்து 2007 ரிக்கி பாண்டிங் கேப்டன்சி வரை தொடர்ச்சியாக 3 உலகக்கோப்பைகளை வென்றிருந்தது. ஒரு பத்தாண்டுகளுக்கும் மேல் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது. பின்னர் இந்திய அணியில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் ஆஸ்திரேலிய அணியின் சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் கண்டது. அதன் முதல் படியாக 2007 இல் டி20 அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் அடி கொடுத்த்து. 2008இல் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் நடந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரின் மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டை வென்று  ஆஸ்திரேலியாவின் வெற்றி சாம்ராஜ்யத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தது. 2011 உலகக்கோப்பை காலிறுதி என மூன்று முக்கிய ஐசிசி போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சாய்த்தது. 2019 உலகக்கோப்பையில் ஆஸி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்திய அணியின் கேப்டசியில் இருந்து தோனி விலகியதில் இருந்து ஆஸ்திரேலிய அணி மீண்டும் எழத் தொடங்கியது. இந்திய அணிக்கு கோலி, ரோஹித் என கேப்டன்களை மாற்றி மாற்றியும் ஐசிசி தொடர்களில் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது 4 ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி விஸ்வரூபம் எடுத்து வெற்றிகளைக் குவித்து தோற்கடிக்க முடியாத அணி எனும் அந்த பழைய பெயரை மீண்டும் பெற்றுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நேற்றைய மேற்கு இந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் மேக்ஸ்வெல் 5 ஆவது முறையாக சதமடித்து டி20 போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் ரோஹித்தின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வெ.அருண்குமார்