Skip to main content

மாமியார் கூட சண்டையா..? அம்மாயி அம்மா குழம்பு செய்யுங்க, வயிறு முட்ட சாப்பிடுங்க...!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

பேய்க்கு வாக்கப் பட்டால் சுடுகாட்டுலதான் படுக்க வேண்டும்  என்பது போல ஆகி விட்டது மஞ்சுவுக்கு. எவ்வளவு பக்குவமா  நடந்து கிட்டாலும் மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்கவே முடியவில்லை. ஆகாத மருமகள் கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்பது போல இவள் மூச்சு காத்து கூட  ஆகாமல் போய் விட்டது. உதட்டுல  உறவு உள்ளத்துல  பகையாக இருந்த குணம் மாறி , ஈர நாக்குக்கு எலும்பில்லை என்பது போல மாமியார் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் 'கொரோனா வைரஸை விட' மோசமான பாதிப்புகளை மஞ்சுவின் மனசுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இளமையில் தன் மாமியார்க் காரியிடம்  அனுபவித்த கொடுமைக்கெல்லாம் இப்போது மஞ்சுவை பழிவாங்கும் வேலையை மிக சிறப்பாக செய்து கொண்டிருந்தாள்.

 

jk



மகளை  பெற்ற தாய் மருமகனை மகன் போல பாவிக்கும் போது மகனை பெற்ற தாய் மருமகளை ஏன் மகள் போல் பாவிப்பதில்லை என்ற சந்தேகம் மஞ்சுவின் அடிமனதில் நீண்ட நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது.  அம்மாவின் நினைவு வந்தது அவளுக்கு . கேரளா மாப்பிள்ளை, கை நிறைய சம்பாதிக்கிறார் என அப்பா சொன்ன போது அவ்வளவு தூரத்தில் எல்லாம் பொண்ணை கட்டிக் குடுக்க வேணாம் என மறுத்தவள் மஞ்சுவின் அம்மா. நீலிக்கு கண்ணீர் இமையிலேங்கிற மாதிரி  ''உங்க பொண்ண நான் நல்லா பாத்துக்குவேன் என்று அம்மாவின் கை பிடித்து கெஞ்சிய''  அதே மாமியார்தான்  தனக்கு குழந்தை உண்டாவதில் தாமதம் ஆவது தெரிந்ததும் இப்படி அரக்கி குணமாக மாறிப் போய் விட்டதை எண்ணி வருந்தினாள். 

நேத்து நடந்த  குழம்பு கூத்தை நினைக்கையில் சிரிப்புதான் வந்தது. மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். கிணற்றடியில் ஒரு வார துணியையும் சேர்த்து துவைத்து அலசி காயப் போட்டு அடுப்படிக்கு சாப்பிட வந்தா  ஒரு சொட்டு குழம்பு கூட மிச்சம் வைக்காம குழம்பு சட்டி காலியாக இருந்தது. திங்கிறத தின்னு முடிச்சிட்டு நல்லா தூங்கிகிட்டு இருந்தாள் மாமியார்காரி. மஞ்சுவுக்கு பசி தாங்கவில்லை. ஏதாவது குழம்பு வைத்தாலும் மாமியார் மூக்கு வேர்த்துடும். அவ்வப்போது வந்து இங்கு குழம்பு வாங்கும் பக்கத்து வீட்டு கோமதி நினைவு வந்தது. தோட்டத்து வழியாக போய் கோமதியிடம் , குழம்பு இருக்கா என கேட்டாள். இப்பதான் எல்லாம் காலி பண்ணுனோம். சரி, இதுக்கா கவலை படுற . உனக்கு ''அம்மாயி அம்மா குழம்பு''  தெரியுமா தெரியாதா? ரெண்டு நிமிஷம் அப்டியே நில்லு. குழம்பு ரெடி பண்ணி தர்றேன் என்ற கோமதி , தோட்டத்தில் அவள் பக்கத்தில் இருந்த  நாலு மிளகாய பிடுங்கி வீட்டுக்குள்ள போய் ரெண்டு உப்புக் கல்லு சின்ன உருண்டையா புளியும் தேங்காய் எண்ணெயும்  எடுத்து வந்தவள் அங்கிருந்த கல்லில் வைத்து நல்லா இடிச்சு நசுக்கி  எண்ணெய  ஊத்தி சின்ன  கிண்ணத்தில் வைத்து கொடுத்தாள். இதுதான் இங்க கேரளாவுல அம்மாயி அம்மா குழம்பு. 

உங்க தமிழ்ல சொல்லனும்னா மாமியார் குழம்பு . இதுக்கு ஒரு கதையும் உண்டு . ரொம்ப காலத்துக்கு முன்ன, இங்க கேரளாவுல ஒரு மாமியார்காரி மருமகள சரியா சாப்பாடு போடாம கொடுமை செஞ்சப்ப ஒரு வனதேவதை வந்து இந்த குழம்பு வைக்க சொல்லி குடுத்ததா கதை ஒன்னு உண்டு. சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கும் என்று சொல்லி விட்டு சென்றாள் பக்கத்து வீட்டு கோமதி. உண்மையிலயே அபார ருசியாக இருந்தது அம்மாயி அம்மா குழம்பு. எப்பவுமே ரெண்டாவது சாதம்  போட்டுக் கொள்ளாத மஞ்சு,  சாயந்திரம் தூங்கி எந்திரிச்ச உடனே நேரம் காலம் பாக்காம சோறு திண்னும்  மாமியாருக்கு ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காம சோத்து சட்டிய  காலி பண்ணி சுத்தமா கழுவியும் வச்சுட்டா.  அப்பவே இன்னொரு முடிவும் எடுத்தா மஞ்சு. நான்தான் படிச்சு இருக்கனே... வேலைக்கு போயி சுயமா சம்பாதிச்சு சொந்தக் காசுல சாப்பிட்டாகணும் என்று..!
 

Next Story

கணவனின் தொடர் தொல்லை; காலை வெட்டிய மனைவி கைது

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Continued action by the husband; Arrested wife who decided in anger

 

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தினமும் மது அருந்திவிட்டு கணவன் தகராறு செய்ததால், மனைவி கணவனின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்திற்கு உட்பட்டது எருமாடு கிராமம். இந்த கிராமத்தின் பள்ளியரா எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரன் - சாரதா தம்பதியினர். இவர்களுக்கு சுஜாதா, சுனிதா, பிரியா, சிவானந்தம் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் குமரன் தினந்தோறும் மது குடித்துவிட்டு மனைவி சாரதாவிடம் தகராற்றில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

 

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு மனைவியிடம் குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் காலை வெட்டியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை பார்த்த பொழுது கணவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். கால் பகுதியில் நரம்பு துண்டிக்கப்பட்டதால் உடலில் இருந்த ரத்தம் அனைத்தும் வெளியேறி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்த நிலையில். சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா காவல்துறையினர் உயிரிழந்த குமரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, உயிரிழப்புக்கு காரணமான மனைவி சாரதாவை கைது செய்தனர்.

 

 

Next Story

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

coimbatore family return pudukkottai temple karur incident 

 

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கமல் இருதயராஜ் குடும்பத்தினர் மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செக்ஃபோன்சன் குடும்பத்தினர் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறிய ரக சரக்கு வாகனத்தில் புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர். பின்னர் வழிபாட்டை முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் கோவைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திருச்சிக்கு தார் ஏற்றிச் சென்ற மற்றொரு கனரக வாகனமும் வந்து கொண்டிருந்தது.

 

இந்நிலையில் கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தென்னிலை போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

முதற்கட்ட விசாரணையில் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கமல் இருதயராஜ் மனைவி முத்துலட்சுமி (வயது 38), பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செக்ஃபோன்சன் மனைவி நதியா (வயது 37) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த முத்துலட்சுமியின் குழந்தைகள் பாலச்சந்திரன் (வயது 12), கோவர்தனி (வயது10), மேலும் பன்னீர்செல்வம், ரூபன், வெங்கடேஷ், ரஜினி உள்ளிட்ட 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விபத்து குறித்து காவல்துறை அளித்த தகவலின் பேரில், உறவினர்கள் மருத்துவமனைக்கு வரவுள்ளனர். அதன் பிறகு முழு விவரம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.