Skip to main content

530 பொறியியல் கல்லூரிகள்... 2.63 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை! ஏஐசிடிஇ அனுமதி!!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

tamilnadu engineering colleges aicte

 

நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 530 பொறியியல் கல்லூரிகள் மூலம் 2,63,184 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கியுள்ளது.

 

இது மட்டுமின்றி, தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், அக்கல்லூரிகள் மூலம் முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 80 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பி.ஆர்க்., கட்டடக்கலை இளநிலை பட்டப்படிப்பிற்கு, 22 கல்லூரிகளில் 1,520 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2020 - 2021ம் கல்வி ஆண்டில் ஏஐசிடிஇ மூலம் வழங்கப்படும் பி.ஆர்க்., அப்ளைடு ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட், வரைகலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமையல் கலை, மேலாண்மை பட்டப்படிப்புகள், எம்.சி.ஏ., பார்மசி ஆகிய பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும் ஏஐசிடிஇ வழங்கியுள்ளது.

 

தமிழகத்தில் அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 496 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவை டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்புகளை வழங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் மூலம் 1,84,371 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளவும் ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. 

 

எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் 358 கல்வி நிறுவனங்களில் 30,306 இடங்களிலும், எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் 350 கல்வி நிறுவனங்களில் 29,786 இடங்களிலும், எம்.சி.ஏ., பட்டப்படிப்பில் 183 கல்வி நிறுவனங்களில் 10,606 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

 

முதுநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் ஏற்கனவே உள்ள 618 கல்வி நிறுவனங்களில் 71,530 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.