Skip to main content

530 பொறியியல் கல்லூரிகள்... 2.63 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை! ஏஐசிடிஇ அனுமதி!!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

tamilnadu engineering colleges aicte

 

நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 530 பொறியியல் கல்லூரிகள் மூலம் 2,63,184 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கியுள்ளது.

 

இது மட்டுமின்றி, தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், அக்கல்லூரிகள் மூலம் முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 80 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பி.ஆர்க்., கட்டடக்கலை இளநிலை பட்டப்படிப்பிற்கு, 22 கல்லூரிகளில் 1,520 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2020 - 2021ம் கல்வி ஆண்டில் ஏஐசிடிஇ மூலம் வழங்கப்படும் பி.ஆர்க்., அப்ளைடு ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட், வரைகலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமையல் கலை, மேலாண்மை பட்டப்படிப்புகள், எம்.சி.ஏ., பார்மசி ஆகிய பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும் ஏஐசிடிஇ வழங்கியுள்ளது.

 

தமிழகத்தில் அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 496 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவை டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்புகளை வழங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் மூலம் 1,84,371 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளவும் ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. 

 

எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் 358 கல்வி நிறுவனங்களில் 30,306 இடங்களிலும், எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் 350 கல்வி நிறுவனங்களில் 29,786 இடங்களிலும், எம்.சி.ஏ., பட்டப்படிப்பில் 183 கல்வி நிறுவனங்களில் 10,606 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

 

முதுநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் ஏற்கனவே உள்ள 618 கல்வி நிறுவனங்களில் 71,530 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.