Skip to main content

மாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு!#2

Published on 30/07/2020 | Edited on 03/08/2020

 

Auditor study

 

பிளஸ்-2 முடிச்சாச்சு... அடுத்து என்ன படிக்கலாம் என்ற தடுமாற்றத்தில் இருப்போருக்கு 'நக்கீரன் இணையம்' வழங்கும் வழிகாட்டி தொடர் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். கோர் ஏரியா என்று சொல்லக்கூடிய முதன்மைப் பாடங்களைத் தவிர்த்த பிற வாய்ப்புள்ள பாடப்பிரிவுகள் குறித்தும், சந்தையில் அதற்கான தேவை குறித்தும் இங்கே விவரித்து வருகிறோம்.


கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கும் மிகப்பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாகி இருக்கிறது. பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பில் பி.காம்., பி.பி.எம்., பி.பி.ஏ., அல்லது பி.ஏ., பொருளாதாரம், கூட்டுறவு, வரலாறு இப்படி தெரிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். 


கலைப்பிரிவு மாணவர்கள் பலர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு என்றில்லாமல், பட்டய கணக்காளர் படிப்பைப் பற்றியோ, அதன் தனித்தன்மைகள் குறித்தோ தெரிந்து கொள்ள முனைவதில்லை. உண்மையில் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என தொழில்சார் படிப்புகளைப் போல பட்டய கணக்காளர் படிப்பும் எப்போதும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும்.


பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவை படித்த மாணவர்கள் பி.காம்., பி.பி.ஏ., என்று இல்லாமல் பட்டயக் கணக்காளர் எனப்படும் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் என்ற தொழில்படிப்பில் சேர்ந்து படிக்க முடியும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாகவே ஆடிட்டிங் படிப்பில் சேரலாம். அதைப்பற்றி இங்கு காண்போம்.


கேள்வி: சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (சிஏ) படிப்பில் சேர கல்வித்தகுதிகள் என்னென்ன?


சி.ஏ., படிப்பில் சேர பிளஸ்&2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ., படிப்பில் நேரடியாகச் சேரலாம்.


கேள்வி: பிளஸ்-2 முடித்தவர்கள் சி.ஏ., படிப்பில் எப்படிச் சேர முடியும்?


பலரும் கருதுவதுபோல் பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவு முடித்தவர்கள்தான் சி.ஏ., படிப்பில் சேர முடியும் என்பது இல்லை. எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்தவர்களும் சி.ஏ. படிக்கலாம். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சி.ஏ. படிப்பில் சேர்வதற்கு முன்பாக, 'சி.ஏ. பவுண்டேஷன்' படிப்பில் சேர வேண்டும். படிப்புக்காலம் ஓராண்டு ஆகும். நான்கு தாள்கள் கொண்டது. தேர்ச்சி பெற 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து, 'சி.ஏ. இன்டர்மீடியேட்' பாடப்பிரிவில் சேரலாம். 


கேள்வி: பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ. படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன?


பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சி.ஏ. படிப்புக் காலம் என்பது 4 ஆண்டுகளைக் கொண்டதாகும். பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., போன்ற வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ. பவுண்டேஷன் பாடப்பிரிவில் சேராமலேயே, நேரடியாக சி.ஏ. இன்டர்மீடியேட் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். இது ஓராண்டு படிப்பு ஆகும்.


இதில் குரூப்-1, குரூப்-2 என இரு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 பாடங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு குரூப்பில் உள்ள பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே, அடுத்து நேரடியாக யாராவது ஒரு ஆடிட்டரிடம் மூன்று ஆண்டுகள் நேரடிப் பயிற்சிக்குச் சேர்ந்து பயில்வது கட்டாயம். 


அங்கு இரண்டரை ஆண்டுகள் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் சி.ஏ. ஃபைனல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சி.ஏ. ஃபைனலிலும் குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் தேர்ச்சி பெற்ற பிறகு ஆடிட்டராக முறையாகப் பதிவு செய்து கொள்ளலாம்.


கேள்வி: வணிகவியல் சாராத பட்டப்படிப்பை முடித்தவர்கள் சி.ஏ. படிப்பில் சேர முடியாதா?


அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. எந்த ஒரு பட்டப்படிப்பை முடித்தவரும் சி.ஏ. படிப்பில் சேரலாம். பி.காம்., போன்ற வணிகவியல் படிப்பை முடித்தவர்களுக்கு, சி.ஏ. படிப்பது கொஞ்சம் எளிமையாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். யாராக இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 மணி நேரங்களாவது சி.ஏ. படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.


பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.காம்., போன்ற வணிகவியல் பிரிவை முடித்தவர்கள் 55 விழுக்காடும், வணிகவியல் சாராத இதர பட்டப்படிப்பு முடித்தவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கும் குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், சி.ஏ., படிக்க வேண்டுமெனில் அவர்கள் பிளஸ்-2 மாணவர்களைப் போல் சி.ஏ., ஃபவுண்டேஷன் பாடப்பிரிவு மூலமாகத்தான் உள்ளே நுழைய முடியும். 


கேள்வி: சி.ஏ., படிப்புக்கு எதிர்காலம் எப்படி இருக்கிறது?


சி.ஏ., முடித்த ஆடிட்டர்களுக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் இப்போதைய நிலையில், 2.75 லட்சம் ஆடிட்டர்கள்தான் உள்ளனர். இன்றைய நிலையில், இன்னும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடிட்டர்களுக்கு தேவைப்பாடு உள்ளது. 


ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்திற்குப் பிறகு ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. தொழில் நிறுவனங்கள், தனி நபர்கள் வருமான வரி செலுத்த ஆடிட்டர்களின் உதவியின்றி செயல்பட முடியாது. சி.ஏ. முடித்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சுயமாகவும் பிராக்டீஸ் செய்யலாம்.


கேள்வி: ஒரு தாளில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் எல்லா பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும் என்கிறார்களே?


அப்படித்தான் பலரும் தவறான கற்பனையில் பேசி வருகின்றனர். திறமையான மாணவர்களைக்கூட, இதுபோன்ற தவறான புரிதல்கள் சோர்வு அடையச் செய்திடும். 


சி.ஏ., பவுண்டேஷன் படிப்பில் மட்டுமே இத்தகைய நிலை உள்ளது. அதில் மொத்தம் நான்கு பாடங்கள் உள்ளன. தேர்ச்சி பெற 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற வேண்டும். மொத்தமாக 50 விழுக்காடு அல்லது அதற்கு மேலும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு தேர்வில் தோல்வி அடைந்தாலோ அல்லது மொத்தமாக பெற வேண்டிய 50 விழுக்காட்டிற்குக் கீழ் மதிப்பெண் பெற்றிருந்தாலோ தோல்வி அடைந்தவராகக் கருதப்படுவர். அத்தகைய சூழ்நிலையில் மட்டுமே ஒரு தேர்வர் மீண்டும் நான்கு தாள்களையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.


இன்டர்மீடியட் மற்றும் ஃபைனல் படிக்கும்போது தோல்வி அடைந்த பாடங்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு எழுதினால் போதுமானது. இங்கும் தேர்ச்சிக்கு 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இன்டர்மீடியட் பிரிவில் குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகளும், ஃபைனலில் குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகளும் உள்ளன.

 

http://onelink.to/nknapp


ஒவ்வொரு பிரிவிலும் தலா நான்கு தாள்கள் தேர்வு எழுத வேண்டும். நான்கு தாள்களிலும் சேர்த்து மொத்த சராசரி 60 விழுக்காடு (ஃபவுண்டேஷன் எழுதும்போது இது 50 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறோம்) மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். தோல்வி அடைந்த பாடங்களில் மறுதேர்வு எழுத, தொடர்ந்து மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.


ஒட்டுமொத்த சராசரி 60 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தாலும் அது முழுமையான தேர்ச்சியாக கருத்தில் கொள்ள முடியாது. அதனால் இன்டர்மீடியேட், ஃபைனல் எழுதும்போது ஒவ்வொரு தேர்விலும் சராசரியாக 60 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண்கள் பெறுவது அவசியம் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கேள்வி: தமிழ் வழியில் சி.ஏ., தேர்வு எழுத முடியுமா?


இப்போதைக்கு அந்த வாய்ப்பு இல்லை. ஆங்கிலம் அல்லது ஹிந்தி வழியில் மட்டுமே இந்தியாவில் சி.ஏ. படிப்புகள் வழங்கப்படுகின்றன.


கேள்வி: எங்கு, எப்படிப் படிக்கலாம்?


சி.ஏ. படிப்பு என்பது ஃபவுண்டேஷன், இன்டர்மீடியட், ஃபைனல் ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. சில பயிற்சி மையங்கள், ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியேட் வரை முழுநேரமாகக் கற்றுக்கொடுக்கின்றன.


மேலும், விவரங்களுக்கு, www.icai.in என்ற இணையதளத்தில் காணலாம். 

 

 

Next Story

பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆடிட்டர்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Auditor misbehaving with trainee students

 

ஈரோடு காந்திஜி சாலை, ஜவான் பவான் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2-ம் தளத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (41). ஆடிட்டர். இவர் அதே தரைத்தளத்தில் அலுவலகம் வைத்து ஆடிட்டிங் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் சத்தியமூர்த்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து உடன் படிக்கும் மாணவரிடம் கூறியுள்ளார். இதை அடுத்து அந்த மாணவர் இது பற்றி பயிற்சியாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டுள்ளார். அப்போது சத்தியமூர்த்தி அந்த மாணவரிடமும், சம்பந்தப்பட்ட மாணவியிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்தியமூர்த்தி மாணவிக்கு நியாயம் கேட்டு வந்த மாணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் சம்பந்தப்பட்ட மாணவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரிடம் சத்திய மூர்த்தியின் பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் நேற்று மாலை சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்து, அவரை சரமாரியாக  அடித்து உதைத்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து வந்த சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். இந்நிலையில் சத்தியமூர்த்தியின் அலுவலகம் முன்பு திரண்ட மாணவ - மாணவிகள், உறவினர்கள் சத்தியமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். கைது செய்யவில்லை என்றால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரம்பட்டி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், சூரம்பட்டி போலீசார் ஆடிட்டர் சத்தியமூர்த்தி மீது 506(ii) மிரட்டல் விடுப்பது, 294 (பி) கெட்ட வார்த்தைகள் பேசுவது, பெண்களுக்கு எதிரான கொடுமை செய்வது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது ஆடிட்டர் சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் அவர் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.

 

 

Next Story

இலவச நீட் கோச்சிங்! வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது எளிதே! - வழிகாட்டுகிறது கிங்ஸ் அகாடமி!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

Free Neet Coaching - Studying MBBS in abroad is easy now - Kings Academy Offer

 

மருத்துவராக வேண்டும் என்பது மாணவர்களில் பெரும்பாலானவர்களின் லட்சியமாக இருக்கும். மருத்துவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பு என்றைக்குமே அலாதியானது. இதனால், மருத்துவத் துறையில் சேர்ந்து படிப்பதற்கான ஆர்வமும் அதிகமாக இருக்கும். மருத்துவம் என்பது வேலையல்ல... சேவை. அதனாலேயே மருத்துவர்கள் மக்களின் போற்றுதலுக்குரியவர்களாக இருக்கிறார்கள். உயிர்காக்கும் மருத்துவராக வேண்டும் என்று விரும்புவரா நீங்கள்?

 

இலவச நீட் கோச்சிங்!
 

இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், நீட் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். மருத்துவராகும் உங்கள் கனவை நனவாக்க `கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி (KIMA)’ உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. மருத்துவர் கனவோடு இருக்கும் மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு மாத இலவச ஆன்லைன் நீட் கோச்சிங்கை வழங்குகிறது.

 

Free Neet Coaching - Studying MBBS in abroad is easy now - Kings Academy Offer

 

திறமையான வல்லுநர் குழு மூலம் நடத்தப்படும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் நீட் மாதிரி டெஸ்டுகள், இலவச ஸ்டடி மெட்டீரியல்கள் வழங்கப்படும். இந்த கோர்ஸில் இணைந்து பயன்பெறத் தவறாதீர்!

 

வெளிநாட்டிலும் மருத்துவம் படிக்கலாம்!
 

பிளஸ் டூவில் நல்ல கட்-ஆஃப் இருந்தும், நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாலும், சில மதிப்பெண் புள்ளிகளால் மருத்துவப் படிப்பைத் தவறவிட்டர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் குறைந்த செலவில் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க முடியும் என்கிறது மாமல்லபுரத்தில் இயங்கிவரும் கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி.

 

ஃபிலிப்பைன்ஸின் முன்னணி மருத்துவக் கல்லூரியான தாவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷன் (DMSFI)-இன் இந்தியப் பயிற்சி நிறுவனமாக கிங்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்திய மாணவர்களுக்கு சிறப்பான நீட் பயிற்சியை அளித்து வருவதோடு குறைந்த செலவில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு 1.4 வருட சிறப்புப் பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது.

 

Free Neet Coaching - Studying MBBS in abroad is easy now - Kings Academy Offer

 

ஃபிலிப்பைன்ஸில் என்ன பிளஸ்?
 

ஃபிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. நீட் தேர்ச்சி மட்டுமே போதும். இதற்காகத் தனியாக வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய அவசியமில்லை. அதேபோல், தங்குவதற்கான செலவும், உணவுக் கட்டணமும் குறைவு. சர்வதேசத் தரத்திலான அதிநவீன வசதிகள் கொண்டது DMSFI. அனுபவம் வாய்ந்த துறை வல்லுநர்கள் கொண்ட ஆசிரியர் குழு மூலம் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி வருகிறது. மாணவர்களுக்குப் பாதுகாப்பான நாடாகக் கருதப்படுகிறது ஃபிலிப்பைன்ஸ். ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருப்பதால், மாணவர்களுக்கு மொழி ஒரு பிரச்னையாக இருக்காது. இந்தியாவில் இருந்து எளிதாக ஃபிலிப்பைன்ஸ் சென்றுவர முடியும் என்பது கூடுதல் வசதி.

 

FMGE தேர்வு என்றால் என்ன?
 

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட Foreign Medical Graduates Examination - FMGE என்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஃபிலிப்பைன்ஸ் தாவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் FMGE தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்தத் தேர்வுக்கான பயிற்சியையும் கிங்ஸ் நிறுவனம் அளிக்கிறது. இந்த ஆண்டு FMGE தேர்வில் DMSFI-ல் பயின்ற மாணவர்கள் 6 பேர் தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறார்கள்.

 

Free Neet Coaching - Studying MBBS in abroad is easy now - Kings Academy Offer

 

பொன்னான வாய்ப்பு!
 

வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் உங்கள் மகனோ/மகளோ தேர்ச்சி பெற திறமையான வல்லுநர்கள் குழு மூலம் கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி இலவச ஆன்லைன் பயிற்சியை அளிக்கிறது. குறைந்த இடங்களே இருப்பதால், உடனடியாக இந்த லிங்கில் (www.kingsneet.in) உங்கள் தகவல்களைக் கொடுத்துப் பதிவு செய்துவிடுங்கள்... இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டு விடாதீர்கள்!