அண்மையில் நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ.(Central Board of Secondary Education) பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்தேர்வுக்கான கேள்வித்தாள் மற்றும்12ஆம் வகுப்புக்கான பொருளாதாரம் கேள்வித்தாள் இவ்விரண்டும்தேர்வுக்கு முன்னரே வெளியாகி பரபரப்பாக்கியுள்ளது. இதனையடுத்து இரண்டு தேர்வுகளுக்கும் மறுதேர்வை சி.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கான மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாடப்பிரிவுகள் மட்டுமின்றி 10ஆம் வகுப்பு சமூகஅறிவியல், 12ஆம் வகுப்பு உயிரியல் பாடப்பிரிவுகளுக்கான கேள்வித் தாளும் முன்கூட்டியே வெளியானதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீடியாக்கள் முன் தாங்கள் சி.பி.எஸ்.சி. தேர்வுமுறை மீதான நம்பிக்கையையே இழந்துவிட்டதாகவும், ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் புலம்புகிறார்கள். இது எவ்வளவு பெரிய தேச அவமானம். பள்ளி பொதுத்தேர்வுகளில் நடக்கும் இத்தகைய மோசடி இந்த தேசத்திற்கு புதிதல்லதான். கேள்வித்தாள்களை திருட்டுத்தனமாக விற்பது, குறிப்பிட்ட மாணவர்களை காப்பி அடிக்கஅனுமதிப்பது, கேள்வித்தாள்களை வாட்ஸ் ஆப்களில் அனுப்புவது என பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் இந்த மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான்வருகின்றன. பள்ளி, கல்லூரி பாடங்களில் தேர்ச்சி பெற திருட்டுதனமாக ஏஜெண்ட்களை வைத்து பணம் கொடுத்து தேர்ச்சி பெறும்முறை காலங்காலமாக நடந்து வருகிறது. அதோடு கடந்த பத்தாண்டுகளாக கேள்வித்தாள்களை விற்பது மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது. கடந்த ஆண்டுகளில் கூட தமிழ்நாடு பள்ளி பொதுத்தேர்வில் கேள்வித்தாள்கள் வாட்ஸ் ஆப் முலமாக வெளியாகி பரபரப்பானது.
பள்ளி பொதுத்தேர்வுகளில்தான் இந்த மோசடி என்றால் அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் இதைவிட மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெறுகிறது. இந்தியஅளவில் ரயில்வே, எஸ்.எஸ்.சி.(Staff Selection Commission) தேர்வுகளின் வினாத்தாள் முறைகேடாக விற்கப்பட்டதை சி.பி.ஐ. விசாரணை செய்ததைநாடறியும். இதைவிட மிகப்பெரிய, இன்றும் தொடர்கதையாகி வரும் மோசடி தமிழகத்தின் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. தேர்வுகளில் பார்க்கலாம். டி.என்.பி.எஸ்.சி. (Tamil Nadu Public Service Commission)குரூப் I மற்றும் குரூப் II தேர்வுகளில் நடந்த மோசடிகள் உச்சநீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குரூப் 4, வி.ஏ.ஒ. தேர்வுகள், குரூப் I முதன்மை தேர்வில் வினாத்தாள் மோசடி, நேர்முகத்தேர்வு குளறுபடி என பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின்வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்ததையும்நாடறியும். இதில் ஆசிரியர் தேர்வாணையம் (Teachers Recruitment Board) கொஞ்சமும் விதிவிலக்கில்லை. சமீபத்தில் டி.ஆர்.பி நடத்திய அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு நாடறியும். பின்னர் மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி, பள்ளி- கல்லூரிகளின் பொதுத்தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில்மட்டும்தான் இத்தகைய மோசடிகள் நடக்கிறதா. பல்கலைக்கழகங்களில் இதைவிட அதிகமான முறைகேடுகள் நடைபெறுகின்றன. கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்தில் தொடங்கி பணத்திற்காக மதிப்பெண்கள் வழங்குவது, ஆராய்ச்சிப் படிப்பில் முறகேடுகள் என இந்த பட்டியல் நீளமானது. தமிழகத்தில் பல ஆராய்ச்சி மாணவர்கள், ஏற்கனவே வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரைகளை காப்பியடித்து, புதிய கட்டுரைகள் போல, சமர்ப்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, போலி கட்டுரைகளை கண்டுபிடிக்க, தமிழக பல்கலைகளுக்கு, புதிய'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் செயல்படும், 'இன்பிலிப்நெட்', தகவல் மற்றும் நூலக நெட்வொர்க் என்றமத்திய அரசு நிறுவனம், இந்த சாப்ட்வேரை வழங்கி உள்ளது. அதன்படி, 'தமிழக பல்கலைக்கழகங்கள்தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளைஇந்த புதிய சாப்ட்வேரில் இணைத்துகாப்பியடிக்கப்பட்டதா எனகண்டுபிடிக்க வேண்டும்' என, யு.ஜி.சி.(University Grants Commission) உத்தரவிட்டுள்ளது. ஆக இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பு எந்ததரத்தில் இருக்கிறது என இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
இன்னொருபுறம் இந்திய உயர்கல்விகளில் தரம் இல்லையென பன்னாட்டு நிறுவனங்கள் புகார் கூறுகின்றன. அறிவியல் படிப்புகளிலும், பொறியியல் படிப்புகளிலும் மிகக் குறைவான தரத்துடனேயே இந்திய மாணவர்கள் தேர்ச்சியடைவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களை ஆண்டுதேறும் ஆய்வுசெய்து உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் (Global Universities Rankings) இந்தியாவில் எந்த ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெறுவதில்லை. சீனா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகள் தரவரிசையில் முதல்25 இடங்களில் உள்ளன. இந்த விஷயத்தை பற்றி பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மிக வேதனையோடு குறிப்பிட்டார். ஆக மொத்தமாக பார்த்தால், குறைபாடுகள் கொண்ட பள்ளி கல்வி தரமும், பொதுத் தேர்வுகளிலும் போட்டித் தேர்வுகளிலும் தொடர்ந்து நடைபெறும் மோசடிகளும் இந்திய கல்வி முறையை சிதைத்து வருகிறது. இவை படிப்பின் மீது நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் வைத்திருக்கும் மாணவர்களுக்கு குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆசியாவில் இருக்கும் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில்கல்வியின் தரம் மிகவும் மேம்பட்டுள்ளது. ஆனால் இந்த நாடுகளுக்கு முன்னோடியே நமது பண்டைய இந்தியாவின் நாளந்தா மற்றும் தட்ஷசீலா பல்கலைக்கழகங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சியை நோக்கி முன்னேறும் ஒரு தேசத்தின் கல்வித்தரம் கேள்விக்குளாகியுள்ளது. இவ்வளவு குறைபாடுகளை கொண்ட கல்வித்துறை தேசத்தின் வளர்ச்சியை மிக அதிக அளவில் பாதிக்கும். ஒரு நாட்டின் மாணவர்கள், கல்வி முறை மீது நம்பிக்கை இழந்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.