தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆரம்பித்துவிட்ட நிலையில், மாணவர்கள் வினாத்தாள், கேள்வி, மதிப்பெண் என பல எண்ணவோட்டங்களை இழுத்துக்கொண்டு ஓடவேண்டிருக்கும் எனவே அந்த எண்ண ஓட்டத்தின் சிந்தனைகள் நேர்மறையாக இருக்கவேண்டும். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தேர்வு பற்றிய நேர்மறை எண்ணங்களையும், புத்துணர்ச்சியையும் பெற பின்வரும் டிப்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது நிம்மதியான உறக்கம் தேவை. தேர்வுகளுக்காக தீவிரமாக படித்தாலும் இரவு தூக்கத்தை தொலைக்கக்கூடாது. தூக்கமற்ற கண்விழிப்பு சோர்வை ஏற்படுத்ததும். நிம்மதியான தூக்கம் ஞாபகசக்தியை அதிகப்படுத்தும், சோர்வைகுறைக்கும்.
அடுத்தது நல்ல உணவு. காலம் தாழ்த்தாமல் நேரத்திற்கு சாப்பிட வேண்டும். நம் மூளை மற்றும் உடலின் செயல்திறனுக்கு ஊக்கமே குளூக்கோஸ்தான். நாம் சாப்பிடும் உணவுதான் குளுக்கோஸாக மாறி மூளைக்கும், உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கும். தொடர்ந்து மூன்று மணிநேரம் மூளைக்கும், கைக்கும் வேலை இருக்கிறது எனவே உணவை தவிர்க்கக்கூடாது. மனதும், உடலும் ஒரு முகப்படவேண்டிய தேர்வு நேரத்தில் மனதை சிறு பயம் மற்றும் படபடப்பு பற்றிக்கொள்ளும். உடல் அசாதாரண நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் காய்ச்சல், தலைவலி போன்றவை எளிதில் வரக்கூடும். ஆதலால் நல்ல தூக்கம், நல்ல உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் அதிகமாக புரோட்டீன் உள்ள உணவுகள் மற்றும் எதிர்ப்பாற்றல் தரும் உணவுகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.
அடுத்து கண்களை சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். படிக்கும் பொழுது உங்களின் இடது புறத்திலிருந்து லைட்டின் ஒளியானது புத்தகம் மீதும் உங்கள் மீதும் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். கண்களில் ஏதேனும் பார்வை பிரச்சனைகள் இருந்தாலும் மருத்துவரை ஒருமுறை அணுகுவது நல்லது. நீங்கள் தேர்வின் பொழுது குறிப்புகளுக்காக கணினியையோ அல்லது மொபைலையோ பயன்படுத்திக்கொண்டிருந்தால் தொடர்ந்து ஒளிர்திரை பார்க்கப்படும்போது கண் சோர்வடையும் அதை தவிர்க்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரு உள்ளங்கைகளினால் இரு கண்ணையும் ஒரு நிமிடம் பொத்தி வைப்பது கண்ணின் சோர்வை நீக்கும். மேலும் பசுமை நிறைந்த இடங்களை நோக்குவது கண்ணிற்கு புத்துணர்ச்சியை தரும். தூரமாக உள்ள பொருட்களை பார்ப்பது எடுத்துக்காட்டாக தொலைவில் உள்ள இயற்கை காட்சிகளை பார்க்க வேண்டும் ஏனெனில் எப்போதுமே கண்ணுக்கு அருகில் புத்தங்களை வைத்து படிக்கும் சூழலில் கண்களில் செயல்பாட்டில் கிட்டப்பார்வை மட்டுமே அதிகமாக இருக்கும். எனவே தூரப்பார்வைக்கும் சிறிது இடம்கொடுக்க வேண்டும்.
அடுத்து சீரான இடைவேளை வேண்டும் 24 மணிநேரமும் புத்தகத்திலேயே லயித்துவிடக்கூடாது. ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடமாவது இடைவேளை கொடுக்கவேண்டும். சில உடல் பயிற்சிகள்(physical activity ) தேவை. நடந்துகொண்டு படிப்பது, மாடி படி இறங்குவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற எளிய உடல் பயிற்சிகள் செய்யவேண்டும். இது மன இறுக்கத்தை போக்கும்.
அடுத்து எல்லாவற்றிலும் முக்கியமானது நேர்மறை எண்ணங்களை வளர்த்தல். அதாவது தொடர்ந்து தேர்வு,வினாத்தாள்,மதிப்பெண் போன்ற விஷயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது நேர்மறையான எண்ணங்கள் மிகவும் அவசியம். முடிந்துபோன தேர்வைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கிவிடக்கூடாது. ஏனெனனில் அடுத்தடுத்து தேர்வுகளுக்காக ஓட வேண்டியிருக்கும் இதனால் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது அவசியம். நீங்கள் நினைத்த மதிப்பெண் கிடத்ததுபோலவும் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்பது போலவும் மனதை கனவு காணவைப்பது நேர்மை எண்ணங்களை வளர்க்கும்.
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் மாணாக்கர்களே.....