Skip to main content

பலவீனமடையும் புவியின் காந்தப்புலம்... ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன..?

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

earths magnetic field weakens faster

 

பூமியின் கந்த புலத்தில் ஏற்பட்டுவரும் மாற்றத்தால் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் ஏவுதல்களில் எதிர்காலத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 


ஆப்பிரிக்காவிலிருந்து தென் அமெரிக்கா வரை பரவியுள்ள நிலப்பரப்பில், பூமியின் காந்தப்புலம் படிப்படியாக பலவீனமடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர். பொதுவாகப் பூமியின் காந்தப்புலம் என்பது பூமியில் மனிதர்களின் வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வான்வெளி கதிர்வீச்சு மற்றும் சூரியனிலிருந்து வரும் பாதிப்புத்தரக்கூடிய துகள்களை வளிமண்டலத்திற்குள் நுழையாமல் தடுத்து வரும் பூமியின் முக்கிய அமைப்பாகும் இந்த காந்தப்புலம். 

இப்படிப்பட்ட இந்த காந்தப்புலம் கடந்த 200 ஆண்டுகளில், அதன் வலிமையில் 9% ஐ இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையேயான பகுதிகளில் இதன் வலிமை மிக அதிக அளவில் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை என அழைக்கப்படும் இந்த நிகழ்வால், 1970 முதல் 2020 வரை, இந்த பகுதியில் குறைந்தபட்ச புல வலிமை சுமார் 24,000 நானோடெஸ்லாவிலிருந்து 22,000 ஆகக் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே நேரம் இந்த பரப்பளவு ஆண்டுக்கு 20 கி.மீ வேகத்தில் விரிவடைந்தும் வருகிறது. 

 

earths magnetic field weakens faster

 

இப்பகுதிகளில் இதுபோல காந்தப்புலம் பலவீனமாக இருப்பதால் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற விண்கலங்கள் தொழில்நுட்ப செயலிழப்புகளை சந்திக்கும் அபாயம் எதிர்காலங்களில் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். காந்தப்புலம் வலிமையிழப்பதால் பூமியின் அருகில் அமைந்துள்ள செயற்கைக்கோள் சுற்று வட்டப்பாதையில் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் நுழைந்து செயற்கைக்கோள்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. பொதுவாகக் காந்தப்புலத்தின் திசை மாற்றம் என்பது சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஒரு செயலாகவே பார்க்கப்பட்டாலும், காந்தப்புலம் வலிமை குறைவது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

 


 

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘இன்சாட் - 3 டி.எஸ்.’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
'Insat - 3DS' satellite successfully launched

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனை ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் நேற்று (16-02-24) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. மேலும், இந்த ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் இன்று (17-02-24) மாலை 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 

2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.