Skip to main content

ATM களில் ஏன் பணமில்லை?

Published on 23/04/2018 | Edited on 23/04/2018
atm

 

இந்தியாவில் இரண்டு தினங்கள் கருப்பு தினங்களாக நினைவுக்கூறப்படுகிறது. ஒன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 5. மற்றொன்று பணமதிப்பு நீக்கம் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நவம்பர் 8. முதலாவது கருப்பு தினம் சமூக பிரச்சினைக்கானது. இரண்டாவது கருப்பு தினம் பொருளாதார பிரச்சினைக்கானது. “கறுப்புப் பணத்தை பிடித்து விடுவோம்; கள்ளப் பணத்தை ஒழித்துவிடுவோம்; தீவிரவாத செயல்களுக்கான பணம் தடுத்து நிறுத்தப்படும்; லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்படும்” என்றெல்லாம் காரணங்களை முன்வைத்து அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. தங்கள் சொந்தக் கஷ்டத்தையும் மீறி அதைப் பலர் நம்பினர். லஞ்சமில்லா புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தார்கள். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாகிவிட்ட நிலையில், மக்கள் உணவுக்குகூட ரொக்கப் பணமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. பணத்தை மாற்றிக் கொள்ள நாட்டு மக்கள் வங்கிகளில் ஏ.டி.எம்களிலும் மணிக்கணக்கில் நின்று கஷ்டப்பட்டது நாடறியும். ஆனாலும் கருப்பு பண பதுக்கல்காரர்கள் தங்களின் பணத்தை தனியார் வங்கிகளில் எளிதாக மாற்றிக்கொண்டனர். ஆக கருப்பு பணம் வெள்ளையாகிவிட்டதே தவிர ஒழியவில்லை. ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்ததன் மூலமாக கள்ள நோட்டுக்களை ஒழிக்க முடியாது என்று பல பொருளாதார வல்லுநர்கள் முன்பே தெரிவித்தனர். தேசியப் புலனாய்வு நிறுவனத்தின் சார்பாக கொல்கத்தாவில் உள்ள புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி மொத்தத்தில் கள்ளப் பணம் என்பது சுமார் ரூ.400 கோடிதான் இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. இதை ஒழிப்பதற்கு இத்தகைய நடவடிக்கையா என்று பலர் கேள்வி எழுப்பினார்கள்.


ஆனால் இந்த அதிரடி நடவடிக்கையினால் என்ன நடந்தது. நாட்டின் பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்ததோடு, கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிட்டது. லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. வியாபாரமும் விவசாயமும் எப்போதும் இல்லாத அளவிற்க்கு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின. நாட்டின் பொருளாதார நிலை தடுமாறி கீழே போனது. மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்தது. “பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 1 முதல் 2% வரை குறைந்துவிட்டது. இந்த இழப்பு என்பது பணமதிப்பில் ரூ. 2 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2.5 லட்சம் கோடி வரை இருக்கும். மேலும் புதிய நோட்டுக்களை அச்சடிப்பதற்காக ரிசர்வ் வங்கி செலவிட்ட தொகை சுமார் ரூ. 8,000 கோடி. நீண்ட வரிசையில் நின்றதன் காரணமாக மக்கள் இழந்த வருவாய், செல்லா நோட்டுக்களை திரும்பப் பெற்றதன் காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்ட செலவினம், வங்கிகளின் எழுத்தர்கள், மேலாளர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் செலவிட்ட கூடுதல் நேரம், கூடுதல் பணத்துக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து எந்த வட்டியும் பெறாமல் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கொடுக்க நேரிட்ட தொகை என்று கணக்கு நீண்டுகொண்டே போகிறது” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 3.9.2017 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 


உயர்மதிப்பு பணம்தான் கருப்பு பணத்திற்கு முக்கிய ஆதாரம் என்று சொல்லி 1000, 500 நோட்டை செல்லாததாக்கிய மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டை அவசர அவசரமாக வெளியிட்டது மிகப்பெரிய வேடிக்கை.  2017 ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி ரூ.15.28 லட்சம் கோடி வரை அமைப்புக்குள் வந்து விட்டது. வெறும் ரூ.16,000 கோடி மட்டுமே புழக்கத்தில் வரவில்லை. 1,000 ரூபாய் தாள்களில் சுமார் ரூ.8,900 கோடி திரும்பி வரவில்லை; 500 ரூபாய் தாள்களில் ரூ. 7,100 கோடி வரை திரும்பி வரவில்லை.

 

atm


 

உண்மை என்னவென்றால் மத்திய அரசின் நோக்கமே பணத்தை அச்சிடுவதை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிப்பது. டிஜிட்டல் பொருளாதாரத்தால் பயனடைவது பெரு நிறுவனங்கள்தான்; சாதாரண மக்களுக்கு அது பெருத்த நஷ்டத்தையே உண்டாக்கும். சுமார் 6.25 கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பே இல்லை. பின் எப்படி முழு டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கொண்டுவர முடியும்? இந்நிலையில், அரசு தனது நோக்கமாக முன்வைத்த டிஜிட்டல் பொருளாதாரம், அதற்கான வசதி வாய்ப்பு கொண்ட மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. அதை நோக்கி மக்களைத் தள்ள முற்பட்ட மத்திய அரசு மெளனம் காக்கிறது.
 

அவசர அவசரமாக முடிக்கிவிடப்படும் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையால் அதிகப்படியான இலாபம் அடைந்து வருவது அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான விசாகார்டு (Visa),மாஸ்டர் கார்டு (MasterCard),மேஸ்ட்ரோ கார்டு (MaestroCard. இவையே இந்தியாவின் அனைத்து முக்கிய வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளாக உள்ளன. இவை இந்தியாவில் அனைத்து வங்கிகளுடனும் ஒப்பந்தத்தின் பேரில் அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை செய்து பெருத்த இலாபம் அடந்துவருகின்றன. ஏழைகள் பயன்படுத்தும் ஜன்தன் வங்கிக் கணக்குக்கு மட்டும் தான் இந்தியாவின் ரூபே கார்டு (RuPay Debit Card). இவை மட்டுமால்லாது இப்போது வேகமாக அதிகரித்து வரும் பேமண்ட் வங்கிகள் ஏர்டெல், பேடிம் (Paytm), ரிலையன்ஸ், ஆதித்யா பிர்லா நோவா, டெக் மகேந்திரா, சோழமண்டலம் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இவைகளை கொண்டுதான் அரசு பணமில்லா பரிவர்த்தனை கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது, இதற்காகத்தான் பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையே எடுக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்காலத்திற்கு பணமில்லா பரிவர்த்தனை அவசியம் தேவை தான். ஆனால் அது ஆரோக்கியமான அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்க வேண்டும்.  இப்பொது இவ்வளவு அவசரப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கலையே உண்டாக்கும். 90 சதவீத மக்கள் ரொக்க பரிவர்த்தனையை தாண்டி சிந்திக்காதபோது டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக பணம் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி குறைப்பது எந்தவிதத்தில் சரியானது.   

 

reserve


 

கடந்த காலங்களில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பணமில்ல பரிவர்த்தனை என்ற திட்டத்திற்காக பல குளறுபடிகளை நடத்திவிட்டது. அதிலுல் முக்கிய குளறுபடியாக பணத்தை அச்சிடுவதை குறைத்துவிட்டது. இப்போது நாடெங்கிலும் பிரச்சினையே இதுதான். ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, பீகார், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஏடிஎம்களில் அதிகளவிலான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பணத்தை அச்சிடுவதை குறைத்துவிட்டதனால் என்ன ஆனது. பணத்திற்கான தேவை அதிகளவில் இருந்தும் பணத்தின் அளிப்பு (அச்சிட்டு வெளியிடுவது) குறைந்துவிட்டது. பணத்தின் அளிப்பு குறைந்தால் ஒரு நாட்டில் என்ன நடக்கும். மக்களின் கைகளில் தேவைகேற்ப பணம் இல்லாததனால் மக்கள் வாங்கும் சக்தியை இழப்பார்கள். வாங்கும் சக்தி குறைந்துவிட்டால், பொருள் விற்பனை பெருமளவில் குறைந்துவிடும். அடுத்து உற்பத்தி குறைந்துவிடும். பொருள் உற்பத்தி நிறுவனங்கள், சேவை நிறுவனங்களின் விற்பனை குறைந்து வேலை இழப்பு ஏற்படும். வட்டிவீதம் அதிகரிக்கும் . தொழில்களில் முதலீடுகள் குறைந்து போகும். 


இதே பண அளிப்பு அதிகரித்தால் என்ன நடக்கும். மக்களின் கைகளில் பணம் புழங்கும். வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதற்காகத்தான் மன்மோகன் சிங் அரசு  நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதால் வியாபாரம் பெருகும், பொருள் உற்பத்தி அதிகரிக்கும். வட்டிவீதம் குறையும். தொழில்களில் முதலீடுகள் அதிகரிக்கும். புதுபுது தொழில்கள் அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகும். ஆக பன்னாட்டு நிறுவனங்களின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது. பணமில்லா பரிவர்த்தனைக்காக பணமில்லா ஏடிஎம் களாக காட்சித்தருகின்றன.  

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.