இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் அடுத்த மாதம் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை செப்டம்பர் 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக துபாயில் மோதவிருக்கிறது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் தேதி அதே மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதையடுத்தி, செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் ஓமனுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற அணிகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினுடைய 15 பேர் கொண்ட கிரிக்கெட் வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு தேர்வு தலைவர் அஜித் அகர்கர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரஷித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடமில்லை.