Skip to main content

'அம்மா' என்றால் தெரியும், 'அம்மம்' என்றால்? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #3  

Published on 16/05/2018 | Edited on 21/05/2018
amma paiyan



புதிய சொற்களை அறிவது என்னும் நம் பயணத்தில் நாம் முதன்மையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை பல இருக்கின்றன. தமிழ் மொழியின் தனித்தன்மைகளில் தலையாயது என்று அதன் சொற்பொருள் தன்மையைக் கூறலாம்.

சொல் என்றால் அது பொருளைத் தருவது. அதற்கென்று ஓர் அர்த்தம் இருக்கும். பொருள் தராதது சொல்லாகாது. அம்மா என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் இருக்கிறது. பெற்றெடுத்த தாயைக் குறிக்கிறது. பொருள் தராதவை வெற்றொலிக் குறிப்புகளாக நின்றுவிடும்.

 

 


சொல் எனப்படுவது ஏதேனும் ஒரு பொருளைக் கட்டாயம் குறிக்க வேண்டும். பொருள் தராதவற்றை நாம் சொல்லென்று கருதத் தேவையில்லை.

தமிழ் மொழியின் இந்தத் தன்மையை நம்மளவில் பொருத்திப் பார்ப்போம். சொற்களுக்குப் பொருள்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறோம். அந்தப் பொருள் நாமறிந்த ஒன்றாக இருக்கையில்தான் ஒரு சொல் நமக்குச் சொல்லாகிறது.

அம்மா என்பது நமக்குத் தெரிந்த பொருளையுடைய சொல். அதனால் அது நம் அறிவுப் பரப்பில் ஒரு சொல்லாகத் தெரிகிறது. சொல்லின் பொருள் தெரிந்ததால் அச்சொல்லை நாம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.

“அம்மம்” என்றும் ஒரு சொல் இருக்கிறது. அம்மம் என்ற சொல்லின் பொருள் நமக்குத் தெரிகிறதா? தெரியவில்லை. ஒரு சொல்லின் பொருள் நமக்குத் தெரியவில்லை என்றால் என்னாகும் ? அம்மா என்ற சொல் நாம் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டிலும் இடம் பெற்றதைப்போல் அம்மம் என்ற சொல் இடம்பெறப் போவதில்லை. நாம் அறியாதிருந்ததனால் அம்மம் என்ற சொல்லுக்கு நம் வாழ்க்கையில் இடமில்லை.

நம்மை அடையாத சொல் நம்மை விட்டுப் போய்விடுகிறது. நமக்கு உடைமையான ஒன்று நம்மால் கைவிடப்படுகிறது. காலப்போக்கில் அதன் பயன்பாடு அருகிப்போய்க் கேட்பாரற்றுக் கிடக்கும். பார்க்காத பயிரெல்லாம் பாழ் என்று சொல்வார்கள். ஒரு சொல் பாழடைவதும் இப்படித்தான்.

 

 

amma teaches



அம்மம் என்ற சொல்லுக்கு ‘முலை’ என்று பொருள். ஒரு பொருளிலிருந்து தோன்றும் விளைபொருளுக்கும் அப்பொருளே பெயராகும். குழல் இனிது, யாழ் இனிது என்பது குழல், யாழ் ஆகிய பொருள்களிலிருந்து தோன்றும் இசையைக் குறிப்பது. அவ்வாறே குழந்தைக்கு ஊட்டப்படும் தாயின் முலைப்பாலும் அம்மம் எனப்படும்.

இப்போது எண்ணிப் பாருங்கள், அம்மம் என்ற சொல்லுக்கும் அம்மா என்ற சொல்லுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெற்றென விளங்கும். அம்மம் என்ற சொல் அம்மாவோடு தொடர்புடைய பொருளைத்தர வல்லது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் சொற்பொருள் அறிவதற்கான அடிப்படை.

ஒரு சொல்லின் ஏதேனும் ஒரு முன்னசையோ பின்னசையோ பகுதியோ விகுதியோ அந்தச் சொல்லுக்குரிய பொருளைப் பற்றிய குறிப்பைத் தரும். அதன்வழியே சென்று அப்பொருளை அடையலாம். ஞாலத்தின் எல்லா மொழிகளிலுமே சொற்களின் கட்டுமானங்கள் பெரும்பாலும் இவ்வகையில்தான் இருக்கும்.

 

 


அம்மான் என்பது தாயுடன் பிறந்தவர்களைக் குறிக்கும் ஆண்பால் சொல். தாய்மாமனைக் குறிப்பது. அம்மன் என்பது தாய் நிலையில் நின்று ஊர்காக்கும் பெண்கடவுளைக் குறிப்பது. அம்மணி என்பது தாய்க்குலத்திற்கான உயர்வுச் சிறப்பினை நல்கும் சொல். மேடம் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அம்மணி என்ற சொல்லைப் பரிந்துரைப்பேன். அம்மையார் என்பது மூத்த பெண்களைக் குறிக்கும் மரியாதையான சொல்தான். அம்மையப்பன் என்றால் தாயும் தந்தையும் சேர்ந்த வடிவத்தினன்.

ஒரேயொரு சொல் நமக்குத் தெரிந்ததாக இருந்தால் அது தொடர்புடைய பத்து இருபது சொற்களுக்கும் நமக்குப் பொருள் கிடைத்துவிடுகிறது. வேர்த்தன்மையுடைய ஒரு சொல்லை அறிந்திருந்தால் போதும். அதன் வழியொற்றித் தோன்றும் பற்பல சொற்களுக்குப் பொருள் கண்டுவிடலாம். அத்தகைய சொற்களை அறிந்துவிடலாம். அவற்றில் பெரும்பான்மையான சொற்கள் நமக்குத் தெரிந்தவையாகவே இருக்கும். சொல்லறிவைப் பெறுவதில் எவ்வகையான இடர்ப்பாடும் இராது. இதுதான் எளிய வழி.

இவ்வழியே சென்று நூற்றுக்கணக்கான சொற்களை அறியும் நுட்பத்தை நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

 

தொடரின் அடுத்த பகுதி :

ஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா?  கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #4 


தொடரின் முந்தைய பகுதி:​​​​​​​

தமிழ் மொழியைக் காப்பாற்றுவது என்பது என்ன தெரியுமா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #2​​​​​​​





 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

‘தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணிகளும்; அதன் வகைமைகளும்’ - முனைவர் சு. தாமரைப்பாண்டியன் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

தமிழர்கள் தங்களின் தொன்மையான அறிவு மரபுகளைப் பல்வேறு எழுதப்படு பொருள்களில் எழுதி வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் தங்கள் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதில் ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. ஓலையில் எழுத எழுதுபொருளாக எழுத்தாணியை தமிழர்கள் மிக நீண்ட காலம் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆன எழுத்தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். 

 

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முதன்மையான ஓலைச்சுவடி அறிஞராகத் திகழ்ந்து வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது சில அரிய எழுத்தாணிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அது குறித்து அவர் கூறியதாவது: தமிழர்களின் அறிவுசார் கண்டடைவுகள் பெரும்பாலும் ஓலையிலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. தூது சென்ற பார்ப்பான் ஒருவன் கையில் எழுதுவதற்கு பயன்படுத்தும் வெள்ளோலையினை வைத்திருந்ததாக அகநானூறு (பா. 337:7 - 8 ) குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஓலை மிக நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்படு பொருளாக இருந்து வந்துள்ளது புலனாகிறது.

 

மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, தமிழ் விடு தூது முதலிய பல நூல்களில் ஓலையில் தமிழர்கள் எழுதி வந்தது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ஓலைச்சுவடி என்று அழைக்கப்பட்டது. ஓலைகள் அதன் எழுதப்படு பொருண்மை அடிப்படையிலும், எழுதப்படு பொருள் அடிப்படையிலும் மந்திர ஓலை, சபையோலை, அறையோலை, இறையோலை, தூது ஓலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன்னோலை, படியோலை என்று பலவாறு அழைக்கப்பட்டன. ஓலைகள் பாதுகாக்கும் இடம் ஆவணக் களரி என்று அழைக்கப்பட்டன.

 

தமிழர்கள் தங்கள் அறிவு மரபுகளை ஓலையில் எழுத எழுத்தாணிகளைப் பயன்படுத்தினர். எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதுதல் என்பது சிரமமான காரியம் ஆகும். இதனை, ‘ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் பாடல் வரிகள் தெளிவாகச் சுட்டுகின்றன.

 

எழுத்தாணி மிக நீண்ட காலமாக தமிழர்களிடம் வழக்கில் இருந்து வந்துள்ளது. பொன்னால் செய்த எழுத்தாணி இருந்தமையினை சீவக சிந்தாமணி நூல் வழி அறிய முடிகிறது. எழுத்தாணிகளை தமிழறிஞர்கள் தேடி அலைந்தமையினை ‘ஓலை தேடி எழுத்தாணி தேடி’ என்ற தனிப்பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எழுத்தாணியானது அதன் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வித அமைப்பாக  உள்ளமையினை அறிய முடிகின்றது.

 

குண்டெழுத்தாணி


 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அதிக நீளம் இல்லாமல் எழுத்தாணியின் கொண்டைப் பகுதி கனமாகவும் குண்டாகவும் அமைந்து காணப்படும் எழுத்தாணி குண்டெழுத்தாணி எனப்படும். குண்டெழுத்தாணியின் முனைப் பகுதியின் கூர்மை குறைவாகக் காணப்படும். குழந்தைகள் எண்ணும் எழுத்தும் எழுதிப் பழக குண்டெழுத்தாணியைப் பயன்படுத்துவார்கள். எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

 

கூரெழுத்தாணி


எழுத்தாணியின் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். இவ்வெழுத்தாணியினை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதுவதற்குரியதாக அமைந்திருக்கும்.

 

வாரெழுத்தாணி

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

இவ்வெழுத்தாணி சற்று நீளமாக இருக்கும். எழுத்தாணியின் மேற்பகுதியியில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். கீழ்ப் பகுதியில் கூர்மையானதாக எழுதும் பகுதி அமைந்து காணப்படும். எழுத்தாணியின் ஒரு பகுதியில் உள்ள கத்தி ஓலையை வாருவதற்குப் பயன்படும். அதனால் இவ்வெழுத்தாணி வாரெழுத்தாணி என்று அழைப்படுகிறது.

 

மடக்கெழுத்தாணி


ஒரு முனையில் கத்தியும் மறுமுனையில் எழுதவும் பயன்படும் வாரெழுத்தாணியின் இரு முனைகளையும் மடக்கி ஒரு மரத்தாலான கைப்பிடிக்குள் அடக்கி வைத்துக் கொள்ளும் தன்மையிலான எழுத்தாணி மடக்கெழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணி மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் கூர்மையான பகுதி மற்றும் கத்தியினால் ஏற்படும் எதிர்பாராத இன்னலைத் தடுக்க உதவுகிறது.

 

தமிழர்கள் வெட்டெழுத்தாணிகளையே அதிகம் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. தமிழர்களின் இத்தகைய அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நெல்லை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்தபொழுது இராமலிங்கம், கணேசன் ஆகியோரிடம் இருந்த பழமையான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டவை ஆகும் என்றார்.