Skip to main content

'கரோனா விடுமுறை அல்ல... காலம் சொல்லும் பாடம்' - கவிப்பேரரசு வைரமுத்து கவிதை!

Published on 03/04/2020 | Edited on 03/04/2020

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 53,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கரோனா தொடர்பாக கொரோனாவும் கொரில்லாவும் என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதை வருமாறு,


கொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல; கிருமி ஞானம்.

கன்னத்திலறைந்து காலம் சொல்லும் பாடம்!

ஊற்றிவைத்த கலத்தில் உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் அடங்கிக் கிடப்போம் அரசாங்க கர்ப்பத்தில் இது கட்டாய சுகம் மற்றும் விடுதலைச் சிறை

மரணம் வாசலுக்கு வந்து அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும்

ஓசைகளின் நுண்மம் புரிவதே இந்த ஊரடங்கில்தான்

இந்தியப் பறவைகள் தத்தம் தாய்மொழியில் பேசுவது எத்துணை அழகு!

நீர்க்குழாயின் வடிசொட்டோசை நிசப்தத்தில் கல்லெறிவது என்னவொரு சங்கீதம்!

தரையில் விழுந்துடையும் குழந்தையின் சிரிப்பொலிதானேமாயமாளவ கெளளையின் மாதா பிதா!

மழையிற் சிறந்த மழை குளித்துவந்த மனைவின் கூந்தற் சாரல்!

இன்றுதான் நம்வீட்டில் ஒலியும் ஒலிசார் உடலும் ஒரே இடத்தில்

வாங்குவாரற்று நமக்கே சொந்தமாகிப் போயின விற்பனைக்குத் தயாரிக்கப்படும் அதிகாலைகள்

இதுவரை உறவுகளைத்தானே... இப்போதுதான் கைகளை மட்டுமே கழுவுகிறோம்

பாம்பு கடித்துச் செத்தவனைவிட செருப்புக் கடித்துச் செத்தவன் அதிகம் புலியடித்து இறந்தவனைவிட கிலியடித்து இறந்தவனதிகம்

அச்சத்திலிருந்து அறிவு தயாரிப்போம் குப்பையிலிருந்து மின்சாரம்போல்.

கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா நாமும் சற்றே மறைந்து சமர்செய்வோம்

மரண பயத்திலிருந்து மருந்து தயாரிப்போம்

உலகப் போரின் உயிர்களை விடவும் உழவர்குடியின் தற்கொலை விடவும் காதல் தோல்வியின் சாவினை விடவும் கொரோனா சாவு குறைவுதான்

நம்புங்கள்! விஞ்ஞானத்தின் சுட்டுவிரலுக்கும் கட்டை விரலுக்கும் மத்தியில் இந்த நச்சுயிரியும் நசுக்கப்படும்

பூமியின் உயரங்களில் ஏறிநின்று கூவுவோம்

சூரியனில் இரையுண்டு பூமிவந்து முட்டையிடும் புதுயுகப் பறவைகள் நாமென்று

எரிமலையில் உலைகூட்டி நட்சத்திரங்கள் பொங்கி உண்ணும் பூதங்கள் நாமென்று

ஊழி முடிவிலும் காற்று உறைந்துறு காலத்திலும் சுவாசிக்க மிச்சமிருக்கப் போவது கரப்பான் பூச்சியும் மனிதப் பூச்சியுமென்று.

மனிதர் மரிக்கலாம் மனிதகுலம் மரிக்காது

பாதிக்கப்பட்டோர் யாரும் பாவிகள் அல்லர் எல்லா நோய்க்கும் முதல் மருந்து பாசாங்கில்லாத பாசம்தான்.

மாண்டவரை விடுங்கள் பசித்தோர் முகம் பாருங்கள்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் வாழும் மனிதருக்கெல்லாம்

பசித்த செவிகளுக்கு - சொற்கள் புரியாது சோறு புரியும்

 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.