Skip to main content

எரியட்டும் கொடுஞ்சட்டம்...!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019
ச்

 

  -ஆரூர் புதியவன்

ர் பற்றி எரிகிறது,  ஃபிடிலை நன்றாய்
    ஊதிக் கொண்டிருக்கிறான் நவீன நீரோ...!
யார் பற்றி அவனுக்குக் கவலை, ரத்த 
    யாத்திரையை உலகெங்கும் விரிவு செய்தான்...
வேர் பற்றி நிலைத்திருந்த விழுமியங்கள்...
   வீழ்ந்தழியக் கொடுங்கோலை அவன் எடுத்தான்..
பேர்பெற்ற இந்நாட்டின் மக்கள் நெஞ்சில்
    பிரளயத்தை வரச்செய்தான் கொடுஞ்சட்டத்தால்...!

 

குடியுரிமை திருத்தச் சட்டம் என் கின்ற
    குடிகெடுக்கும் சட்டத்தைக் கொண்டுவந்து
இடி வீழச் செய்தான் நம் இதயம் மீது..
     ஈழத்தின் உறவுகளை புறக்கணித்து....!
படுபாவி, ’முஸ்லிமல்லா தோருக்கே 
     பாரதத்தில் குடியுரிமை’ என்றான், அந்தக்
கொடுங்கோன்மை பேயரசை அடித்து ஓட்ட         
     குடிமக்கள் போர்க்கோலம் பூண்டு விட்டார்..!

சாவர்க்கர் கோல்வால்கர் கனவுகண்ட
    சங்கிகளின் ’ராஷ்ட்ராவை’(?) அமைப்ப தற்கு
நாவடக்கம் இல்லாத நவீன நீரோ 
    நயவஞ்சகத்தைத் தான் சட்ட மென்றான்..?
யாவருக்கும் உரிமை எனும் காந்தி தேசம் 
    யாருமிங்கு அடிமை இல்லை என முழங்கும்...
ஈவிரக்கம் இல்லாதக் கொடியோன்,  மக்கள் 
   எதிர்கருத்துச் சொன்னாலே கொலைசெய் கின்றான்....!

 

’இரு தாடி கொடுங்கோலர்’ இணைந்து நாட்டில்       
        இருக்கின்ற தாடி தொப்பி அங்கி என்ற 
சிறுபான்மை அடையாளம் உடையோர் எல்லாம் 
       செத்தொழிய வேண்டுமெனக் கனவு கண்டார்..
பெரும்பான்மை வாதத்தால், நமது நாட்டின்
      பெருமைமிகு ஜனநாய கத்தை வீழ்த்த
இரும்பான இதயத்தால் சட்டம் செய்தார்,
      எழுந்ததுகாண் அறத்தாலே காந்தி தேசம்...!

 

மடமைகளின் மகராசன் குளவி கூட்டில் 
     மமதையுடன் கை வைத்தால் என்ன ஆகும்...?
விடுதலைப் போர் தொடங்கியது மீண்டும், தேச     
       வீதியெல்லாம் எரிகிறது மூடனாலே...!
‘கொடு தலையை என்றாலும் கொடுப்போம் வெட்டிக்      
        கொண்டுவா என்றாலும் செய்வோம்’ என்று 
விடுபட்ட அம்புகள்போல் வீரர் கூட்டம் 
        வேட்கையுடன் புறப்பட்டார் தீமை வீழ்த்த.....

தேசத்தை காப்பதற்கு இந்தக் கூட்டம் 
    தீக்கனலைத் திருமுகத்தில் காட்டும், அந்த 
பாசிசத்தின் வெறியாட்டம் அடக்கு தற்குப்
      பார்முழுதும் ஊர்வலமாய் பயணம் செய்யும்.... 
தாசி மக்கள் நாமென்ற தத்து வத்தைத்
     தந்தை பெரியார் அடித்து தகர்த்ததைப் போல்
நீசமிகு குடியுரிமை திருத்தச் சட்டம் 
   நெடுங்கனலில் எரியட்டும்...!  அணிவகுப்போம்..!