Skip to main content

சைதை காந்தி!!! -இவரைப் போன்றவர்களால்தான் மழை பொழிகிறது...

Published on 11/02/2018 | Edited on 11/02/2018
saidhai gandhi 1


"சைதை காந்தி" சைதைக்கும் காந்திக்கும் என்ன  சம்மந்தம் எனும் கேள்வி உங்களுக்கு வரலாம் எனக்கும் முதலில் வந்தது. எங்கு வந்தது என்றால் ஒரு மாலைவேளையில் நான் அவசரமாக ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. நான் அந்த விழா மேடையை கடந்து செல்லும் போது தான் "சைதை காந்தி " திரு.கு. மகாலிங்கம் என்று  ஒருவரின் பெயர் பேனர்ல பார்த்தேன்.  அந்த அவசர நிலையிலும் அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. அங்கு  உள்ளவர்களிடம் விசாரித்தேன். அப்போது தான் அங்கு உள்ள ஒருவரை காட்டி, "இவர்  பெயர் மகாலிங்கம், இவரு இந்த காந்தி நூலகத்த அறுவத்தஞ்சு வருசமா நடத்திட்டு வராரு' என்று சொன்னார். அப்பொழுதுதான்  தான் எனக்கு புரிந்தது,  இவரை ஏன்  "சைதை காந்தி" என அழைக்கிறார்கள் என்று. எனக்கு அப்பொழுதே  இவரை சந்திக்க வேண்டும் எனும் எண்ணம். மறுநாளே அவரின் நூலகத்திற்கு சென்று கேட்டவுடன் மகாலிங்கம் ஐயா, 'சரி' என்றார் ஒரு உற்சாகத்தோடு . மறுநாள் சில கேள்விகளோடு அங்கு சென்றேன். கேட்கும் முன்பே என் கேள்விகளுக்கான பதிலை அவரே தந்தார். 

"என் பெயர் கு.மகாலிங்கம். எனக்கு மூணு பசங்க, என் துணைவியார் இறந்துட்டாங்க. எனக்கு இப்ப எம்பத்தேழு  வயசாச்சு. அறுபத்தஞ்சு வருஷமா இந்த  காந்தி நூலகத்த நடத்திட்டுவரேன். ஆனா நான் அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் தான் படிச்சிருக்கேன்.  இந்த மாந்தோப்பு ஸ்கூல்ல  தான் படிச்சேன். அப்புறம்   தி .நகர்  வெங்கட்ராமன் ரோட்ல இருக்குற தக்கர் பாபாக்கு  மகாத்மா காந்தி வந்தாங்க. நானும் ஒரு பத்து பசங்களும் போனோம். ஒரு ஆறு நாள் பஜன நடந்துச்சு. நாங்க கலந்துக்கிட்டோம். அப்ப தான் எல்லாரும் யோசன பண்ணி கொஞ்சம் கொஞ்சமா புத்தகம் சேகரிச்சோம். ஒரு அம்பது, அறுபது புத்தகமா இருந்தது. இப்ப இருபதாயிரம் புத்தகமா இருக்கு. நூலகம்  2.11.1952ல அப்போதைய  எம்.எல்.ஏ  ராஜம் ராமஸ்வாமி  தலைமையில பாரதியோட தம்பினு சொல்லப்பட்ட பரலி சு.நெல்லையப்பரால  ஞான விநாயகர் ஆலயத்துல திறந்து வைக்கப்பட்டுச்சு.
 

saidhai gandhi 3

 

எனக்கு உறுதுணையா இருந்தது சக்தி. டி .கே. கிருஷ்ணசாமிதான். இனொருத்தரு இந்த நூலகத்துக்கு இடம் கொடுத்த ராஜரத்தினம். சக்தி. டி .கே. கிருஷ்ணசாமி சொன்னாரு, 'மகாலிங்கம் நீ காமராஜரோட தொண்டனென்று  சொல்றாங்க.  நான் உனக்கு  உதவி பண்றேன்'னு சொன்னாரு. அதே போல வருஷா வருஷம் ஒரு சினிமா படம் வந்தா ஒரு ஷோ வாங்கிக்கொடுத்துவிடுவார்.  அதுல வரும்  காச வச்சு புத்தகம் வாங்குவேன். அதுமட்டுமில்லாம நூலகத்தோட ஆண்டு விழா நடக்கும். அதுக்கு நடிகர்கள கூப்பிட்டு வருவாரு. நாகேஷ் ,சிவாஜி ,கே.ஆர்.விஜயா எல்லாம் வந்திருக்காங்க . கிருஷ்ணசாமி  இறந்த பிற்பாடு நடிகர்களையெல்லாம்  கூப்பிடல . எழுத்தாளர்களை  கூப்பிட்டு ஆண்டு விழாவில் 'சக்தி.டி.கே.கிருஷ்ணசாமி விருது'னு கொடுத்து வருகிறேன். இதுவரைக்கும் ஐநூறு பேருக்கு கொடுத்திருக்கேன். அவர் பெயரில்  கொடுப்பதால்  அவர்களின்  குடும்பத்தாரும் வருவாங்க.

இந்த நூலகத்தை பொறுத்தவரை ஆண்களை  விட பெண் உறுப்பினர்கள்  தான் அதிகம்.  இந்த நூலகத்தில் உள்ள புத்தகம் எல்லாம் ஒவ்வொருத்தரா வாங்கித்தந்தது. அதனால புத்தகத்துல அவுங்க பெயர் எழுதி வைப்பேன். இங்கு பல எழுத்தாளர்கள் வந்திருக்காங்க. அவுங்க புத்தகங்கள் எல்லாம் இருக்கு. இங்க  நூறு ஆண்டு பழமையான புத்தகமெல்லாம்  இருக்கு. இங்கு இருக்குற காந்தி சிலைய காமராஜர் தான் திறந்து வச்சாரு" என்று தான் செய்யும் பெரிய  சமூக பணியை சாதாரணமாக சொன்னார். 

saidhai gandhi 2


"எனக்குக்  கூட  விருதெல்லாம் கொடுத்திருக்காங்க"னு சொல்லி சுற்றி இருந்த புகைப்படத்தையெல்லாம் சிறு புன்னகையுடன் காண்பித்தார். நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே  மீண்டும் பேசத்  தொடங்கினார் . "வருஷா வருஷம், படிக்குற பசங்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்போம். அதுவும் இங்க உள்ளவுங்கள்ட்டதான் வாங்கிக் கொடுப்பேன்.  ஸ்கூல் பசங்களுக்கு ஆயிரம் ரூபாய், காலேஜ் பசங்களுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் கொடுப்போம். இந்த வருஷம் கூட ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கொடுத்தோம் . நான்  நெசவு  செய்ற குடும்பத்தில பொறந்தவன். அவுங்கள ஆதரிக்கிறதுக்காகவும் காந்திக்காகவும் நான் எப்பவுமே கதர் துணி தான் போடுவேன். அதுமாதிரி  செருப்பும் போடமாட்டேன்.  முடிஞ்ச வரைக்கும்  எங்க போனாலும்  நடந்தே போவேன்" என்றவர், சந்திப்பு முடியும் தருணம், என்னுடன் சிறிது தூரம் நடந்து வந்தபோது  சொன்னார், "நாம் இருக்குற வரைக்கும் எல்லாரிடமும் மனிதாபிமானத்துடனும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்". 

அறுபத்தைந்து ஆண்டுகளாக அந்த நூலகத்தை நடத்திவரும்  மகாலிங்கம் ஐயா அவர்களை " சைதை காந்தி" என்று அழைக்கிறார்கள்.  நான் எந்த ஒரு கேள்வியையும் கேட்காமலேயே, என் மனதிலிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தார் அந்த எம்பத்தி ஏழு வயது இளைஞர்.  இத்தனை வருடங்களாக நேர்காணல்கள் பழகிவிட்டன போல. வந்து சென்றவர்கள் யாரும் அவரைப் போல நூலகம் அமைத்தார்களா தெரியவில்லை, நூல்கள் அளித்தார்களா தெரியவில்லை. "மழை நல்லவர்களால் தான் பொழிகிறது" என்று யார் (வள்ளுவரும் தான்)  சொன்னாலும் சிரிப்பவன் நான். ஆனால், அப்பொழுது நம்பினேன், மழை இவரைப் போன்றவர்களால் தான் பொழிகிறது.
 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.