Skip to main content

மாட்டேனும், மாண்டேனும் ஒன்றா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #14

Published on 28/07/2018 | Edited on 16/08/2018
soller ulavu



 


பேச்சுத் தமிழில் நிறையவே சொற்கள் இருக்கின்றன. அவை அகராதிகளின் படியேறாமல் தேங்கிக் கிடக்கின்றன. பொதுமக்களின் பேச்சு மட்டத்தில் அவை நற்பொருள் தருகின்றவையாகவும் பேசத் தகுந்தவையாகவும் இருக்கையில் எப்படி அகராதிகள் அவற்றைப் புறக்கணித்தன ? வேண்டுமென்றே அவை புறக்கணிப்பட்டன என்று கூற இயலாதுதான். ஆனால், மக்கள் வாய்மொழியைக் கருத்தில் கொள்ளாமல் விட்டனர் என்று உறுதியாகக் கூற முடியும்.

 

கோவைப் பகுதிகளில் ‘மாட்டேன்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘மாண்டேன்’ என்று சொல்வார்கள்.

 

 

 

“நீ கேட்டதுக்கு நான் மாண்டேன்னா சொன்னேன் ?” என்பார்கள். “அவன் வரமாண்டேங்கிறான்…” என்பார்கள். “எடத்தைக் கொடுக்கச் சொல்லி எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்… எல்லாரும் மாண்டேன்னுட்டே இருக்கறாங்கொ…” என்று கூறுவார்கள்.

 

இந்த “மாண்டேன்” என்ற சொல் ஆராய்ச்சிக்குரியது. மாட்டேன் என்பதன் பேச்சு வழக்காக மாண்டேன் என்ற சொல் பயில்வதாகத் தோன்றும்.

 

இலக்கணத்தில் மெலித்தல் விகாரம் என்று ஒன்று இருக்கிறது. வல்லின மெய் தோன்றவேண்டிய இடங்களில் மெல்லின மெய் தோன்றி வன்மை ஒலிப்பை மென்மையாக்குவது. இத்தகைய விகாரங்கள் செய்யுள்களில்தாம் தோன்றும் என்று இலக்கணத்தை அடியொற்றியே நிற்க வேண்டுவதில்லை. பேச்சுப் பயன்பாடு வரைக்கும் இறங்கி வராத இலக்கணக் கூறுகளே இல்லை.

 

மெலித்தல் விகாரத்தில் தட்டை என்பது தண்டை என்றாகிவிடும். தொப்பி என்பது தொம்பி என்றாகும். புத்தி புந்தியாகும். கலப்பு அகம் என்ற இரு சொற்சேர்க்கையே கலப்பகமாகி மெலித்தல் விகாரமடைந்து கலம்பகம் ஆயிற்று. ஆக, கலம்பகம் என்று தனிச்சொல் பயிலும்போதும்கூட மெலிந்து விகாரமடையும் என்பதை ஏற்பர். சொற்களில் தோன்றிய வல்லின மெய் மெல்லின மெய்யாகி அச்சொல்லின் வன்மையை நீக்கி மென்மையாக்கித் தருவது மெலித்தல் விகாரத்தின் பணி. அதன்படி மாட்டேன் என்பது மாண்டேன் ஆகிற்றா என்று ஆராய்வது ஒரு பார்வை.

 

அடுத்து தன்வினை, பிறவினை என்று இருகூறுகள் இருக்கின்றன. மாண்டேன் என்ற சொற்பயன்பாட்டை மாட்டேன் என்பதோடு தொடர்புபடுத்தி நோக்கினால் தன்வினை, பிறவினைப் பொருட்பாட்டுக்கு வாய்ப்பிருக்கிறது.

 

மீண்டான், மீட்டான் என்கிறோம். தானே மீள்வது மீண்டான் என்னும் தன்வினை. தான் பிறிதொன்றை மீளூம்படி செய்வித்தால் மீட்டான் என்று பிறவினை ஆகும்.

 

வெள்ளத்திலிருந்து எப்படியோ நீந்தி மீண்டான். வெள்ளத்தில் விழுந்தவர்களைத் துணிந்து நீரில் இறங்கி மீட்டான். இரண்டு ஒரே செயல்தான். தனக்குச் செய்துகொண்டது, பிறர்க்குச் செய்வித்தது என்னும் இருவகையால் வேறுபடுகிறது. அதுதான் தன்வினை, பிறவினை எனப் பயிலும் வினைச்சொற்களின் பொருள் வேறுபாடு.

 

 

 

தன்வினை பிறவினை வேறுபாடுகளோடு பயிலும் எண்ணற்ற சொற்கள் கொங்குத் தமிழில் கலந்திருக்கின்றன. நான் முன்பே சொன்னதுதான், தாட்டி விடுவது என்ற சொல்லை இங்கே பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்.

 

“பையனை வீடு வரைக்கும் அனுப்பி விடுங்க.. வேலை முடிஞ்சதும் உடனே தாட்டி விட்டுர்ரேன்..”  

 

“பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ள அமைஞ்சதும் காலா காலத்துல தாட்டி விட்டுர்ர வேண்டியதுதான்…”

 

 “கிணத்துல தண்ணி கம்மியாத்தான் இருக்குது… இன்னும் இரண்டு பாத்திக்குத் தாட்டுமான்னு தெரியில…”

 

இவை தாட்டுதல் என்ற வினைச்சொற்பயன்பாட்டில் அமைந்த பேச்சு வழக்குகள். தாண்டு என்னும் தன்வினைக்குரிய பிறவினைச்சொல் தாட்டு என்பதாகும்.

 

பையனின் வேலை முடிந்ததும் இருக்குமிடத்திலிருந்து தாண்டிச் செல்ல வைப்பது. பெண்ணுக்கு மாப்பிள்ளை அமைந்ததும் பிறந்த வீட்டிலிருந்து தாண்டிச் செல்ல வைப்பது. இரண்டாம் பாத்தி வரைக்கும் தண்ணீரைத் தாண்டச் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.

 

மாளுதல் அல்லது மாண்டுதல், தாட்டுதல் ஆகிய சொற்கள் அகராதிகளில் இல்லை. மாளுதல் என்ற சொல் இருப்பினும் மக்கள் வழங்கும் நுண்ணிய பொருளில் காணப்படவில்லை. சங்கச் சொல்லடைவு அகராதியில் மட்டும்  சாதல், அழிதல், கழிதல், இயலுதல் ஆகிய நான்கு பொருள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

 

 

 

அச்சொற்கள் யாவும் சொற்கள் இல்லையா ? பேச்சுத் தமிழின் வினைச்சொல் வளம் அகராதிப் பெருமக்களின் பார்வையில் படாதது ஏன் ? அச்சொற்கள் தாமாகவே இலக்கணத் தன்மைகளோடு வெளிப்பட்டுத் துல்லியமாகப் பொருளுணர்த்திப் பயன்பட்டு வருவதை யாரேனும் கண்டுணர்த்தினார்களா ? ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. விடையில்லை.


முந்தைய பகுதி:

 

பெயர் பெரிதா? வினை பெரிதா? தமிழ் கூறுவது என்ன... கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #13
 

அடுத்த பகுதி:


"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்" கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #15
 

 

 

 

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார். 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.