BCCI offers huge prize money Women's cricket team in icc women world cup
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 இந்தியாவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இத்தொடர், அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 8 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
அதன்படி, நவி மும்பையில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நாளை (02-11-25) தென்னாப்பிரிக்கா அணியை எதிர்க்கொள்ளவுள்ளது. இந்த நிலையில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பதக்கத்தை வென்றால், அவர்களுக்கு ரூ.125 கோடி தொகையை பரிசாக வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிசிசிஐ செயலாளரும் தற்போதைய ஐசிசி தலைவருமான ஜெய் ஷா பரிந்துரைந்த சம ஊதியம் கொள்கையைப் பின்பற்றி, கடந்தாண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் ஷர்மா தலைமையிலான அணிக்கு வழங்கப்பட்ட அதே தொகையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெகுமதியாக வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து கோப்பையை வென்ற ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அதன்படி, கோப்பையை வென்றால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதே தொகையை வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us