Skip to main content

சரித்திரப் புகழ் பெற்ற சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசுக் காட்சி..! 

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Worship took place without devotees. Historically famous Sankara Narayana Swamy temple adicapasuk scene ..!


பண்டைய காலங்களில் சைவம் பெரிதா? வைணவம் பெரிதா? என இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட ஈகோ மோதல் காரணமாக பலர் மோதிக் கொண்டனர். வெட்டியும் குத்தியும் உயிர்கள் பலியாயின. இதைக் கண்டு பதறிய தேவாதி தேவர்கள் ஈசனிடம் சென்று மோதலைத் தவிர்த்துப் பக்தர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று முறையிட்டார்கள். அதனை ஏற்ற ஈசனும் பக்தர்களைச் சமாதானம் செய்யும் பொருட்டு தன் உடலின் ஒரு பகுதியை அரியாகவும் மற்றொரு பகுதியை சிவனாகவும் ஒரு சேர உருவெடுத்த சர்வேஸ்வரன் பூலோகம் வந்தார். சைவமும் வைணவமும் வெவ்வேறு அல்ல. அனைத்தும் ஒன்று. என்று அவர்களைச் சமாதானப் படுத்தினார். அரியும் சிவனுமாக காட்சிக்கொடுத்த சர்வேஸ்வரனின் அரிய காட்சியினை பக்தர்கள் தரிசித்தனர். அன்றிலிருந்து இரண்டு தரப்பினரும் சமாதானமடைந்து அவர்களுக்குள் அமைதி நிலவியது. ஈசன் திருக்காட்சியளித்த இந்த வைபவம் புராணமானது.

 

Worship took place without devotees. Historically famous Sankara Narayana Swamy temple adicapasuk scene ..!

 

பக்தர்களுக்கு காட்சியளித்த சிவபெருமானின் இந்த அரிய காட்சியினைத் தானும் தரிசனம் செய்கிற பாக்யம் வேண்டுமென்று ஈசனிடம் பார்வதி தேவியார் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த அரிய காட்சியை காணவேண்டுமாயின் பூலோகத்தில் உள்ள பொதிகை அடியில் எம்மை நினைத்து தவம் செய்தால், தாம் அவ்வாறே காட்சி அளிப்பதாக ஈசன் தெரிவிக்க அவரின் ஆக்ஞைபடி பார்வதி தேவியாரும் பொதிகையடியில் சர்வேஸ்வரனை நினைத்துக் கடும் தவம் புரிந்தார். அம்மையின் தவத்தை மெச்சிய சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தது போன்று, ஈசனும் திருமாலும் சேர்ந்த கோலத்தில் சங்கர நாராயணராக உருவெடுத்து அம்மைக்குக் காட்சியளித்தார். இந்த அரிய காட்சி ஆடிமாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நடந்தேறியது. பார்வதி தேவியார் ஈசனின் அரிய அவதாரத்தை தரிசித்த பொதிகை அடி தான் சங்கர நாராயணர் கோவில் என்ற தலமானது.

 

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த உக்கிரபாண்டிய மன்னர், சிறந்த சிவ பக்தர். தன் கனவில் ஈசன் தோன்றியதன் காரணமாக அவர் சங்கரநாராயண ஆலயம் என்றும் திருக்கோவிலைக் கட்டினார். அது தான் தற்போது தென்காசி மாவட்டத்தின் கோவில் நகரமான சங்கரன்கோவில் ஆனது. சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் இத்தலத்தில் ஈசனும் திருமாலும் சேர்ந்த கோலத்தில் சங்கர நாராயணராக அருட்கோலம் காட்டிய அரிய தலமானது. ஈசனைக் காண தவக்கோலத்தோடு தேவி புறப்பட்டு வரும் வைபவத்தையே ஆடித்தபசு என்று வழி வழியாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். இத்திருக்காட்சியைத் தரிசிக்க அன்றைய தினம், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவது வழக்கம். பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு மண்டகப்படிதாரரும் கோமதி அம்பாளின் தவக்கோலத்தை சிறப்பு அலங்காரத்தில் வைத்து வீதி உலா வந்து கொண்டாடுவது நடைமுறை. 

 

Worship took place without devotees. Historically famous Sankara Narayana Swamy temple adicapasuk scene ..!

 

தற்போது கரோனா காரணமாக ஊரடங்கு என்பதால் கடந்த வருடமும் இந்த வருடமும் ஆடித்தபசுக் காட்சி ரத வீதிகளில் நடத்தப்படாமல் பக்தர்களின்றி ஆலயத்தின் உள்ளேயே நடத்தப்பட்டது. அதே போன்று இந்த வருடமும் நேற்றைய தினம் பக்தர்களின்றி அனைத்து மண்டகப்படிதாரர்களின் குறிப்பிட்ட அங்கத்தினர் மட்டுமே பங்கேற்கும் வகையில் அனுமதிக்கப்பட்டு நடந்தது. மாலை 6 மணியளவில் தவக்கோலத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு ஈசன் சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அது சமயம் குறிப்பிட்டவர்களே பங்கேற்கும்படி அனுமதிக்கப்பட்டனர். அதே போன்று இரவு சங்கர லிங்கமாக அம்பாளுக்கு ஈசன் காட்சி கொடுக்கும் வைபவமும் நடந்தேறியது. புகழ் பெற்ற லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்கிற சங்கரன் கோவிலின் ஆடித்தபசுக் காட்சி கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றியே நடந்தேறியிருக்கிறது.

 

ஆலயத்தினுள்ளேயே நடந்த இந்த ஆடித்தபசு காட்சியின் பாதுகாப்பு பணியில் தென்மண்டல ஐ.ஜி.யான அன்பு தலைமையிலான, தென்காசி எஸ்.பி. கிருஷ்ண ராஜ் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.

 

 

Next Story

திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்!

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

DMK women panchayat leader threatened

 

முன்னாள் காவல்துறை அதிகாரியும் அவரது மனைவியும் சேர்ந்துகொண்டு திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி. இவர் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராகவும், திமுகவில் மாவட்ட மகளிரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். சிவசங்கரி தன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யக்கூடியவர் என்றும், எப்போதும் பொதுமக்களை அணுகி தங்களுடைய குறைகளை கேட்டறிந்து சரி செய்யக்கூடியவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

இந்நிலையில், பஞ்சாயத்து துணைத்தலைவராக இருப்பவர் மரகதம். அவரது கணவரான முருகன் என்பவர் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர். இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் சில அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தன் கணவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால் அவரோடு சேர்ந்து அதிகாரிகளை மிரட்டி வரும் மரகதம் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள கோப்புகளை சரிபார்த்து வந்துள்ளனர்.

 

அதுமட்டுமின்றி, அங்குள்ள சில முக்கியமான கோப்புகளையும் எடுத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், பஞ்சாயத்து தலைவரான சிவசங்கரி துணைத்தலைவர் மரகதம் மற்றும் அவரது கணவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அதற்கெல்லாம் மசியாத இவர்கள், சிவசங்கரியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மரகதம் - முருகன் தம்பதி மீது சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்ததில் மரகதமும் முருகனும் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த முருகனும் தலைமறைவாகியுள்ளார்.

 

இதையடுத்து, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர். அதே சமயம், திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

மூச்சு முட்டி நின்ற திமுக கவுன்சிலர்களின் திக் திக் நிமிடங்கள்! 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

DMK councilors who were out of breath!

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராட்சியின் 30 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி 12, அ.தி.மு.க. 12 என சமபலத்திருந்தாலும், மன்றத் தலைவர் பதவியைக்குறிவைத்து தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போட்டியிட பரபரப்பான நகராட்சி. கழகங்களுக்கு 4 கவுன்சிலர்கள் தேவைப்பட்டாலும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மீதமுள்ள வார்டுகளைக் கைப்பற்றிய சுயேட்சைகள் 5, எஸ்.டி.பி.ஐ. 1 என 6 பேர்களில் நான்கு உறுப்பினர்களை வளைத்துக் கொண்டு போவதில் தீவிரமாயினர்.

 

எதிரி நான்கு உறுப்பினர்களை வளைப்பதற்குள், முந்திக் கொண்ட தி.மு.க., சுயேட்சைகள், எஸ்.டி.பி.ஐ. என ஒட்டு மொத்த ஆறு பேர்களையும் தேவையான, திருப்தியான டீலிங்க்குகளுடன் தன் வசமாக்கிப் பொத்தி பாதுகாத்துக் கொண்டது. இந்த ஆறு பேர்களுக்கான மொத்த கிப்ட்களின் தொகை ஒரு “சி“யையும் தாண்டிவிடும் ஒரு வழியாக டேர்ம்ஸ் மூலம் அது சரிக்கட்டப்பட்டு, பெறப்பட்ட தொகையினை பிற்பாடு வருகிற நகரின் காண்ட்ராக்ட் வேலைகளின் டீலிங்க்கின் மூலம் அட்ஜஸ்ட் செய்து திரும்ப அடைத்துவிட வேண்டும் என்பதே திட்டமாம்.

 

இந்த வழிகளில்தான் தி.மு.க.விற்கான பலம் 18 என்றானது. அதே சமயம் தி.மு.க. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த உடனேயே 12 கவுன்சிலர்களும் குற்றாலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தலைமையில் நடந்த கூட்டத்தில், சேர்மன் பதவிக்கென்று தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும். மாற்றி வாக்களித்தால் அவர்களுக்கு தேர்தல் செலவாக கட்சி, கொடுத்த தொகையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கறாராகப் பேசப்பட்டதாம். தவிர சேர்மன் பொறுப்பை வசப்படுத்த தேவையான சுயேட்சைகளை நம் பக்கம் கொண்டுவருவதற்கு பெரிய தொகை செலவாகியிருக்கிறது அதனை வரும் காலங்களில் நகராட்சியின் டெண்டர் காண்டிராக்ட்களின் கொசுறு மூலமே சரிக்கட்ட வேண்டிய நிலை என்பதால், கவுன்சிலர்கள் யாரும் ஒருவருடம் காண்ட்ராக்ட், கமிசன்களில் கண்டிப்பாகத் தலையிடக் கூடாது என்று கண்டிப்பான கட்டளையும் விடப்பட்டுள்ளதாம். நிலைமை இப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் சேர்மன் பதவி பொது என்றாகிவிட்டது. அதனால் வைஸ்சேர்மன் பதவியை நகரின் அடுத்த மெஜாரிட்டி எண்ணிக்கையிலிருக்கும் எங்கள் பட்டியலின சமூகத்திற்கு ஒதுக்கவேண்டும் என்று தி.மு.க.வின் பட்டியலின சமூக கவுன்சிலர்கள் கோரிக்கையை வைக்க, இதனையும் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிப்பட்டிருக்கிறது தி.மு.க.


இதற்கிடையே தி.மு.க.வின் மூவ்களை உளவு பார்த்த அ.தி.மு.க. தரப்புகள், தி.மு.க.வின் கூடாரத்திற்குள்ளேயே புகுந்து உள்ளடியாக 3 கவுன்சிலர்களை தங்கள் பக்கம் சைலன்ட்டாகத் திருப்பியிருக்கிறது. மறைமுகத் தேர்தல் நாள் தவிப்பும் பதற்றமுமாக இருந்தது.

 

DMK councilors who were out of breath!
உமா மகேஸ்வரி

 

அன்றைய தினம் தி.மு.க. தரப்பில் 18 கவுன்சிலர்களும், அ.தி.மு.க. தரப்பில் 12 என்ற அளவில் வந்திருக்கிறார்கள். தி.மு.க. தரப்பில் வெற்றி உறுதி என்றிருக்க, கட்சி அறிவித்தபடி தி.மு.க. தரப்பில் உமா மகேஸ்வரியும், அ.தி.மு.க தரப்பில் முத்துலெட்சுமியும் சேர்மன் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ததையடுத்து ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டதில், இரண்டு கட்சிகளுமே 15 என்ற சம அளவில் வாக்குகளைப் பெற தி.மு.க. தரப்பிற்கு ஷாக். சேர்மன் பொறுப்பை உறுதிசெய்ய முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதையடுத்து தேர்தல் அதிகாரியான ஜெயப்பிரியா இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களின் சம்மதத்துடன் திருவுளச்சீட்டுப் போட, திக் திக் நொடியில் திருவுளச் சீட்டில் தி.மு.க.வின் உமா மகேஸ்வரியின் பெயர் வர அவர் நகர்மன்றத் தலைவியான பிறகே தி.மு.க.வினரின் சுவாசம் சீராகியிருக்கிறது. அதே சமயம் தங்களின் 18 கவுன்சிலர்களில் 3 பேர் விலை போய் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தது கண்டு தி.மு.க.விற்கு டன் கணக்கில் அதிர்ச்சி.

 

மாலையில் வைஸ் சேர்மன் தேர்வின்போது தி.மு.க.வின் பட்டியலின சமூகப்பிரிவு கவுன்சிலர்கள் அப்பதவியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பை வலியுறுத்த, அவர்களை தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராஜா சமாதானப்படுத்தியிருக்கிறார். வைஸ் சேர்மன் தேர்வின்போது தி.மு.க. தரப்பில் சரவணக்குமாரை வைஸ் சேர்மன் பொறுப்பிற்கு நிறுத்த அ.தி.மு.க.வின் தரப்பில் வைஸ் சேர்மன் பதவிக்கு கண்ணன் போட்டியிட, இறுதியாக வாக்கெடுப்பில் தி.மு.க. 13 வாக்குகளைப் பெற, அ.தி.மு.க.வோ 16 வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க.வின் கண்ணன் வைஸ் சேர்மனாகிவிட்டார்.

 

tt
கண்ணன்

 

காலையில் நடந்த சேர்மன் தேர்வில் தி.மு.க. 15 கவுன்சிலர்களின் வாக்குகளைப் பெற்ற நிலையில் மாலையில் வைஸ் தேர்வில் தி.மு.க. தரப்பு கவுன்சிலர் ஒருவர் (புனிதா) வராமல் போக, அடுத்து தி.மு.க. தரப்பிலிருந்து ஒருவர் அணிமாறி அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கவே அ.தி.மு.க. 16 வாக்குகளைப் பெற்று வைஸ் பதவியைப் பிடிக்க, தி.மு.க அதனை இழக்க நேரிட்டுள்ளது என்கிறார்கள்.