Skip to main content

யாருடன் கூட்டு சேர்ந்தால் தொழிலில் வெற்றி பெறலாம்?

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

படித்தவர்களோ, படிக்காதவர்களோ- வாழ்க்கையை நடத்த சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. உத்தியோகம் செய்து பிழைப்பவர் பலர் என்றாலும், சிலருக்கு மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதோ, அடுத்தவர் தம்மை அதிகாரம் செய்வதோ பிடிக்காது என்பதால், சுயமாகத் தொழில் தொடங்கி சம்பாதிக்கிறார்கள். சிலர் அதில் நம்பிக்கைக்கு உரியவர்களை சேர்த்துக்கொண்டு கூட்டுத்தொழில் செய்கிறார்கள். நண்பர்கள் அல்லது மனைவி, உற்றார்- உறவினர்கள் ஆகியோருடன் தங்களால் இயன்ற அளவில் முதலீடுகளைப் போட்டு, ஏதாவது ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் படிப்படியாக முன்னேற்றமடையும் வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
 

god

இப்படி கூட்டுத்தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் ஜோதிடரீதியாக யாருக்கு அமைகிறது என பார்த்தால், ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவம் தொழில் ஸ்தானமாகும். 10-க்கு 10-ஆம் இடமான 7-ஆம் பாவம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று அமைகின்றபோது, கூட்டுத்தொழில் மூலமாக அனுகூலங்களை அடைய நேரிடுகிறது. 7-ஆம் அதிபதி 10-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம்பெற்று அமைந்தாலும், 10-ஆம் அதிபதி 7-ல் அமையப்பெற்றாலும் 7, 10-க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கூட்டுத்தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். 10-ஆம் வீட்டைவிட 7-ஆம் வீடு பலம்பெறுமேயானால் கூட்டுத்தொழில் சிறப்பாக அமையும்.
 

god

ஒருவருக்கு கூட்டுத்தொழில்மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும் யாருடன் சேர்ந்து தொழில் செய்தால் லாபம் சிறப்பாக இருக்கும் என பார்க்கும்போது, ஒரு ஆணின் ஜாதகத்தில் 7, 10-க்கு அதிபதிகள் இணைந்து சுக்கிரனும் வலுவாக அமைந்தால், திருமணத்திற்குப்பின் மனைவியுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஜாதகர் கற்ற கல்வியையே மனைவியும் கற்றிருந்தால் அந்தத் துறையில் இருவரும் சேர்ந்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதன்மூலம் லாபங்கள் ஏற்படும்.
 

god

7-ஆம் இடம் கூட்டுத்தொழில் ஸ்தானம் என்பதால், 7-ஆம் அதிபதி 3, 6, 8, 12-ல் மறைந்து பகை பெற்றோ, நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் இருக்குமேயானால், அவர் எந்தவொரு தொழிலையும் கூட்டுசேர்ந்து செய்வதைத் தவிர்த்து, தனித்துச் செயல்படுவதே மிகவும் நல்லது. 7-ஆம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபர் பார்வை மற்றும் நட்பு கிரகச் சேர்க்கையுடன் இருந்தால் கூட்டுத்தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டு. தொழில் ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10-ஆம் அதிபதியுடன் இணையும் பலம்பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கு ஏற்ற நபர்கள், தொழில்ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள்.
 

அதுபோல, 3, 11-க்கு அதிபதிகள் 10-ஆம் அதிபதியுடன் சேர்ந்து செவ்வாய் பலம் பெற்றிருந்தால், உடன்பிறந்த சகோதரர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், சந்திரன் பலம் பெற்றிருந்தால் சகோதரி அல்லது உறவுப் பெண்கள், தோழிகள் போன்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யும் வாய்ப்பு, சகோதரியைச் சார்ந்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு.

ஒருவர் என்னதான் கல்வி கற்றிருந்தாலும், அவர் ஜாதகத்தில் 5, 9-ஆம் அதிபதிகள் பலம்பெற்று 10-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்து, 5, 9-ஆம் வீடுகளில் பாவ கிரகங்கள் எதுவும் அமையாமல் இருந்து, தந்தைகாரகன் சூரியனும் பலமாக அமைந்து, சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையாமல் இருந்தால் தந்தை செய்த தொழிலையே ஜாதகர் தொடர்ந்து செய்யக்கூடிய அமைப்பு, தந்தைவழி மூதாதையர்கள் செய்த தொழிலைச் செய்யும் வாய்ப்பு, தந்தைவழி உறவுகளுடன் சேர்ந்து தொழில்செய்யும் அமைப்பு உண்டாகும்.
 

10-ஆம் அதிபதியுடன் 4-ஆம் அதிபதியும் சந்திரன், புதன் போன்ற கிரகங்களும் சேர்க்கைப் பெற்றிருந்தால் தாய்வழி உறவுகள் மற்றும் தாய்மாமனுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். 10-ஆம் அதிபதியுடன் 2-ஆம் அதிபதியும் இணைந்து பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்களுடன் கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். 10-ஆம் அதிபதியுடன் குரு, புதன் இணைந்து பலம்பெற்று வலுவாக அமைந்திருந்தால், நண்பர்களுடன் கூட்டுசேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி பலம்பெற்று அமைந்து சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு திறமையான வேலையாட்கள் கிடைக்கப்பெறுவதுடன், வேலையாட்களிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்து அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
 

ஒருவர் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி 5-ஆம் அதிபதியின் சேர்க்கைப்பெற்று, புத்திரகாகரன் குரு பகவானும் பலம் பெற்றிருந்தால் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் உதவியுடன் தொழிலில் பல சாதனைகள் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். கூட்டுத்தொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய ஜனன ஜாதகத்தை நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஒருவரது ஜாதகத்தை ஆராயும்போது ஏதாவது ஒரு ஸ்தானம் பலமாக இருந்தால் அந்த ஸ்தானத்தின் காரகத்துவத்திற்கு ஏற்ற நபர் ஜாதகருக்கு கடைசிவரை நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார். அப்படி எந்த ஸ்தானம், கிரகம் பலம்பெற்று அமைந்திருக்கிறதோ, அந்த ஸ்தானம் மற்றும் கிரகத்தின் காரகத்துவம் பெற்ற நபரைக் கூட்டாகச் சேர்த்து தொழில் செய்யும்போது நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.
 

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத்தொழில் செய்வதைத் தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவது நல்லது. அப்படியே செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை கூட்டாகச் சேர்த்துக்கொள்வது நல்லது.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.