Skip to main content

வெற்றிக்கனியை எட்டிப்பறிக்க என்ன பரிகாரம்?

Published on 06/02/2021 | Edited on 09/02/2021

"முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்'’ என்பது திருக்குறள். முயற்சி ஒருவருக்கு செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவருக்கு வறுமை யைச் சேர்த்துவிடும்.

இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளிலும் மனிதப் பிறப்பே உயர்வான, உன்னத மான பிறப்பாகக் கருத்தப்படுகிறது. சிந்தித்து செயல்படும் திறனாற்றல் இருப்பதால்தான் மனிதன் உன்னத நிலையை அடைகிறான்.

பிற உயிர்களுக்குப் பகுத்தாயும் தன்மை கிடையாது. மனிதன் ஆன்ம வலிமையால் நினைத்ததை எளிதில் அடையும் சக்தியைப் பெற்றிருக்கிறான். தாயின் வயிற்றில் கரு உருவாகும் போதே, அவனுடைய வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. என்றாலும், மனிதன் வாழ்வில் உன்னத நிலையை அடைய, பரந்து விரிந்த பிரபஞ் சத்தின் அனைத்து நல்வினைகளையும் நுகர, முயற்சி என்பது மிகமுக்கியம்.

மறைந்த நமது குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்,“ "ஒருவரது பிறப்பு சம்பவமாக இருக்கலாம்.

ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார். பிறப்புக்குக் காரணம் கர்மாவாக இருக்கலாம். இறக்கும் போது வரலாற்றில் இடம்பெற முயற்சி செய்யவேண்டும்.

வாழ்வில் வெற்றிபெற உழைப்பு அவசியம். ஆனால், வாழ்நாள் முழுவதும் வெற்றிபெற விடாமுயற்சி மிகமிக அவசியம். அறிவியல் மிகமிக வளர்ந்தாலும், தன்னையுணர்ந்து வாழ்வில் உயரும் முயற்சியில் மனிதர்கள் பின்தங்கியே இருக்கிறார்கள். கிடைப்பதை உண்டு, வாழ்நாள் முழுவதும் முன்னேற்றத்திற்கு எந்த முயற்சியும் செய்யாமல், வாழ்வை முடித்துக்கொள்ளும் மனிதர்கள்தான் அதிகம்.

ஜோதிடரீதியாக, ஒருவர் விடாமுயற்சியை வீரியமாகக் கொண்டவரா? விரல்நீட்டும் தூரத்தைக்கூட தொடமுடியாத வரா? போகத்தில் மூழ்கி வாழ்வின் ஒருபாகத்தைப் பறிகொடுப் பவரா? கண்ணியம், கட்டுப் பாட்டுடன் வாழ்ந்து சாதனையாளராக வலம்வருவாரா என்பது போன்றவற்றை ஒரு ஜாதகத்தின் 3-ஆமிடம், 3-ஆம் அதிபதியின் நிலையைக்கொண்டு அறியமுடியும்.

ww


3-ஆமிடம் உபஜெய ஸ்தானம். ஒருவருடைய வெற்றிக்கு உதவி செய்யும் ஸ்தானம். சிலருடைய வெற்றிக்கு அவர்களுடைய முயற்சியே பிரதானமாக இருக்கும்.

விடாமுயற்சியால் தன்னம்பிக்கை யுடன் வெற்றிபெற்றவர்கள் பலரின் ஜாதகத்தில் 3-ஆமிடம் மிக வலிமையாக இருக்கும். ஒரு ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி, மூன்றாமிடத்தில் நின்ற கிரகம், பார்த்த கிரகத்தைக் கொண்டு ஒரு மனிதன் தன் முன்னேற்றத்திற்குச் செய்யும் முயற்சியைத் தெளிவாகக் கூறமுடியும்.

மூன்றாம் அதிபதி- 1-ல் இருந்தால், முயற்சியை மூலதனமாகக் கொண்டு முன்னேறுபவர். சுய வருமானம், நேர்மை, திறமை, இளைய சகோதர விருத்தி, மங்காத புகழ் உடையவர். இயல், இசை, நாடகப் பிரியர். வேலையாட்கள் யோகம் ஏற்படும்.

2-ல் இருந்தால், முயற்சி, திறமை இல்லாதவர். உழைக்காமல் மனைவி, உடன்பிறந்த வர்களின் உழைப்பில் வாழ விரும்புபவர். நோய்த் தாக்கம் மிகுதியாக இருக்கும்.

3-ல் இருந்தால், முயற்சியால்- உழைப்பால் உயர்ந்த, உயர விரும்பும் உத்தமர். தன்னைச் சார்ந்தவர்களும் உயர உதவுபவர். இன்பம், தைரியம், மகிழ்ச்சி, கலையார்வம் மிகுந்தவர். பலசாலி. சாஸ்திர ஞானம் மிகுந்தவர்.

4-ல் இருந்தால், முயற்சியால் இன்பம், செல்வம், அறிவு நிரம்பப் பெற்றவர். தாய்வழி, மனைவி ஆதரவுண்டு.

5-ல் இருந்தால், பிறக்கும்போது சாதாரண மனிதராக இருப்பார். இறக்கும்போது சாதனை மனிதராக சரித்திரத்தில் இடம்பிடிப்பார். சமுதா யத்தால் மதிக்கக்கூடிய நபராக இருப்பார். நல்ல குடும்ப வாழ்க்கை, குழந்தைகளால் ஆதாயம் உண்டு.

6-ல் இருந்தால், முயற்சியற்றவர். உறவினர்களின் ஆதரவற்றவர். கடன், வியாதி, நோய்த் தாக்கம் மிகுந்தவர். உறவினர்களின் வெறுப்பை சம்பாதிப்பவர். அடிமைத்தொழில் செய்யநேரும்.

7-ல் இருந்தால், மனைவி வந்தபிறகு வெற்றிவாய்ப்புகள் தேடிவரும்.

8-ல் இருந்தால், முயற்சிகள் தோல்வி தரும்.

சகோதரப் பகை, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை, கடன், அவமானம் ஏற்படும்.

9-ல் இருந்தால், தைரியம், வீரம், பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வம்சாவளியாக புதிய முயற்சிகளில் ஈடுபாடு மிக்கவர். வாரிசு களாலும், மனைவியாலும் அதிர்ஷ்டம் தேடிவரும்.

10-ல் இருந்தால், புதுப்புதுத் தொழில் முயற்சியால் சுயவருமானத்தில் செல்வம்சேரும். சுயதொழில் ஆர்வம் மிகுந்தவர்.

11-ல் இருந்தால், அண்ணன், தம்பி என குடும்பமே முன்னேற்றத்திற்காக முயற்சி செய்வார்கள். கூட்டுக்குடும்பமாக இருந்து தொழில்முயற்சியில் வெற்றி பெற்றவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பிருக்கும்.

12-ல் இருந்தால் முயற்சியில் தோல்வி, சகோதர சச்சரவு, சொத்து விரயம், தூக்க மின்மை ஏற்படும்.

3-ல் அதிக கிரகங்கள் இருந்தால், ஜாதகருக்கு முயற்சியால் வளமான வாழ்வு நிச்சயம். சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள்.

3-ல் லக்னரீதியான பாவிகள் இருப்பின், முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சி உண்டு. அதேநேரம் ஆரோக்கியக் குறைபாடுகள் இருக்கும். பொருளாதாரம் சேரும்பொது சில கெட்டபழக்கங்கள் அல்லது உடல்நிலையைப் பாதுகாக்க நேரமின்மை போன்றவற்றால் உடல்நலம் பாதிக்கும்.

3-ஆமிடத்தில் சுபர்கள் இருந்தால், சுமாரான பொருளாதார வளர்ச்சி. அதேநேரம் நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும். பிரச்சினைகளுக்குத் தீர்வு, உதவிகள் கிடைக்கும். ஆகவே, எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கமுடியும்.

3, 9-ஆமிடங்களோடு சம்பந்தம் பெறும் ராகு- கேது, சனி ஆகியவை இயற்கையாகவே ஒருவருடைய முயற்சிக்குத் தடை ஏற்படுத்தும் கிரகங்கள்.

3-ஆமிடத்திற்கு வக்ரம், அஸ்தமனம், நீசம் பெற்ற கிரகங்கள் சம்பந்தம் பெற்றால், வாழ்நாள் முழுவதும் சிறிய முயற்சிகூட பலிதமாகாமல், அடிப்படைத் தேவைக்குக்கூட போராடும் நிலை இருக்கும்.

‘"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்'’ என்ற பழமொழியை மெய்ப்பித்து, அனைத்து முயற்சிகளிலும் வெற்றிக்கனியை எட்டிப் பறிக்க, விதியை மதியால் வெல்ல கடைப்பிடிக்க வேண்டிய பரிகாரங்கள்:

தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் உடம்பைத் தூய்மை செய்து கொண்டு தீபமேற்றவேண்டும். தீபமேற்றும் போது, உங்களின் அனைத்து முயற்சிகளும் நிறைவேற தீபத்திடம் பிரார்த்திக்க வேண்டும்.

வீட்டின் வடகிழக்கில் ஒரு மண் பாத்திரத்தில் நீர்விட்டு, மூன்று கைப்பிடியளவு உப்பைப் போட்டுவைக்க வேண்டும். தினமும் தண்ணீரை மாற்றி உப்பு போடவேண்டும்.

உங்கள் வீட்டின் அருகிலுள்ள காவல் தெய்வத்தை வழிபடவேண்டும்.

செல்: 98652 20406