Skip to main content

தலைகீழாக அருளும் அனுமன் ஆலயம்!

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Ulte Hanuman Mandir

 

உல்டே அனுமன் மந்திர் என்னும் ஆலயம் மத்தியப் பிரதேசத்தில் இருக்கிறது. இந்தோருக்கு அருகிலுள்ள சாவரே என்னும் ஊரிலிருக்கும் புகழ்பெற்ற ஆஞ்சனேயர் ஆலயம் இது. இந்தியாவின் தர்ம நகரமான உஜ்ஜயினிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. சிவப்பு நிறக் கோவணம், கையில் கதாயுதம் தாங்கிய கோலத்துடன் காட்சியளிக்கிறார் ஆஞ்சனேயர். இராம பக்தனான ஆஞ்சனேயர், அகலிகையின் நகரமான இந்தோரின் நான்கு திசைகளிலும் இருக்கிறார். இங்கு அவருக்கு பல ஆலயங்கள் உள்ளன. மக்கள் அவரை ரண விஜய், ரண ஜித் என்று மதிப்புடன் கூறுகிறார்கள். ‘போரில் வெற்றி தரக்கூடியவர்' என்று இதற்குப் பொருள்.

 

பணிவான தோற்றத்துடன் காட்சியளிக்கும் அவரை ராம பக்தன், பஜ்ரங்க பலிலி, மாருதி நந்தன் என்று பல பெயர்களிலும் மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயம் ‘சாவரே' என்று அழைக்கப்படுவதால், ஊரின் பெயரும் ‘சாவரே' என்றாகிவிட்டது. இராமாயண காலத்திலிலிருந்தே இந்த ஆலயம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆலய கர்ப்பக் கிரகத்தில் ஆஞ்சனேயர் தலைகீழாக செந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்டுக் காட்சியளிக்கிறார். இங்கு அனுமன் பக்தர்கள் ஏராளமாக வந்து வழிபடுகிறார்கள். தங்கள் சிரமங்களைக் கட்டாயம் அனுமன் போக்குவார் என்ற முழுமையான நம்பிக்கையுடனும் பக்திப் பெருக்குடனும் இங்கு வருகின்றனர்.

 

இந்த ஆலயத்தைப் பற்றிய கதையைத் தெரிந்துகொள்வோமா?

 

இராமாயண காலத்தில் இராமனுக்கும் இராவணனுக்குமிடையே போர் நடக்கிறது. இராவணன் தோற்கக்கூடிய நிலை வந்ததும், தன் அண்ணன் அஹிராவணனை அழைத்து தன் கஷ்டத்தை வெளியிடுகிறான். அதைத் தொடர்ந்து அஹிராவணன், ராமனின் போர்ப்படைக்குள் நுழைகிறான். அங்கிருந்துகொண்டு ஒரு சதிச் செயலில் ஈடுபடுகிறான். அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது தன்னிடமிருக்கும் மாய சக்தியைக் கொண்டு இராமனையும் லட்சுமணனையும் மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களைக் கடத்திச் சென்று பாதாளத்தில் சிறை வைக்கிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இராமனுடைய வானர சேனையில் ஒரு பெரிய பதைதைப்பு உண்டாகிறது. அனைவரும் நடுக்கத்துடன் இருக்கின்றனர்.

 

இராமனையும் லட்சுமணனையும் அழைத்து வருவதாக வாக்களித்த அனுமன், அங்கிருந்து பாதாளத்திற்குப் புறப்படுகிறார். பாதாளத்தில் அஹிராவணனுடன் போரிட்டு அழித்துவிட்டு, இராம - லட்சுமணனுடன் திரும்பி வருகிறார். பாதாளத்திற்குச் செல்லும்போது, அனுமனின் தலை பூமியைப் பார்த்தவாறும், கால்கள் ஆகாயத்தைப் பார்த்தவாறும் இருந்தன. அவ்வாறு அனுமன் பாதாளத்தில் தலைகீழாக இறங்கிய இடம் இந்தக் கோவில் அமைந்திருக்கும் பகுதிதான் என்கிறார்கள். அதனால்தான் இங்கிருக்கும் ஆஞ்சனேயருக்கு ‘உல்டே அனுமன்' என்று பெயர். அதாவது தலைகீழாக இருப்பவர். இந்த ஆலயத்தில் இராமன், லட்சுமணன், சீதை, சிவன், பார்வதி ஆகியோருக்கும் சிலைகள் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு விசேஷமாக செந்தூரம் கலந்த எண்ணெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

 

இந்த ஆலயத்திற்கு மூன்று அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபடுபவர்களுக்கு கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடுமென்பது பொதுவான நம்பிக்கை. இங்கு பல ஆன்மிகப் பெரியவர்களின் சமாதிகள் இருக்கின்றன. இந்த ஆலயத்தைப் பற்றிய 1,200  வருடங்களுக்கான வரலாறு தற்பொழுது உள்ளது.

 

ஆலய வளாகத்திற்குள் அரசமரம், வேப்பமரம், பாரிஜாத மரம், துளசி, ஆலமரம் ஆகியவை இருக்கின்றன. அங்கிருக்கும் இரு பாரிஜாத மரங்கள் பலநூறு வருடங்களாக இருக்கின்றன. அந்த மரங்களில் அனுமன் வசிக்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த மரங்களில் ஏராளமான கிளிகள் இருக்கின்றன. அவற்றை ஆன்மிகத்தின் சின்னங்களாக அனைவரும் நினைக்கின்றனர். இராம பக்தரான துளசிதாசருக்கு, அனுமன் கிளி வடிவத்தில் வந்து இராமரைக் காட்டினார் என்பது வரலாறு.

 

இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் சென்னையிலிருந்து உஜ்ஜயினிக்கு 1,663 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். அங்கிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது. இந்தோரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரம்தான். இந்தோரில் விமான நிலையம் உள்ளது.

 

 

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.