Ulte Hanuman Mandir

உல்டே அனுமன் மந்திர் என்னும் ஆலயம் மத்தியப் பிரதேசத்தில் இருக்கிறது. இந்தோருக்கு அருகிலுள்ள சாவரே என்னும் ஊரிலிருக்கும் புகழ்பெற்ற ஆஞ்சனேயர் ஆலயம் இது. இந்தியாவின் தர்ம நகரமான உஜ்ஜயினிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. சிவப்பு நிறக் கோவணம், கையில் கதாயுதம் தாங்கிய கோலத்துடன் காட்சியளிக்கிறார் ஆஞ்சனேயர். இராம பக்தனான ஆஞ்சனேயர், அகலிகையின் நகரமான இந்தோரின் நான்கு திசைகளிலும் இருக்கிறார். இங்கு அவருக்கு பல ஆலயங்கள் உள்ளன. மக்கள் அவரை ரண விஜய், ரண ஜித் என்று மதிப்புடன் கூறுகிறார்கள். ‘போரில் வெற்றி தரக்கூடியவர்' என்று இதற்குப் பொருள்.

Advertisment

பணிவான தோற்றத்துடன் காட்சியளிக்கும் அவரை ராம பக்தன், பஜ்ரங்க பலிலி, மாருதி நந்தன் என்று பல பெயர்களிலும் மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயம் ‘சாவரே' என்று அழைக்கப்படுவதால், ஊரின் பெயரும் ‘சாவரே' என்றாகிவிட்டது. இராமாயண காலத்திலிலிருந்தே இந்த ஆலயம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆலய கர்ப்பக் கிரகத்தில் ஆஞ்சனேயர்தலைகீழாகசெந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்டுக் காட்சியளிக்கிறார். இங்கு அனுமன் பக்தர்கள் ஏராளமாக வந்து வழிபடுகிறார்கள். தங்கள் சிரமங்களைக் கட்டாயம் அனுமன் போக்குவார் என்ற முழுமையான நம்பிக்கையுடனும்பக்திப் பெருக்குடனும் இங்கு வருகின்றனர்.

Advertisment

இந்த ஆலயத்தைப் பற்றிய கதையைத் தெரிந்துகொள்வோமா?

இராமாயண காலத்தில் இராமனுக்கும் இராவணனுக்குமிடையே போர் நடக்கிறது. இராவணன் தோற்கக்கூடிய நிலை வந்ததும், தன் அண்ணன் அஹிராவணனை அழைத்து தன் கஷ்டத்தை வெளியிடுகிறான். அதைத் தொடர்ந்து அஹிராவணன், ராமனின் போர்ப்படைக்குள் நுழைகிறான். அங்கிருந்துகொண்டு ஒரு சதிச் செயலில் ஈடுபடுகிறான். அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது தன்னிடமிருக்கும் மாய சக்தியைக் கொண்டு இராமனையும் லட்சுமணனையும் மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களைக் கடத்திச் சென்று பாதாளத்தில் சிறை வைக்கிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இராமனுடைய வானர சேனையில் ஒரு பெரிய பதைதைப்பு உண்டாகிறது. அனைவரும் நடுக்கத்துடன் இருக்கின்றனர்.

இராமனையும் லட்சுமணனையும் அழைத்து வருவதாக வாக்களித்த அனுமன், அங்கிருந்து பாதாளத்திற்குப் புறப்படுகிறார். பாதாளத்தில் அஹிராவணனுடன் போரிட்டு அழித்துவிட்டு, இராம - லட்சுமணனுடன் திரும்பி வருகிறார். பாதாளத்திற்குச் செல்லும்போது, அனுமனின் தலை பூமியைப் பார்த்தவாறும், கால்கள் ஆகாயத்தைப் பார்த்தவாறும் இருந்தன. அவ்வாறு அனுமன் பாதாளத்தில் தலைகீழாக இறங்கிய இடம் இந்தக் கோவில் அமைந்திருக்கும் பகுதிதான் என்கிறார்கள். அதனால்தான் இங்கிருக்கும் ஆஞ்சனேயருக்கு ‘உல்டே அனுமன்' என்று பெயர். அதாவது தலைகீழாக இருப்பவர். இந்த ஆலயத்தில் இராமன், லட்சுமணன், சீதை, சிவன், பார்வதி ஆகியோருக்கும் சிலைகள் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு விசேஷமாக செந்தூரம் கலந்த எண்ணெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு மூன்று அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபடுபவர்களுக்கு கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடுமென்பது பொதுவான நம்பிக்கை. இங்கு பல ஆன்மிகப் பெரியவர்களின் சமாதிகள் இருக்கின்றன. இந்த ஆலயத்தைப் பற்றிய 1,200 வருடங்களுக்கான வரலாறு தற்பொழுது உள்ளது.

ஆலய வளாகத்திற்குள் அரசமரம், வேப்பமரம், பாரிஜாத மரம், துளசி, ஆலமரம் ஆகியவை இருக்கின்றன. அங்கிருக்கும் இரு பாரிஜாத மரங்கள் பலநூறு வருடங்களாக இருக்கின்றன. அந்த மரங்களில் அனுமன் வசிக்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த மரங்களில் ஏராளமான கிளிகள் இருக்கின்றன. அவற்றை ஆன்மிகத்தின் சின்னங்களாக அனைவரும் நினைக்கின்றனர். இராம பக்தரான துளசிதாசருக்கு, அனுமன் கிளி வடிவத்தில் வந்து இராமரைக் காட்டினார் என்பது வரலாறு.

இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் சென்னையிலிருந்து உஜ்ஜயினிக்கு 1,663 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். அங்கிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது. இந்தோரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரம்தான். இந்தோரில் விமான நிலையம் உள்ளது.