Skip to main content

சகலமும் வழங்கும் திங்களூர் சந்திரன்! 

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

 Tingaluru Chandran provides everything!

 

சந்திரன் மகா விஷ்ணுவின் இதயத்திலிருந்து பிறந்தவர் என்றும், அமுதம் பெறுவதற்கு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது, கடலிலிருந்து லட்சுமிக்கு முன்பே தோன்றியவர் என்றும், அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் என்றும் புராணங்களில் உள்ளன.

 

தட்சன் தனது 27 மகள்களை (அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களாக உள்ளவர்கள்) சந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அவர்களுள் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் அதிக காதல் வயப்பட்டிருந்தான். இதனால் வருத்தமுற்ற மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். கோபமுற்ற தட்சன் சந்திரனை ‘சயரோக நோய் உண்டாகி தேய்பிறையாகக் கடவது' என சாபமிட்டான். இதனால் சந்திரனது உடல் தேய்ந்துகொண்டே போனது. சாபவிமோசனம் பெற சிவபெருமானை வேண்டித் தவமிருக்குமாறு தேவர்கள் ஆலோசனை சொல்ல, சந்திரன் சிவனை வேண்டிக் கடுந்தவமிருந்தான். சிவபெருமான், ‘மாதத்தில் பாதி நாள் தேய்ந்தும், அடுத்த பாதி நாள் வளர்ந்தும் வருவாய்' என்று வரமளித்தார். அதனால்தான் வளர்பிறை, தேய்பிறை உண்டாகின்றன என்று புராணம் கூறுகிறது.

 

சந்திரன் சிவபெருமானது இடது கண்ணாகக் கருதப்படுகிறார். சிவனின் தலையிலும் அலங்கரிக்கிறார். இப்படிப்பட்ட சந்திரனுக்கு பல பெயர்கள் உள்ளன. அமுதத்தை உண்டதால் சுதாகரன், குமுத மலரை விரும்பியதால் குமுதப் பிரியன், வெண்மேனியன் என்பதால் சசி, சசாங்கன், சசிதரன், ரோகிணியின் நாயகன் என்பதால் ரோகிணிபதி, பனியை உண்டாக்குவதால் ஷிமகரன், அந்தணர்களுக்கு தலைமை ஏற்றதால் விதராஜன், அத்திரி முனிவரின் மகன் என்பதால் ஆத்திரேயன், திருமகளோடு பாற்கடலில் தோன்றியதால் ரமாப்ரதா, 27 நட்சத்திரங்களை மனைவியாகக் கொண்டதால் கலாநிதி, நட்சத்திர நாயகன், உடுபதி, நிலா, அம்புலி, இந்து, மதி எனப் பல பெயர்களைப் பெற்றுள்ளார் சந்திரன்.

 

மேலும் சந்திரன் வளர்பிறையில் சௌமியன்; தேய்பிறையில் குரூரன். அன்பு, பாசம், தாய்மை, கவிதை, கற்பனை, ஆன்மிகம், காவியம், கலைகள், நீச்சல், விவசாயம், நீதி, நேர்மை, சுகபோகம், புகழ் போன்ற அனைத்தும் சந்திரனால் கிடைப்பவையே. இவரின் ஆதிக்கத்தினால் மனித உடலில் மூளை, வயிறு, மார்பு, நீர் தொடர்பான நோய்களும் ஏற்படும். மேலும் உணவுகள், தேன், மது, உறக்கம், குதிரை, மாறுகண், காசநோய், பெண்களின் ஆடைகள், நறுமலர்கள் ஆகியவற்றுக்கும் இவரே காரகன். ‘சந்திரன் நிலை காரணமாக மேற்சொன்னவற்றில் இடையூறுகள், தடைகள் காணப்பட்டால் அவற்றிலிருந்து நிவர்த்தி பெற பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சந்திரனை வழிபடலாம். வெண்ணிற ஆடைகள் அணிவித்து அலரி, அல்லி மலர்களால் அர்ச்சித்து தயிர் சாதம், நெய் பாயசம், சுவையான இனிப்புகள் படைத்து சந்திரனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமைகளில் படையலிட்டு அபிஷேக ஆராதனை செய்தால் சந்திர தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள். உடல் சம்பந்தப்பட்ட பல தொந்தரவுகளுக்கு இவரை வணங்கினால் நிவர்த்தி பெறலாம்'' என்கிறார்கள். 

 

 Tingaluru Chandran provides everything!

 

நவகிரக கோவில்களில் இரண்டாவதாக அமையப்பெற்றுள்ளது திங்களூர் சந்திரபகவான் கோவில். இவ்வூரில்தான் திருநாவுக்கரசர் மீது பெரும் பக்திகொண்ட அப்பூதியடிகள் வாழ்ந்தார். அவர் நடத்திய தர்மசத்திரம், கல்விச் சாலைகள் பற்றிக் கேள்வியுற்ற நாவுக்கரசர் இவ்வூருக்கு வந்து அப்பூதியடிகளை சந்தித்து பெருமிதம் கொண்டார். அப்போது நாவுக்கரசருக்கு விருந்து படைக்க தனது மகனை தோட்டத்திற்கு வாழையிலை பறிக்க அப்பூதியடிகள் அனுப்ப, அவன் பாம்பு கடித்து இறந்து போனான். அதைச் சொன்னால் நாவுக்கரசர் விருந்துண்ணாமல் போய்விடுவாரோ என்று, மகனின் இறந்த உடலை மறைத்துவிட்டு நாவுக்கரசருக்கு விருந்து படைத்தனர். ஆனால் அவரோ, ‘உங்கள் மகனும் என்னோடு அமர்ந்து சாப்பிட்டால்தான் நானும் சாப்பிடுவேன்' என வலியுறுத்தியதும், தங்கள் மகன் பாம்பு தீண்டி இறந்துபோன உண்மையைக் கூறினர்.

 

அதைக் கேட்ட திருநாவுக்கரசு சுவாமிகள் வேதனையுற்றதோடு, அவனது உடலை எடுத்துச்சென்று சிவாலயத்தில் கிடத்தி இறைவனை வேண்டிப் பாடினார். சிறுவனைக் கடித்த அந்த பாம்பே அங்கு வந்து சிறுவனின் உடல் ஏறிய விஷத்தை உறிஞ்ச, சிறுவன் உயிர்பிழைத்தெழுந்தான். இவ்வாலயத்தில் நாவுக்கரசர், அப்பூதியடிகள், அவர் மனைவி, மகன் ஆகிய நால்வருக்கும் சிலைகள் உள்ளன சாட்சியாக. இப்படி நாவுக்கரசரால் பாடல் பெற்ற திங்களூரில் இறைவன் கைலாசநாதராகவும், உமையவள் பெரியநாயகியாகவும் காட்சி தருகிறார்கள். இங்கு சந்திர பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. பௌர்ணமி, அமாவாசையன்று வரும் திங்கட்கிழமைகளில் இவரை அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். இதனால் மிகுந்த பலனுண்டு என்கிறார்கள் பக்தர்கள்.

 

அமைவிடம்: திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கிழக்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது ஆலயம். அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. 

 

 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.