Skip to main content

புது வருடம் நலம் புரிய முருகனடி தொழுவோம்!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

காலம் ஓடுவதே தெரியவில்லை. இப்போதுதான் ஆண்டு பிறந்ததுபோல இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த ஆண்டு வந்துவிடுகிறது. இதைப்போலவே சென்ற தமிழ்ப் புத்தாண்டு பிறந்துமுடிந்து, அடுத்த புத்தாண்டு வந்துவிட்டது. தமிழ் ஆண்டுகள் வரிசையில் 32-ஆவது இடத்திலுள்ள "விளம்பி' ஆண்டு இவ்வருடம் சித்திரை 1-ஆம் தேதி பிறக்கிறது. பொதுவாக தமிழ்ப் புத்தாண்டு அன்று மக்கள் அதிகாலையில் நீராடி, நெற்றித் திலகமிட்டு, புத்தாடை அணிந்து, அவரவர் வீட்டிலுள்ள தெய்வத்தை வணங்கி, பின்பு சுவை மிகுந்த உணவுகளை உண்டு, மாலையில் ஏதாவது ஒரு கோவிலில் அல்லது பொது இடத்தில் புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுவதைக் கேட்டு அவ்வாண்டு நிலவரத்தைத் தெரிந்துகொள்வார்கள். இது காலங்காலமாகவே நடந்துவருகிறது.

 

temple



ஞானம், வைராக்கியம், வலிமை, புகழ், செல்வம், தெய்வசக்தி என்ற ஆறுமுகங்களையும் ஒருங்கே கொண்டவன் முருகப்பெருமான். அவன் ஆறுமுகன். அவன் அருள் இருந்தால் நமக்கு நடப்பதெல்லாம் நன்மையே. முருகன் தேவர்குலத்திற்குத் தேவன் என்றால், நம் தமிழர் குலத்துக்குத் தலைவன். தமிழை வளர்த்தவன். தமிழ்க் கடவுள். தமிழ்நாட்டில் பிறப்பதற்கும், தமிழ்மொழி கற்பதற்கும், பேசி மகிழ்வதற்கும் தவம் செய்திருக்க வேண்டும். கோடி புண்ணியம் செய்தவனே தமிழனாகப் பிறக்கிறான். காரணம், எந்த மொழிக்கும் கடவுள் என்ற ஒன்றில்லை. ஆனால் தமிழ்மொழிக்கு மட்டும் "முருகன்' என்னும் கடவுள் மும்மூர்த்திகளாலும் போற்றப்படுகிறான். வேதத்திற்கு அர்த்தம் சொன்னவன் முருகன்.

 

temple



பாண்டிய நாட்டுப் புலவரான நக்கீரரை "திருமுருகாற்றுப்படை' என்ற நூலைப்பாட வைத்தவன் தமிழ்முருகன். அருணகிரியாரின் நாவில் வேலால் எழுதி "திருப்புகழ்' என்னும் அற்புதமான சந்தங்கள் நிறைந்த பாடலை எழுத வைத்தவன் ஆறுமுகன். இதேபோல குமரகுருபரர் இயற்றிய "கந்தர்கலிவெண்பா', "பிள்ளைத் தமிழ்', கச்சியப்ப சிவாச்சாரியாரின் "கந்தபுராணம்', பாம்பன் ஸ்வாமிகளின் "சண்முக கவசம்', தேவராய சுவாமிகள் இயற்றிய "கந்த சஷ்டிக் கவசம்', ஔவையாரின் முருகன் மீதான பாடல்கள் என்று எண்ணற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடவைத்தவன் முருகன். இவையெல்லாம் முருகப்பெருமானைத் தமிழால் போற்றி வணங்கக்கூடிய அருமையான, அற்புதமான பிரார்த்தனை நூல்களாகும்.

 

temple



எனவே தமிழ் வருடப்பிறப்பன்று முருகனை வழிபடவேண்டும். அந்த நாளில் குடும்பத்தலைவி அதிகாலையிலேயே துயிலெழுந்து நீராடி, பூச்சூடி பொட்டிட்டு புத்தாடை உடுத்தி, வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகன் படத்தின்முன்பு குத்துவிளக்கேற்றி, படத்திற்குப் பூமாலை சூட்டி, சிவந்த மலர்களால் அர்ச்சித்து, பஞ்சாமிர்தம் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி முருகனை வணங்கி பூஜையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அப்போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நீராடி தூய உடை உடுத்திப் பூஜையில் கலந்துகொண்டு முருகனை வணங்கவேண்டும். இந்த முருக வணக்கம் சித்திரை வருடப்பிறப்போடு இல்லாமல், வருடம் முழுவதும் வரும் திருமுருகனின் சிறப்பு நாட்களில் கொண்டாட வேண்டும்.

சித்திரை வருடப்பிறப்பன்று முருகனை வழிபடுவது மட்டுமின்றி, நம் தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்களையும் வழிபடவேண்டும். திரு. உ.வே. சாமிநாத அய்யர்; மகாகவி சுப்ரமண்ய பாரதியார், மு. வரதராசனார் போன்ற தமிழறிஞர்களையும், இராமாயண காவியம் பாடிய கம்பர், தெய்வ நூலான திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர், சிவபக்தர்களான தேவாரம் பாடிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருமால் அடியார்களான ஆழ்வார்கள், தமிழ்த் தொண்டாற்றிய ஔவையார், முருக பக்தர்களான நக்கீரர், குமரகுருபர ஸ்வாமிகள், தேவராய சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் போன்ற மகான்களையும் நினைவுகூர்ந்து வழிபடவேண்டும். அவர்கள் இயற்றிய பாடல்களைப் பாடி முருகனின் அருள்பெறவேண்டும். அன்று மாலை அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச்சென்று, வள்ளி- தெய்வானையுடனான முருகனை வழிபட்டு வரவேண்டும்.

அன்று மாலையில் ஏதாவது ஒரு கோவில் அல்லது பொது இடத்தில், ஊர்ப்பிரமுகர் ஒருவராலோ அல்லது கோவில் அர்ச்சக ராலோ படிக்கப்படும் பஞ்சாங்கத்தைக் கேட்கவேண்டும். தற்போது பிறக்கவுள்ளது "விளம்பி' வருடமென்பதால், இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்பதை பஞ்சாங்கம் படிப்பவர் எடுத்துரைக்க, அதை ஊர்மக்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். இதை "பஞ்சாங்கப்படனம்' என்று கூறுவார்கள். "விளம்பி' வருடப் பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, தை, மாசி மாதங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு. வைகாசி, ஆடி, கார்த்திகையில் மிதமான மழை இருக்கும். இதர மாதங்களில் மழை பெய்தாலும் பெய்யலாம்; பெய்யாமலும் போகலாம். விவசாயம் முன்பைவிட கொஞ்சம் மேலோங்கும். நீர்நிலைகள் வறட்சியைச் சந்திக்கும். இருந்தாலும் மக்கள் நலமாகவே இருப்பார்கள். இருநாடுகளுக்கிடையே நட்புறவுகள் ஓங்கும்.

இவ்வருட ராஜாவானவர் சூரியன் என்பதால், நாடு பிரகாசமாக நலிவின்றி இருக்கும். மந்திரி சனீஸ்வரன் என்பதால் கேடுகள், கொள்ளைகள், திருட்டுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சேனாதிபதி சுக்கிரன் என்பதால் மணவாழ்க்கைப் பிரச்சினைகள், விவாகரத்து போன்றவை அவ்வப்போது ஏற்பட்டு சில நன்மையிலும், சில கெடுதலிலும் முடியும். இவ்வருட தேவதை உமா மகேஸ்வரி என்பதால் மக்களுக்கு நன்மை- தீமை இரண்டும் மாறிமாறி வரும். கலி பிறந்து 5,118 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டதால், கலிமகாத்மியத்தின்படி கல்வி, ஞானம் போன்றவை குறையும். தெய்வத்தின் மீதான பக்தி அதிக மிருப்பதுபோல தோன்றினாலும், நிந்தனையும் அதிகமாக இருக்கும். சாதுக்கள் அலட் சியப்படுத்தப்படுவார்கள். காமம், குரோதம், பொறாமை போன்றவை அதிகரிக்கும்.

நாட்டிற்குப் பொதுவாக நற்பலன்களே காணப்படும். தெய்வசக்தியால் தீமைகள் அழிக்கப்படும். இறைவன் பெயரை உச்சரித்து நற்பேறு பெறலாம். "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே- ஹரேகிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்ற மகாமந்திரத்தை ஜெபித்து நன்மை பல பெறலாம். அறுபது படிக்கட்டுகளைக் கொண்ட சுவாமிமலைத் தலம் அறுபது தமிழ் வருடங்களைக் குறிக்கிறது. பன்னிரண்டு படிக்கட்டுகளைக்கொண்ட திருக்காவலூர் முருகன் தலம் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கிறது. 365 படிக்கட்டுக்களைக்கொண்ட திருத்தணிகைத்தலம் ஒரு வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கிறது. எனவே தமிழ்வருடம் என்பது முழுக்க முழுக்க முருகனுக்கே உரியது என்பதால், வருடப்பிறப்பன்று முருகனை வழிபட்டு முழு அருள் பெறுவோம்.
 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.